Last Updated : 17 Aug, 2018 06:55 PM

 

Published : 17 Aug 2018 06:55 PM
Last Updated : 17 Aug 2018 06:55 PM

கேரளப் பெருமழை... தமிழகத்துக்கு தரும் பாடங்கள் என்ன? - சூழலியலாளர் சுந்தர்ராஜன் பேட்டி

கேரளாவில் வழக்கத்துக்கு மாறாகப் பொழிந்த பருவமழை அம்மாநிலத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. கடவுளின் தேசம் என்று அறியப்படும் கேரளாவுக்கு பருவமழையினால் வந்த பாதிப்புகள் பழக்கப்பட்டிருந்தாலும், இம்முறை எதிர்பார்க்காத அடியை வாங்கியுள்ளது.

கேரள மாநிலத்தில் கோரத் தாண்டவமாடிய மழையால், நேற்று ஒரேநாளில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 164-ஆக அதிகரித்துள்ளது.

கொச்சின் விமான நிலைய முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.  2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து  நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

காசர்கோடு , கண்ணூர், கோழிகோடு, வயநாடு, மலபுரம், திருச்சூர், பாலக்காடு, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம், இடுக்கி போன்ற கேரள மாநிலத்தின் மாவட்டங்கள் கனமழைக்கு மிகுந்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.

விளைவு... இந்தியா முழுவதும் கேரளாவுக்கு உதவுங்கள் என்று குரல்கள் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், வரும் ஞாயிறு முதல் கேரளாவில் மழையின் அளவு குறையும் என்று இந்திய வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

இத்தகைய பெரும் பாதிப்புகளுக்கு இடையே கேரளா சூழியல் சார்ந்த முக்கியப் பாடத்தை தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களுக்குக் கற்பித்துள்ளது என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரான சுந்தர்ராஜன்.

இதுகுறித்து தமிழ் இந்து இணையதளம்  சார்பாக தொடர்புகொண்டு சுந்தர்ராஜனிடம் பேசினோம்.

கடந்த பல நூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15-ம் தேதி வரை உள்ள காலத்தில், கேரளாவில் சராசரியாகப் பெய்யும் மழையை விட 8 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையைப் பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது.

இடுக்கியில் 206.4 மி.மீ மழையும் காசர்கோட்டில் 67 மி.மீ. மழை அளவும் பதிவாகியுள்ளது. இந்த அளவிற்கு கடும் மழைப்பொழிவு இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையைக் கருத்தில் கொண்டு கேரளாவிலுள்ள 39 அணைகளில் 35 அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. கொச்சின் விமான நிலையம் இன்னும் ஒருவார காலத்திற்கு செயல்படாதுஎன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உரியிழந்தவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டுகிறது, முகாம்களில் சில லட்சக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமை சரியாக எவ்வளவு மாதங்கள் என்பதை கணக்கிடமுடியாது என்றும் ஏற்பட்டுள்ள பொருட்சேதம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதையும் தினமும் வரும் செய்திகள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

எச்சரிக்கை வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது

கேரளா சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சினையின் தீவிரம் முதல்முறையாக அந்த மாநிலம் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால் இதற்கான எச்சரிக்கைகளை உலகம் வழங்கிக்கொண்டே இருந்ததை இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் புவனேஸ்வர் நகரமும்,  கடந்த வாரத்தில் யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி நகரமும் பாதிக்கப்பட்டன. மும்பை நகரமும் அடிக்கடி திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரமாகிவிட்டது.

2017ஆம் ஆண்டு பெங்களூரு நகரமும்,  2015-ல் சென்னை, 2014-ல் ஸ்ரீநகர் போன்ற நகரங்களும் திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இனி வரக்கூடிய காலங்களில் தீவிர காலநிலை நிகழ்வுகள் (extreme climate events) இன்னும் அதிகமாகும் என்றும், சுமார் 3 மணி நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்து திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் சர்வதேச காலநிலை விஞ்ஞானிகளும், பல்வேறு ஆய்வு அமைப்புகளும் தெரிவித்து வந்திருக்கின்றனர்.

