Published : 11 Jun 2016 10:50 AM
Last Updated : 11 Jun 2016 10:50 AM
புரட்சி வீரர், இலக்கியவாதி
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிரை நீத்த வீரரும், சிறந்த படைப்பாளியுமான ராம் பிரசாத் பிஸ்மில் (Ram Prasad Bismil) பிறந்த தினம் இன்று (ஜூன் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் (1897) பிறந்தார். தந்தை நகராட்சி ஊழியர். அவரிடம் இந்தியும், ஒரு மவுல்வியிடம் உருதும் கற்றார். உள்ளூர் பள்ளியில் ஆரம்பக் கல்வி தொடங்கியது. பிறகு ஓர் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து பயின்றார்.
l ஆரிய சமாஜம் அமைப்பில் இணைந்தார். சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய ‘சத்யார்த்த பிரகாஷ்’ என்ற நூலை வாசித்தது இவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தாய்நாடு, அதன் விடுதலை பற்றிய எண்ணமே அவரிடம் எப்போதும் மிகுந்திருந்தது. தீவிர பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்தார்.
l ஷாஜஹான்பூர் சேவா சமிதியில் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றினார். 19 வயதுமுதல் விடுதலை இயக்கத்தின் புரட்சிகரமான பாதையில் செல்லத் தொடங்கினார். அரசியல், மத விஷயங்களில் சுவாமி சோமதேவ்ஜியிடம் ஆலோசனை பெற்று செயல்பட்டார்.
l அஷ்ஃபாகுல்லா கான், சந்திரசேகர ஆசாத், பகவதி சரண், ராஜகுரு போன்ற புரட்சி வீரர்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். ‘மாத்ரிவேதி’ என்ற புரட்சி அமைப்பை உருவாக்கினார்.
l சிறு வயதுமுதல் கவிதை எழுதும் ஆற்றலும் பெற்றிருந்தார். ஏராளமான நூல்களை எழுதி, தானே வெளியிட்டார். அவற்றை விற்று கிடைக்கும் பணத்தை புரட்சி செயல்பாடுகளுக்கு ஆயுதங்கள் வாங்கப் பயன்படுத்தினார். புரட்சிக் கருத்துகள் கொண்ட இவரது நூல்களை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது.
l ‘இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன்’ என்ற புரட்சி அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் சட்டதிட்டங்களை வரையறுப்பதில் முக்கியப் பங்காற்றினார். ‘என் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி’ என்ற தலைப்பில் ஏராளமான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்.
l அரவிந்தரின் ‘யோகிக் சாதனா’ நூலை மொழிபெயர்த்தது இவர்தான். பல வங்கமொழிப் படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்தார். இந்தி, உருது மொழிகளில் ‘அஞாத்’, ‘ராம்’ என்ற புனைப்பெயர்களிலும் எழுதினார்.
l சகாக்களுடன் இணைந்து புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மணிப்பூர் சதித் திட்டம், காகோரி சதித் திட்டத்தில் முக்கியப் பங்காற்றினார். 1925-ல் காகோரி என்ற இடத்தில் ரயிலில் கொண்டு வரப்பட்ட பிரிட்டிஷாரின் பணத்தை கொள்ளை அடிக்க முயன்றனர். இதில், சந்திரசேகர் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. கோரக்பூர் சிறையில் ராம் பிரசாத் பிஸ்மில் 1927 டிசம்பர் 19-ம் தேதி 30-வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.
l தேசபக்தியையும் புரட்சி உணர்வையும் தூண்டக்கூடிய வகையில் ‘சர்ஃபரோஷ் கீ தமன்னா’ என்ற கவிதை நூலை சிறைவாசத்தின்போது எழுதினார். தான் இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன் அவர் எழுதி முடித்த இந்நூல், இவரது மரணத்துக்குப் பிறகு வெளியிடப்பட்டது.
l ஷாஜஹான்பூர், கோரக்பூரில் அருங்காட்சியகம், நினைவகம் ஆகியவை உருவாக்கப்பட்டன. புரட்சி வீரர், தேசபக்தர், சிறந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர், வரலாற்று அறிஞர், இலக்கியவாதி என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட இவரது நினைவாக பிறந்தநாள் நூற்றாண்டில் தபால்தலை வெளியிடப்பட்டது.
- ராஜலட்சுமி சிவலிங்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT