இன்று அன்று | 1988 செப்டம்பர் 29: டிஸ்கவரி விண் ஓடம் செலுத்தப்பட்ட நாள்

இன்று அன்று | 1988 செப்டம்பர் 29: டிஸ்கவரி விண் ஓடம் செலுத்தப்பட்ட நாள்
Updated on
1 min read

பூமியைச் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருட்களைக் கொண்டுசெல்லவும், விண்வெளி வீரர்களை அனுப்பவும் நாசாவால் பயன்படுத்தப்பட்டவை விண் ஓடங்கள் (ஸ்பேஸ் ஷட்டில்ஸ்). முதன் முதலாக, 1981-ல் விண் ஓடம் விண்ணில் ஏவப்பட்டது. சேலஞ்சர், கொலம்பியா, டிஸ்கவரி, அட்லான்டிஸ், எண்டவர் என்ற 5 விண் ஓடங்களை அமெரிக்க விண்வெளி மையமான நாசா பயன்படுத்திவந்தது.

1986-ல் ஏவப்பட்ட சேலஞ்சர் விண் கலம், புறப்பட்ட 73 வினாடிகளிலேயே விண்ணில் வெடித்துச் சிதறியது. இதில் ஏழு விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, விண் ஓடங்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 1988-ல் இதே நாளில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக, ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து டிஸ்கவரி விண் ஓடம் ஏவப்பட்டது.

எஸ்.டி.எஸ்-26 என்று அழைக்கப்படும் இது, நாசா அனுப்பிய 26-வது விண் ஓடம். இதில் ஐந்து விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர். 4 நாட்கள், 1 மணி நேரம், 11 வினாடிகள் விண்வெளிப் பயணத்துக்குப் பின்னர், அக்டோபர் 3-ல் கலிஃபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது டிஸ்கவரி.

அதில் பயணம் செய்த வீரர்கள் முதல் முறையாக, அழுத்தம் தாங்கும் உடைகளை அணிந்தனர். நிலவுக்கு மனிதர்களைக் கொண்டுசென்ற புகழ்பெற்ற அப்போலோ-11 விண்கலத்துக்குப் பின்னர், முழுவதும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொண்ட முதல் குழு இதுதான். அத்துடன், மனிதக் குரலை அடையாளம் கண்டு, அதற்கேற்பச் செயல்படும் வி.சி.யூ. (வாய்ஸ் கன்ட்ரோல் யூனிட்) என்ற சாதனத்தைப் பயன்படுத்திய முதல் விண் ஓடமும் இதுதான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in