Last Updated : 21 Sep, 2014 11:02 AM

 

Published : 21 Sep 2014 11:02 AM
Last Updated : 21 Sep 2014 11:02 AM

அகிநேனி நாகேஸ்வர ராவ் 10

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் அகிநேனி நாகேஸ்வர ராவ் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து.

# விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் நாடகங்களில் பெண் வேடங்களில் நடித்தார். ஒருமுறை விஜயவாடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை யதேச்சையாக பார்த்த கண்டசாலா பலராமையா ‘சீதா ராம ஜனனம்’ படத்தில் இவரை நாயகன் ஆக்கினார்.

# 'சோக நாயகன்' இவருக்கான அடையாளம். மஜ்னு, சலீம் வேடங்களில் புகழ் பெற்றாலும், தேவதாஸை இன்று வரை ஆளில்லை. ஹிந்தியில் அதனை ரீ-மேக் செய்தபோது திலீப் குமார் இப்படிச் சொன்னார்: ‘என்றுமே ஒரே தேவதாஸ். அது நாகேஸ்வர ராவ் மட்டுமே’.

# கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால், புராண வேடங்களில் நடிக்க மறுப்புச் சொன்னதில்லை. நடிகை ஜெயசுதாவுக்கு இயேசுவின் சிலையைப் பரிசளிக்கும் அளவுக்கு பக்குவப்பட்ட பகுத்தறிவுவாதி.

# படிப்பு நான்காம் வகுப்பு வரை மட்டுமே. ‘தி ஹிந்து’ செய்தித்தாளை படித்தே ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டதாகக் கூறுவார். இன்னொரு நடிகர் நடிக்கும்போது செட்டை விட்டு நகராமல் அவரிடமிருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள முடியுமா என்று பார்ப்பார்.

# தெலுங்குப் படங்கள் எல்லாம் தமிழகத்திலேயே உருவாகிக்கொண்டிருந்த காலத்தில் அதை மாற்ற 28 ஏக்கரில் அன்னபூர்ணா ஸ்டுடியோவை ஹைதரபாத்தில் உருவாக்கினார்.

# தெலுங்குத் திரைப்படங்களில் முதன் முதலில் நடனக் காட்சிகள் அமைத்தது, இரட்டை வேடத்தில் நடித்தது, ஒன்பது வேடங்களில் தோன்றியது எல்லாமும் இவரே!

# நாகேஸ்வர ராவ் நடித்து வெளிவந்த ‘பிரேமபிஷேகம்’ திரைப்படம் 533 நாட்கள் ஓடியது இன்றுவரை ‘டோலிவுட்’டில் முறியடிக்கப்படாத சாதனை.

# மகாகவி காளிதாஸ், ஒடிசாவின் ஜெயதேவா, கர்நாடகத்தின் ‘அமரசில்பி’ ஜக்கன்னா, தமிழகத்தின் விப்ரநாராயணா ஆகிய பக்தியாளர்கள் வேடங்களில் நடிப்பதைப் பெருமையாகக் கருதினார். “சீனர்கள், கொரிய நாட்டினரைப்போல சொந்த மண்ணைப் பிரதிபலிக்கும் படங்களை எடுக்க வேண்டும்" என்பார்.

# கலைமாமணி, அறிஞர் அண்ணா விருது, இரு முறை தேசிய விருது, தாதா சாகிப் பால்கே விருது ஆகியவற்றைப் பெற்றவர். பின்னாளில் இவரது பெயராலேயே ஒரு விருது உருவானது. அதை பாலச்சந்தர், ஹேமமாலினி, ஷ்யாம் பெனகல் பெற்றுள்ளனர்.

#புற்று நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தபோதும் தனது மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யாவுடன் நடித்த ‘மனம்’ படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துக்கொடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x