Last Updated : 26 Jan, 2024 03:30 PM

1  

Published : 26 Jan 2024 03:30 PM
Last Updated : 26 Jan 2024 03:30 PM

‘அயலான்’களை முன்வைத்து... பிரபஞ்சத்தில் நாம் தன்னந்தனியாக இல்லை!

'அயலான்' கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. ரவிக்குமார் போன்றதொரு தோழரின் வெற்றி எப்போதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. இவ்வேளையில், ஏலியன்கள் குறித்த சிறு சிறு உரையாடல்கள் நடப்பதை பார்க்க முடிகிறது. ஏலியன்கள் குறித்து நம்மிடம் பல்வேறு கதைகள் உண்டு. கடவுளர்கள், தேவதூதர்கள், தேவதைகள், சைத்தான்கள், ராட்சதர்கள், சொர்க்கம், நரகம் போன்ற கற்பனைகளின் இன்பம் போன்றுதான் ஏலியன்கள் குறித்த கதைகளும்.

ஒரே வித்தியாசம்... ஏலியன்கள் உண்மையில் உண்டு. ஆனால், நம்மிடம் அவர்கள் குறித்து உலாவுவது கற்பனைக் கதைகள் மட்டுமே. ஒருவேளை உண்மையில் கடவுள் இருந்தால் தன்னைப் பற்றி மதங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கதைகளுக்கு எப்படி சிரிப்பாரோ, அப்படித்தான் ஏலியன்களும் நமது கதைகளை பார்த்து சிரிப்பார்கள். ஆனால், அவர்கள் ரொம்ப இளக்காரம் எல்லாம் பண்ணி விட முடியாது. ஏனெனில், அவர்கள் உலகிலும் ஏலியன்கள் (நம்மை) பற்றிய கற்பனைக் கதைகள் உலாவக் கூடும்.

பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் நட்சத்திர தூசு மேகங்கள் அனைத்திலும் உயிர்களுக்கான மூலக்கூறுகள் நிறைந்திருக்கின்றன.
ஆனால், அவை உயிர்களாக வளர, பூமி போன்ற ஒரு கோள் தேவைப்படுகிறது. தனது நட்சத்திரத்தில் இருந்து சரியான தொலைவு, பாதுகாப்பான வளிமண்டலம், விண்கற்கள் மூலம் நீர் வந்து சேர்தல், விண்கற்கள் தொடர்ந்து மோதி அழிவு ஏற்படாமல் இருத்தல்... இந்த நான்குமே நேர்மறை தற்செயல்‌ நிகழ்வுகள். பூமிக்கு இந்த நான்குமே நிகழ்ந்துள்ளது.

வியாழன், சனி போன்ற பெரிய கோள்கள் சூரிய மண்டலத்தில் இல்லாதிருந்தால் என்னவாகி இருக்கும்?

பூமி உயிர்க் கோளாக இருப்பதற்கான சாத்தியம் மிகக் குறைந்திருக்கும்‌. எப்படி?

சூரியனின் ஈரப்புக் குழிக்குள் பூமி சிக்கி இருக்கிறது. அது முழுதாக அந்தக் குழிக்குள் விழுகாதிருக்க, பூமியின் ஈர்ப்பு விசை மட்டும் காரணமல்ல. வியாழன், சனி, நெப்டியூன் போன்ற கோள்களும் தங்கள் ஈர்ப்பு விசையை பூமி மீது செலுத்துகின்றன. சூரியனின் ஈர்ப்பு விசை - பூமியின் சுய ஈர்ப்பு விசை - வியாழன், சனி, நெப்டியூன் கோள்களின் ஈர்ப்பு விசை எல்லாம் சேர்ந்து பூமியை சூரியனிடமிருந்து சரியான தொலைவில் நிறுத்துகின்றன.

ஒருவேளை இக்கோள்கள் இல்லையெனில், பூமி தற்போதை விட, சூரியனிலிருந்து குறைவான தொலைவிலேயே இருந்திருக்கும். அப்படி இருந்திருந்தால் அதீத வெப்பக் கோளாக இருந்து, ஓர் உயிர் கூட ஜனித்திருக்க முடியாது.

அதேபோல் வியாழன் கோள் இல்லையெனில், விண்ணில் சுற்றும் நூற்றுக்கணக்கான விண்கற்களில் சில அவ்வப்போது பூமி மீது மோதி உயிர்களின் பரிணாம வளர்ச்சியைத் தடுத்திருக்கும். வியாழன் கோள் அத்துனை விண்கற்களையும் தன்னகத்தே இழுத்துக் கொண்டுள்ளது.