மத்திய அரசின் சமீபத்திய எச்சரிக்கையும் இதனை உறுதிப்படுத்தியது. இந்த ஆண்டு ஜூன் மாதம் காந்தி நகரிலுள்ள இந்தியத் தொழில்நுட்ப  நிறுவனம் (IIT, Gandhinagar) முக்கியமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

புவியின் வெப்ப அளவு 1.5 முதல் 2 டிகிரி அளவிற்கு உயரும் போது இதைப்போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகமாகும் என்றும் அதுவும் குறிப்பாக குறுகிய நேரத்தில் அதிகம் மழை பெய்யும் (Short duration rainfall extremes) தீவிர நிகழ்வுகள் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

காலநிலை மாதிரிகளை (Climate models) கொண்டு விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர். மூன்று மணி நேரத்தில் மிக அதிக மழை பெய்யக்கூடிய தீவிர நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் 25% அதிகரிக்கும் என்றும் இவற்றை தாங்கக்கூடிய வகையில் நம்முடைய நகர வடிவைமைப்புகள் இருக்கவேண்டுமென்றும்  அந்த ஆய்வில் கூறப்பட்டிருந்தது.

இவ்வாறு அனைத்து எச்சரிக்கை தாண்டியும் நாம் கேரளாவை வெள்ளத்தில் மிதக்க விட்டிருக்கிறோம். கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இயற்கை சீற்றம் எதிர்பார்த்ததுதான் என்கிறார் புகழ்பெற்ற சூழலியல் விஞ்ஞானி மாதவ் காட்கில். இவர்தான் மேற்குத்தொடர்ச்சி மலைகளைப் பாதுகாப்பதற்கான அறிக்கையைத் தயாரித்த குழுவின் தலைவர். மாதவ் காட்கில் சமர்ப்பித்த அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்திருந்தால் கேரளாவில் இவ்வளவு  சேதம் ஏற்பட்டிருக்காது என்பது காலம் நமக்கு உணர்த்தும் செய்தி.

 

கூடுதலாக காட்கில் தற்போது ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்கிறார், "கேரளாவிலுள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், இது முழுமையாக மழையினால் ஏற்பட்டது அல்ல என்றும் அதிகமானது மனித தவறுகளால்தான் என்கிறார் காட்கில். அறிவியல் பூர்வமற்ற முறையில் நிலமும் மண்வளமும் பயனப்டுத்தப்பட்டதும், நீர்நிலைகளையும் சதுப்பு நிலங்களையும் ஆக்கிரமித்து அந்நிலங்களின் பயன்பாட்டை மாற்றியதுதான் தற்போது ஏற்படுள்ள முக்கியக் காரணம்" என்கிறார்.

கேரளா மட்டுமல்ல தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்கள் செய்துள்ள தவறையும் காட்கில் இதில் சுட்டிக் காட்டுகிறார்.

கேரள கனமழை தமிழகத்துக்குப்  புகட்டிய பாடம்

ஏற்கெனவே 2015 ஆம் ஆண்டு சென்னை சந்தித்த வெள்ளத்திற்குப் பிறகும் நாம் சூழியல் சார்ந்த பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை, இப்போது கேரளாவும் நமக்கு பாடத்தைச் சொல்லித் தந்திருக்கிறது.

இனியும் தாமதிக்காமல் தமிழகத்திற்கென காலநிலை குறித்த கொள்கைகளை வகுத்து தீவிரமாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனபதே அந்தப் பாடம்.

1076 கி.மீ. நீள கடற்கரை கொண்ட தமிழகம் காலநிலை மாற்றத்தால், அதிக தீவிரமான காலநிலை நிகழ்வுகளைச் சந்திக்கும்/சந்தித்துக்கொண்டு இருக்கிறது. காலநிலை மாற்றம் என்பது நம் கண்முன்னால் நடக்கும் நிகழ்வு, அதன் தாக்கத்தை எப்படி நாம் குறைக்க முடியும் (mitigation), மற்றும் காலநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்ள முடியும் (adaptability) என்பதைக் கணக்கில் கொண்டு இனி நம்முடைய அனைத்து வருங்கால திட்டங்களும் தீட்டப்பட்ட வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படப்போவது நகரங்கள் தான். ஏனென்றால் குறைந்த நேரத்தில் அதிக மழைப்பொழிவைத் தாங்கக்கூடிய வகையில் நம் நகரங்கள் கட்டமைக்கப்படவில்லை. குறிப்பாக, நகரத்திலுள்ள வடிகால்கள் தினம் பெய்யக்கூடிய மழையின் அளவைக்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. இனிமேல் குறைந்த நேரத்தில், குறிப்பாக மூன்று மணிநேரத்தில் அதிக மழைப்பொழிவைத் தாங்கக்கூடிய வகையில் நாம் தயாராக வேண்டும்.

