Last Updated : 06 Aug, 2014 12:00 AM

 

Published : 06 Aug 2014 12:00 AM
Last Updated : 06 Aug 2014 12:00 AM

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவம், கல்வி, பொருளாதாரம், தொழில் என நான்கு வகைகளில் அரசு வழங்கிவரும் உதவிகள் குறித்து ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகள், அவர்கள் பட்டப் படிப்பு படிப்பதற்கான வசதிகள், மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்ப பயிற்சி உள்ளிட்ட தொழிற்பயிற்சிகள், கணினி, பைண்டிங், கைபேசி பழுதுபார்ப்பது குறித்த சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள், சுயதொழில் செய்வதற்கு வங்கிக் கடன் பெறும் வழிமுறைகள், அரசுத் துறைகளில் அவர்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவை குறித்து பார்த்தோம். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இலவச உபகரணங்கள் பற்றி மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் விளக்குகின்றனர்…

மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர சைக்கிள் பெற என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன?

இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த சைக்கிள் பெற இரு கால்களும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 12 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்கவேண்டும். தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டையுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்போர் சம்பந்தப்பட்ட மாவட்டத்தை சேர்ந்தவராக இருப்பது அவசியம்.

இரு சக்கர நாற்காலி எந்தவிதமான மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது?

கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது. இதைப் பெறவும் 12 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர் சம்பந்தப்பட்ட மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டையை இணைக்க வேண்டும்.

செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான கருவி வழங்கப்படுகிறது?

செவித்திறன் இழந்த மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களுடன் பேசும் வகையில் சூரிய ஒளி சக்தி பெறும் (சோலார் பேட்டரி) காது கேட்கும் கருவி வழங்கப்படுகிறது. இந்த கருவியை பெற செவித்திறன் பாதிப்பு அளவு 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கவேண்டும்; அல்லது காது கேட்கும் தன்மையின் அளவு நிரந்தரமாக குறைவாக இருக்கவேண்டும். தகுதி பெற்ற காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

பார்வையற்றவர்களுக்கு என்ன கருவி வழங்கப்படுகிறது?

பார்வையற்றவர்கள் சிரமமின்றி, தனியாக செல்வதற்காக மடக்கு ஊன்றுகோல் வழங்கப்படுகிறது. மேலும், சூரிய ஒளி மற்றும் ஈரப்பதத்தால் பாதிக்கப்படாத இலவச கருப்புக் கண்ணாடியும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. இவற்றைப் பெற சம்பந்தப்பட்ட நபர் முழுமையான பார்வையற்ற நபராக இருக்கவேண்டும். சுய தொழில் மற்றும் பணிக்குச் செல்லும் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி கைக் கடிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x