Published : 03 Apr 2017 10:17 AM
Last Updated : 03 Apr 2017 10:17 AM

சிதம்பரநாதன் செட்டியார் 10

தமிழ் அறிஞர், சொற்பொழிவாளர்

சிறந்த தமிழ் அறிஞரும், சொற்பொழிவாளருமான சிதம்பரநாதன் செட்டியார் (Chidambaranathan Chettiyar) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கும்பகோணத்தில் (1907) பிறந் தார். பேட்டை தொடக்கப்பள்ளி, கும்பகோணம் நேட்டிவ் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைத் தேர்வில் மாநிலத் திலேயே முதல் மாணவராகத் தேறி, டாக்டர் ஜி.யு.போப் நினைவு தங்கப் பதக்கம் பெற்றார்.

* கல்லூரி மாணவர் மன்றச் செய லாளராகப் பணியாற்றியபோது, தமிழ் கூட்ட அறிக்கைகளைத் தமிழிலேயே வழங்க வழிவகுத்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே, தமிழவேள் உமாமகேஸ்வரன் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆகியோரை கல்லூரிக்கு அழைத்து, சொற்பொழிவு நிகழ்த்த வைத்தார்.

* வரலாற்றுத் துறை நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு, ‘தமிழ் நாகரிகத்தின் தொன்மை’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி முதல் பரிசு பெற்றார். பட்டப்படிப்பை முடித்த பிறகு சென்னை பல்கலைக்கழகம், அரசு தலைமைச் செயலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார்.

* தமிழ், ஆங்கிலத்தில் நன்கு புலமை பெற்ற இவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1943-ல் ‘தமிழ்ச் செய்யுள் வரலாறு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இதன்மூலம், முனைவர் பட்டம் பெற்ற முதல் தமிழ் அறிஞர் என்ற பெருமை பெற்றார்.

* சென்னை புதுக்கல்லூரி, பாலக்காடு அரசினர் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கடினமான கவிதை, செய்யுள், இலக்கண, இலக்கியங்களை மாணவர்களுக்கு எளிமையான நடையில் விளக்கிப் புரியவைத்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.1948-ல் இங்கு இடைக்கால துணைவேந்தராகப் பணியாற்றினார்.

* சிலப்பதிகாரத்தை தன் உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். நல்ல எழுத்தாளரான இவர், இலக்கணம், இலக்கியம், மொழியியல், வாழ்க்கை வரலாறு, நாட்டு வரலாறு, வாழ்வியல், மொழிபெயர்ப்பு என அனைத்து களங்களிலும் புகழ்பெற்றார். இவர் எழுதிய ‘ஆன் இன்ட்ரொடக் ஷன் டு தமிழ் பொயட்ரி’ , தமிழ்க் காப்பியங்களை உலக அரங்குக்கு கொண்டு செல்ல வழிவகுத்தது.

 சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ. லட்சுமணசாமியின் வேண்டுகோளை ஏற்று, ‘ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்’ நூலுக்கு தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றார். இப்பணியில் 6 ஆண்டுகள் ஈடுபட்டார். தமிழ் ஆசிரியர் கழக மாநிலத் தலைவர், தமிழகப் புலவர் குழுத் தலைவர் போன்ற பதவிகளில் சிறப்பாக செயல்பட்டார்.

* பல நாடுகளுக்கும் சென்று தமிழின் சிறப்பு குறித்து சொற்பொழிவு நிகழ்த்தினார். டெல்லியில் 1961-ல் நடந்த அனைத்துலக இலக்கிய பேரறிஞர் கருத்தரங்கில் தமிழ் இலக்கியங்களின் செறிவை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

* பட்டதாரிகள் தொகுதியில் இருந்து பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும், பட்டதாரி ஆசிரியர் தொகுதியில் இருந்து அகாடமி கவுன்சிலுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் ஆசிரியர் இவர்தான். மதுரை தியாகராசர் கலைக் கல்லூரி முதல்வராக 2 ஆண்டுகள் பணியாற்றினார்.

* சென்னை மேலவை உறுப்பினராக 1964-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தன் உரைகளால் அனைவரையும் கவர்ந்தார். இவரது தமிழ்த் தொண்டுக்காக ‘செந்தமிழ்க் காவலர்’ என்ற சிறப்பு பட்டத்தை தருமபுரம் ஆதீனம் வழங்கியது. மொழியியல், இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் தனி முத்திரை பதித்த சிதம்பரநாதன் செட்டியார் 60-வது வயதில் (1967) மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x