Last Updated : 12 May, 2017 12:17 PM

 

Published : 12 May 2017 12:17 PM
Last Updated : 12 May 2017 12:17 PM

மதிப்பெண்கள் வெறும் எண்கள் மட்டுமே

சிறுவயது முதல் நமக்கு ஒன்று சொல்லப்பட்டு வருகிறது. மதிப்பெண்கள்தான் நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. மதிப்பெண்களே நமக்கான அங்கீகாரத்தை பிறரிடம் பெற்றுத் தருகிறது. நமது பள்ளி பொதுத் தேர்வுகளில் தொடங்கிய இந்த பயம் அடுத்தடுத்து நாம் சந்திக்கும் ஒவ்வொரு தேர்வு முடிவுகளை ஒருவித பயத்துடனேயே நம்மை அணுக வைக்கிறது.

உண்மையில் மதிப்பெண்களை என்பவை நம் பெற்றோர், நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தினரிடையே நம்மைப் பற்றிய மதிப்பீடுகளை உயர்த்துவதற்காக நாம் ஓடும் மாரத்தான்.

அதாவது நம்மை பற்றிய மதிப்பீடுகளை நாம் தருவதில்லை, நம்மைப் பற்றிய மதிப்பீடுகளை பிறர்தான் வழங்க வேண்டும் என்று நமக்கு பழக்கப்படுத்தப்பட்ட ஆதிவழிகளில் ஒன்றுதான் இந்த மதிப்பெண்கள்.

இப்படி மதிப்பெண்கள் பின்னால் நம்மை ஓடவிடுவதன் விளைவு என்னவாகிறது, நம்மையே பிறருடன் ஒப்பிட்டு பார்க்க அனுமதிக்கிறது. காரணமின்றி தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது.

பிறரின் பாராட்டுக்காகவே வாழ்க்கை முழுவதும் நம்மை ஓட வைக்கிறது. அதுமட்டுமா, தேர்வில் ஏற்படும் தோல்விகளை அனுபவமாக பார்க்காமல் குற்றச்செயலாக பார்க்க வைக்கிறது.

மதிப்பெண்கள் மீதான இத்தகைய கண்ணோட்டங்கள்தான், எதிர்பார்த்த தேர்வில் தோல்வி அடைந்தாலோ, தாங்கள் விரும்பிய மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு தேவையான மதிப்பெண்கள் கிடைக்காவிட்டாலோ வாழ்வை முடித்துக் கொள்ளும் நிலைக்கு சில மாணவ, மாணவிகளை தள்ளுகிறது.

சமூகத்தில் இந்தநிலை மாற வேண்டும் என்றுதான் கல்வியாளர்களும், உளவியல் நிபுணர்களும் தேர்வு முடிவுகள் வெளிவரும் ஒவ்வொரு ஆண்டும் தொலைக்காட்சி முன் அமர்ந்து பல்வேறு ஆலோசனைகளைக் கூறுகிறார்கள்.

பெட்டிக்குள் இருந்து வெளியே வாருங்கள்

மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் சமூகத்தால் வரையறுக்கப்பட்டுள்ள அட்டைப் பெட்டிகுள்ளிருந்து வெளியே வர வேண்டும். அவர்களது எதிர்பார்ப்புகளுக்காக தங்களது எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளும் பாதையிலிருந்து விலகி, சற்று தனியே நடந்து செல்ல வேண்டும்.

நமது திறமைகளையும் வெளிக் கொண்டுவரும் ஏராளமான வாய்ப்புகள் ஒவ்வொருவரின் முன்னால் கொட்டி கிடக்கின்றன. ஆனால் நாமோ தொடர்ந்து யாரோ உருவாக்கிய அந்த அட்டைப் பெட்டி வாழ்க்கைக்கான ஓட்டத்தில் ஆட்டு மந்தைகளை போல் ஓட முயற்சிக்கிறோம். முயன்று கொண்டே இருக்கிறோம்.

நாளடைவில், அட்டைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே வர முயற்சி செய்யாமல் வாழ்க்கை முழுவதும் அந்த அட்டைப் பெட்டிக்குள்ளாகவே சிறைப்பட்டு விடுகிறோம்.

இல்லை, அந்த அட்டைப் பெட்டிக்குள்ளிருந்து வெளி வர நினைக்கிறீர்களா? அதற்கு தேவையானது தேடல், விடாமுயற்சி என்ற இரண்டு மந்திரங்கள் மட்டுமே.

உங்கள் தேடல்களில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிசோதனைகளையும் அனுபவமாக ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் மற்றவர்களின் பாராட்டுகளை எதிர்பார்க்காமல் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று கொண்டே இருங்கள். பாராட்டுகளை எதிர்பார்த்தீர்கள் என்றால் ஏதாவது ஒரு கட்டத்தில் நீங்கள் நின்று விடுவீர்கள்.

