Published : 24 Feb 2017 04:45 PM
Last Updated : 24 Feb 2017 04:45 PM

நெட்டிசன் நோட்ஸ்: ஈஷா ஆதியோகி சிலை- கடவுளை விட காடு முக்கியம்!

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உலகிலேயே மிகப்பெரிய திருமுகமாக 112 அடி உயர ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். இந்த சிலை அமைத்ததில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளதாகவும், திறப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Sutharson Ramakrishnan

ஈஷா யோகா மையம் அமைத்துள்ள ஆதிசிவன் சிலைக்கு சட்டப்படி மாவட்ட ஆட்சியரின் அனுமதி 29.09.2016 அன்று அனுமதி எண் 6901 மூலம் பெறப்பட்டுள்ளது. அங்கு சிலையை தவிர வேறு எந்த கட்டுமானப்பணியும் நடக்கவில்லை. ஆனால் பல லட்சம் சதுர அடிக்கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக சில அமைப்புகள் பிரச்சாரம் செய்கின்றன.

சிவராத்திரி விழாவிற்காக அப்பகுதி விவசாயிகளிடம் வாடகைக்கு நிலம் பெற்று ஈஷா யோகா மையம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் விவசாய நிலங்களைப் பிடுங்கி விட்டதாகவும், நீர் வழிப்பாதைகளை அழித்துவிட்டதாகவும் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

வாசுகி பாஸ்கர்

ஜக்கி வாசுதேவ் இந்து மத அடையாளத்தோடு இருப்பதால், வழக்கமான இந்து மதத்திற்கு எதிரான பிரச்சாரமாக நிறைய பேர் நினைக்கக்கூடும். நாம் எவ்வளவு விளக்கினாலும் அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும் நாம் ஒருவரை ஆதரிக்க, எதிர்க்க வலுவான காரணம் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான்.

பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்து, இந்த சமூகத்தின் மொத்த அழுத்தங்களையும் எதிர்கொண்டு வாழ்கிற ஒரு ஏழை அப்பாவிடம் இல்லாத பக்குவமா, ஞானமா, வாழத் தெரியாமல் காட்டிற்கு ஓடி மறைபவர்களிடம் இருக்கப் போகிறது?

Anand Anandb

அத்தனைக்கும் ஆசைப்படு! - சத்குரு

Gajendra Prabu

தமிழ்நாட்டின் பேரழிவுக்குக் கூட வராத மோடி, இவ்வளவு தேர்தல் பரபரப்பிலும் ஈஷா யோகா மையத்தின் விழாவிற்கு வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.

Sakthivel Easwaran

ஜக்கி வாசுதேவ் யானைகளின் வழித்தடங்களை மறித்து, சட்ட விரோதமாகக் கட்டி வரும் கட்டிடங்களுக்கு எதிராக ஏற்கெனவே உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் மோடி இந்தத் திறப்பு விழாவுக்கு வருவது நீதிமன்ற அவமதிப்பாகும்.

Gowthaman Krishnamoorthy

தமிழ் நாட்டில் சிவனுக்கு உருவ வழிபாடு கிடையாது. ஆனால் தற்போது சிலர் அதை மாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஊரிலும் பழமையான சிவாலயம் இருக்கிறது, குறைந்த உணவு, சிவ தரிசனம். இதுபோதுமே சிவராத்திரிக்கு!

எதற்கான வனத்தில் 112 அடி உயரத்தில் சிலை?

Swaminathan Rajamani

ஆஸ்ரமங்கள் அமைதியான இடத்தில் இருந்துவிட்டுப் போகட்டும். தினசரி ஆயிரம், லட்சத்தில் மக்கள் வருமளவுக்கு அந்த இடங்களை ஏன் மாற்ற வேண்டும். சம்சாரிகளுக்கு ஏதோ இரண்டு நாள் தங்க வைத்து யோகா கற்றுக் கொடுத்து இனிமேல் வராதீர்கள் என்றுச் சொல்லி அனுப்பிவிட வேண்டியதுதானே.

