Published : 19 Sep 2018 01:37 PM
Last Updated : 19 Sep 2018 01:37 PM

இந்தி பிக் பாஸ் சீசன் 12: போட்டியாளர்களிடம் மோதல்; வீட்டிலிருந்து வெளியேறுவேன்: ஸ்ரீசாந்த் ஆவேசம்

இந்தி 'பிக் பாஸ்' சீசன் 12-ல் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கலந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இரண்டாவது நாளிலேயே வெளியேற வேண்டும் என்று ஆவேசத்துடன் அவர் கூறியது சமூக வலைதளங்களில் நேற்று பரவலாகப் பேசப்பட்டது.

உலக அளவில் பிரபலமான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி,  இந்தியாவில் இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதில் பாலிவுட் நடிகர்  சல்மான் கான் தொகுப்பாளராக, கடந்த பத்து வருடங்களாக நடத்தி வரும் இந்தி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 12-வது சீசன் இந்த வாரம் தொடங்கியுள்ளது. இதில் பல்வேறு பிரபலங்களுடன் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே ஸ்ரீசாந்த் சக போட்டியாளர்களிடம் ஏற்பட்ட மோதல் காரணமாக வீட்டை விட்டு வெளியேற கதவைத் திறங்கள் என்று கூறியது பரப்பரப்பை ஏற்படுத்தியது. 'பிக் பாஸ்' கூறிய முதல் டாஸ்க்கை செய்ய ஸ்ரீசாந்த் மறுத்ததால் வீட்டிலிருந்த பிற போட்டியாளர்கள் ஸ்ரீசாந்துக்கு எதிராக மாறியுள்ளனர்.

மேலும், ஜெய்ப்பூரைச் சேர்ந்த போட்டியாளர்களிடம் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மைக்கைக் கழற்றி வைத்த ஸ்ரீசாந்த் 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்றார்.

சக போட்டியாளர்கள் ஸ்ரீசாந்தை சமாதானப்படுத்த முயற்சித்தும் அதைக் கேட்க அவர் மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீசாந்த்  சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டார்

ஸ்ரீசாந்த் 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறுவாரா, இல்லையா என்பது இன்றைய எபிசோட்டில் ஒளிப்பரபாக உள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x