அத்தருணத்தில் நீங்கள் எதிர்பார்த்த பாராட்டுகள் உங்கள் ஒட்டுமொத்த முயற்சிக்கு தடைக்கற்களாக மாறிவிடும்.

ஒரே நாளில் வெற்றி யாருக்கும் சாத்தியம் இல்லையே, அப்படி வெற்றி பெற்றால் அது நிச்சயம் நிலையும் பெறாது.

உங்கள் முயற்சிகள் ஒரு வேளை தோல்வி அடைந்ததா? நீங்கள் வெற்றிக்கு அருகில் சென்று உள்ளீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இத்தகைய எண்ணங்கள்தான் தொடர்ந்து நமது தேடல்களுக்கும், கனவுகளுக்கும் புத்துயிர் அளிக்கக்கூடியவை.

உங்கள் கனவுகள் மீது பிடிவாதம் கொள்ளுங்கள்

ஒரு இளைஞன் தான் பெரிய கார்ட்டூனிஸ்ட்டாக வரவேண்டும் என்ற கனவில், ஒவ்வொரு பத்திரிகையாக ஏறி இறங்குகிறார். ஆனல் தொடர்ந்து அவரை அந்தப் பத்திரிகைகள் புறக்கணிக்கின்றன. ஆனால் அந்த இளைஞன் அந்த முயற்சியை கைவிடவில்லை. பின்னாளில் அவரே உலகம் போற்றும் கார்ட்டூனிஸ்ட் கதாபாத்திரத்திரத்தை வடிவமைகிறார்.

அவரே உலகப் புகழ்பெற்ற மிக்கி மவுஸ் கார்ட்டூன் கதாப்பாத்திரத்தை படைத்த வால்ட் டிஸ்னி. டிஸ்னியைப் போன்று நமக்கு முன்னால் சாதித்த ஏராளமான சாதனையாளர்களின் வரலாற்றில் பரந்து கிடக்கிறார்கள். அதில் யாரை நாம் தேர்ந்தெடுகிறோம். இல்லை நாம் எம்மாதிரியான எடுத்துக்காட்டாக ஆகப் போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நமது தேடல்கள்.

ஆங்கிலந்தில் வாழ்க்கையில் விடாமுயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு உண்டு, கல்லூரி வகுப்பறையில் பேராசிரியர் ஒருவர் 100 டாலர் நோட்டை மாணவர்களிடத்தில் காட்டி இது யாருக்கெல்லாம் வேண்டும் என்று கேட்பார்.

வகுப்பிலிருந்த 200 மாணவர்களும் கைகளை உயர்த்துவார்கள். அடுத்து அந்த ரூபாய் நோட்டை நான்காக மடித்து அதனை கசக்கி மாணவர்களிடம் காட்டி தற்போது இந்த நோட்டு யாருக்கு வேண்டும் என்று கேட்பார். அதே எண்ணிக்கையில் மாணவர்கள் மீண்டும் கைகளை உயர்த்துவார்கள். இறுதியாக அந்த ரூபாய் நோட்டை கீழே போட்டு காலால் மிதித்து மீண்டும் அதே கேள்வியை மாணவர்களிடத்தில் கேட்பார். மீண்டும் அதே எண்ணிக்கையில் மாணவர்கள் கைகளை உயர்த்துவார்கள்.

அப்போது அந்த பேராசிரியர் மாணவர்களிடத்தில் கூறுவார். இந்த ரூபாய் நோட்டை எவ்வளவு கசக்கி, நசுக்கினாலும் அதன் மீதான உங்களின் மதிப்பு மாறவில்லை அல்லவா.

அதே போன்றுதான், நீங்கள்தான் இந்த ரூபாய் நோட்டு வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு துன்புறுத்தலுக்கு உள்ளானலும் உங்கள் கனவுகளின் மீது நீங்கள் வைத்துள்ள மதிப்பையும் இழந்து வீடாதீர்கள். தொடர்ந்து விடாமுயற்சியுடன் போராடுங்கள் நீச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று கூறுவார்.

இறுதியாக, உங்கள் கனவுகளுக்கான விதையை நீங்களே இடுங்கள். உங்கள் மீது நீங்கள் கொண்டுள்ள தன்னம்பிக்கையை மற்றவர்கள் கேள்வி கேட்க அனுமதிக்காமல் ஓடிக் கொண்டே இருங்கள். என்றாவது ஒரு நாள் நிச்சயம் கனவுகள் வசப்பட்டே ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x