Last Updated : 08 Aug, 2014 12:00 AM

 

Published : 08 Aug 2014 12:00 AM
Last Updated : 08 Aug 2014 12:00 AM

மன வளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோருக்குப் பயிற்சிகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்படும் உதவித் தொகைகள், நலத்திட்டங்கள், சலுகைகள், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

# கை, கால் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியை திருமணம் செய்துகொள்ளும் சாதாரண நபர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறதா?

ஆம். பார்வையற்றவரைத் திருமணம் செய்துகொள்ளும் சாதாரண நபருக்கு நிதியுதவி வழங்கப்படுவதுபோல, கை, கால் பாதிப்பு போன்ற குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளியை திருமணம் செய்துகொள்பவருக்கும் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் ரொக்கமாக ரூ.12,500-ம், பத்திரமாக ரூ.12,500-ம் வழங்கப்படும். பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த மாற்றுத் திறனாளியை திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத் திறனாளிக்கு ரூ.50 ஆயிரம் திருமண நிதியுதவியாகவும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

# திருமண நிதியுதவி பெறுவதற்கான தகுதிகள், நிபந்தனைகள் என்ன? இந்த நிதியுதவியைப் பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

பார்வையற்ற, கை, கால், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியை திருமணம் செய்துகொள்பவர்கள் நல்ல உடல்நிலையில் இருக்கவேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும், இதுவே முதல் திருமணம் என கிராம நிர்வாக அலுவலரின் சான்று, திருமணப் பதிவுச் சான்றிதழ் நகல், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை ஆகியவற்றை இணைத்து அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

# தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ள இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு ஏதேனும் உதவி வழங்குகிறதா?

கடுமையாக பாதிக்கப்பட்ட - தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ள இயலாத மாற்றுத் திறனாளிகள், மன வளர்ச்சி குன்றியோர் மறுவாழ்வு பெறுவது சிரமம். அவர்களைப் பராமரிக்க மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதைப் பெற, பாதிப்பு சதவீதம் 75 சதவீதத்துக்கும் மேல் இருக்கவேண்டும். மேலும், வேறு எந்த அரசு திட்டங்கள் மூலமாகவும் மறுவாழ்வு பெறத் தகுதியற்றவராக இருக்கவேண்டும்.

# மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளை குணமடையச் செய்ய பயிற்சி மையங்கள் உள்ளதா?

மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென ஆரம்பநிலைப் பயிற்சி மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டுவருகின்றன. அந்த மையங்களில் 6 வயது வரையிலான குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். அங்கு மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும் வகையில் அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x