மாதாந்திர அல்லது தினசரி சராசரி அளவுகள் எல்லாம் பழங்கதை, இனிமேல் மூன்று மணி நேரத்தில் தீவிர மழைப்பொழிவு சராசரிகள்தான் நம்முடைய செயல்பாடுகளை தீர்மானிக்கும்.

நகர்ப்புற வெப்ப தீவு விளைவுகளும் (urban heat island effect) நகரங்களில் பெய்யும் மழையின் தன்மையை மாற்றக்கூடியது, தமிழகம் அதிகமாக நகர்மயமான மாநிலம் என்பதை இங்கே நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

காலநிலை நிகழ்வுகள் கொண்டுவரப்போகும் பொருளாதார இழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும், சில செ.மீ. கடல்மட்டம் உயர்வு நாட்டின் பொருளாதாரத்தைப் புரட்டிபோட்டு விடும் என்கிறார்  உலக வங்கியின் பேரழிவு குறைப்பு மற்றும் மீட்பு அமைப்பின் பொருளாதார நிபுணர்  ஸ்டெபானி ஹல்லேகட்டே.

சென்னை தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்ல, தமிழகப் பொருளாதாரத்தின் அச்சாணி, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் முகம். சென்னை கடற்கரை நகரம் என்பதை நாம் குறித்துக்கொண்டு அதற்கென தனிப்பட்ட முறையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தொழில்நுட்ப உதவிகளின் மூலம் இன்னும் துல்லியமாக கணிக்கக்கூடிய காலநிலை மாதிரிகளை உருவாக்கவேண்டும். பொதுவாக விஞ்ஞானிகள் பொது சுழற்சி மாதிரிகளை வைத்துதான் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை தோராயமான தரவுகளை மட்டுமே தரக்கூடியவை. வெப்பச் சலனங்களால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுப்பது கிடையாது.

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் புவியின் வெப்பம் உயர உயர இந்த வெப்பச்சலனங்கள் மேல் எழுந்து, குளிர்ந்து, மழைப்பொழிவு அதிக அளவில் நடைபெறும். இவற்றைக் கணக்கிலெடுக்கும் வகையில் நம்முடைய ஆய்வு மாதிரிகள் உருவாக்கப்படவேண்டும். அடுத்து நம்முடைய மற்றொரு ஆய்வு இரு தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கு இடையே உள்ள இடைவெளியைப் பற்றியதாக இருக்கவேண்டும்.

சமீபத்தில் அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ், காலநிலை மாற்றம் குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மேலும் கவலை கொள்ளக்கூடிய விஷயங்களை  நமக்குத் தெரிவித்திருக்கிறது.

எதிர்பார்த்ததைவிட காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. தற்சமயம் ஐரோப்பிய நாடுகள் மிகக் கடுமையான வெப்பநிலையை சந்தித்துக் கொண்டிருப்பது இந்த ஆய்வுகளின் கூற்றுகளை உண்மையாக்கிக் கொண்டிருக்கிறது.

காலநிலை மாற்றம் மிக முக்கியமான பிரச்சினையாகும், மானுடத்தின் இருத்தியல்  குறித்ததாகும். அதன் தாக்கத்தைக் குறைப்பதும் எதிர்கொள்வதற்கான வழிகளை மேற்கொள்வது மட்டுமே  நம்முடைய இருப்பை இந்த உலகில் உறுதிப்படுத்தும். மேலும் இது நாளைய பிரச்சினை அல்ல, இன்றைய பிரச்சினை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளதை உணர்ந்து  நாம் விரைவாகச் செயலாற்ற வேண்டும்" என்கிறார் சுந்தர்ராஜன்.

பருவநிலை மாற்றத்தினால் உலகின் கால நிலை மாற்றங்கள்  நாம் எதிர்பார்த்ததைவிட தீவிரமான விளைவை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

அதன் நிழற்படங்களைத்தான் நாம் save kerala ...save... என்று தொடர்ந்து வெறும் பரிதாபத்துக்கான தொனியில் போதிய விழிப்புணர்வின்றி பகிர்ந்து  வருகிறோம்.

உண்மையில் கேரளா நமக்கு பாடம் புகட்டவில்லை... பருவநிலை மாற்றம் குறித்த நமது அஜாக்கிரதைக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x