மஹா சிவராத்திரிக் கொண்டாட்டங்களை ஊருக்குள் ஏதாவது மைதானங்களில் வைத்துக் கொள்ளலாம் இல்லையா? ஏன் ஒரே ராத்திரியில் வனப்பகுதிகளில் இவ்வளவு கூட்டம் கூட்டி, ஒலிகள் எழுப்பிப் பிற உயிர்களை அச்சுறுத்த வேண்டும்? உங்கள் நன்றியை வெளிப்படுத்த ஊருக்குள் அல்லது புறவழிச் சாலைகளில் தரிசாகக் கிடக்கும் இடங்களில் அமைக்க ண்டியதுதானே!

குருவை விட, கடவுளை விட, காடு முக்கியம்!

Farooq Meeran

"என் பெயரைச்சொல்லி ஒரு கானகத்தையே காலிசெய்தாய்" என்றார் ஆதியோகி.

"கானகமா? இனி அது என் நிலம்" என்ற மானுடனின் பதிலில் சிலையாய்ச் சமைந்தார் ஆதியோகி.

Chola Nagarajan

லக்னோவிலிருந்து விமானப்படை விமானத்தில் பிரதமர் கோவை வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் வெள்ளியங்கிரி பயணம். அடிவார ஹெலிபேடிலிருந்து விழா மேடைக்கு குண்டு துளைக்காத காரில் பயணம், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், அமைச்சர் பெருமக்களும் வருகை.

ஐந்து அடுக்குப் பாதுகாப்பு. ஒருவாரமாக பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படை ஆய்வு. கூடுதல் டிஜிபி, முன்னாள் உளவுப்பிரிவு ஐஜி ஆய்வு. தொடர்ந்து என்எஸ்ஜி, எஸ்பிஜி கட்டுப்பாட்டின் கீழ் விழா நிகழ்விடம், இத்துடன் ஒரு ஐ.ஜி., 4 ஏ.ஐ.ஜி.க்கள், 4 எஸ்.பி.க்கள், 30 மத்திய அரசுப் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய - மாநில உளவுப்பிரிவுகள், சிறப்புப் பாதுகாப்புப்படை, நக்சல் தடுப்புப் பிரிவு, சிறப்பு அதிரடிப்படை... இப்படி 5200 போலீசார் வெள்ளியங்கிரி அடிவாரத்தில் குவிப்பு.

கோவை சாலைகளும் பாதுகாப்பில். வேகத்தடைகள் நீக்கம், கோவை மாநகரப் போலீசார் 1300 பேர் பாதுகாப்புப் பணியில். வனப்பகுதி முழுதும் வனத்துறையினரும், நக்சல் தடுப்புப் பிரிவும் கண்காணிப்பு. இத்தனையும் எதற்கு? ஆதியோகி சிவனின் சிலை திறப்புவிழாவுக்காக... ஆக ஒருத்தரும் கடவுளை நம்பல... அப்படித்தானே?

மணிவண்ணன் கலியமூர்த்தி

மெரினாவில் நடைபெற்ற போராட்டத்திற்கு வராத பிரதமர், எண்ணூர் துறைமுக பாதிப்புக்கு வராத பிரதமர், தனி நபர் நடத்தும் விழாவிற்கு வருவது ஏன்?

இவருக்கெல்லாம் விருது வழங்கும் அரசின் பார்வையில் இயற்கை விவசாயத்தின் தந்தை நம்மாழ்வார் படாமல் போனது ஏனோ?

Gowri Gurunathan

இயற்கையே தெய்வமென கருதிய முன்னோர்களை பெற்ற சமூகம் இன்று

கண்ணுக்கு புலப்படாத கடவுளுக்காக இயற்கையை அழிக்குது..

#ஹேப்பி_ஆதியோகி_ராத்திரி

Rajesh Kumar

இந்த மஹா சிவராத்திரிக்கு கோவையில் இருந்து கொண்டு நீங்கள் ஈஷா யோகா போகவில்லையா என்று முகநூல் நண்பர்களும் வாசகர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை யோகா என்பது நம் வேலையை நேர்மையாகவும், நேர்த்தியாகவும் செய்வதுதான். இந்த சிவராத்திரியன்று பக்கத்தில் இருக்கும் பழைய சிவன் கோயிலுக்குச் சென்று விட்டு வந்து சற்று அதிக நேரம் கண் விழித்து என் எழுத்துப் பணியைக் கவனிப்பதுதான் என் யோகா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x