ஆனால், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏதோவொரு நீர் சுமந்த விண்கல் பூமி மீது மோதியதை வியாழன் தடுக்கவில்லை.

ஆக, இத்தனை நேர்மறை தற்செயல்கள் நடந்துதான் உயிர்கள், அதுவும் வளர்ந்த உயிர்கள் உருவாக முடிகிறது‌.

இந்த நேர்மறை தற்செயல்களை கடவுள் செயலாக ஆத்திகர்கள் வர்ணிக்கலாம். ஏன், இந்த தற்செயல்கள் அக்கம் பக்கத்து நட்சத்திர மண்டலங்களில் நடக்கவில்லை? ஏன் பக்கத்து கேலக்ஸியில் கூட நடக்கவில்லை என நாத்திகர்களும் கேட்கலாம்‌.

இந்த நேர்மறை தற்செயல்கள் மொத்த பிரபஞ்சத்திலேயே ஒரு கோளுக்கு மட்டும்தான் நடந்துள்ளதா? என்றால், Infinite பிரபஞ்சத்தில் நிகழ்தகவு அடிப்படையில் இந்த நேர்மறை தற்செயல்கள் மிக மிக மிக மிக சொற்ப சாத்தியத்தில் என்றால் கூட, குறைந்தது 50 கோடி கோள்களிலாவது நடந்திருக்கும்.

இந்த 50 கோடி கோள்களில் நிகழ்தகவு அடிப்படையில் மிக மிக மிக மிக சொற்ப சாத்தியத்தில் என்றால் கூட, குறைந்தது 10 கோடி கோள்களிலாவது உயிர்கள் இருக்கும்.

இந்த 10 கோடியில் மிக மிக மிக மிக சொற்ப சாத்தியத்தில் என்றால் கூட,குறைந்தது 1 கோடி கோள்களிலாவது வளர்ந்த உயிர்கள் இருக்கும்.

இந்த ஒரு கோடியில் மிக மிக மிக மிக சொற்ப சாத்தியத்தில் என்றால் கூட, குறைந்தது 10 லட்சம் கோள்களிலாவது நம்மைப் போன்ற வளர்ந்த அறிவு ஜீவி உயிர்கள் இருக்கும்.

ஆம், பிரபஞ்சத்தில் நாம் தன்னந்தனியாக இல்லை. ஏலியன் மாமன், மச்சான்களோடுதான் இருக்கிறோம்.

அப்படியெனில், இந்த ஏலியன்கள் இங்கு வந்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட வந்து போனார்கள் என்ற கதையெல்லாம் உண்மை தானே?

அங்குதான் இருக்கிறது விசயம். நமது அருகாமை நட்சத்திர மண்டல கோள்களில் நேர்மறை தற்செயல்கள் நிகழ்ந்து‌. ஏலியன்கள் வாழ்ந்து வந்தால் இந்த ஏலியன் கதைகள் உண்மையாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால், நமது அருகாமை நட்சத்திர மண்டலங்களில் வளர்ந்த உயிர்கள் ஏதும் இல்லை என்பது ஆய்வுகளின் அடிப்படையில் திண்ணம்.

அப்படியெனில் இந்த ஏலியன்கள் எங்கு இருக்கிறார்கள்?

நமது கேலக்ஸிலேயே மறு எல்லையிலும் இருக்கலாம். அல்லது, இப்பிரபஞ்சத்தில் நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரத்து கேலக்ஸியிலும் இருக்கலாம்.

அதனால் என்ன? இருக்கிறார்கள் என்றால் வந்திருப்பார்கள் என்பதும் உண்மைதானே?

அங்குதான் இருக்கிறது மற்றொரு விசயம். பிரபஞ்சத்தின் தூரம் நம் கற்பனைக்குள் அடக்க முடியாதது.

நமது கேலக்ஸிலேயே மறு எல்லையில் ஏலியன்கள் இருந்தால் கூட, அவர்கள் இங்கு வந்து சேர கோடான கோடான கோடி ஆண்டுகள் ஆகும்‌, ஒளி வேகத்தில் பயணம் செய்தால்.

ஆனால், ஒளி வேக பயணம் என்பது சாத்தியமற்ற கற்பனை. ஒளியின் வேகத்துக்கு காரணம் அது நிறை (mass) அற்ற ஒரு துகள். பூமியில் 55 கிலோ எடை இருக்கும் ஒரு மனிதனின் நிறையானது விண்வெளியில் 5.6 கிலோ இருக்கலாம்.

அப்படியெனில் பல மனிதர்கள் கொண்ட ஒரு விண்கலத்தின் நிறை? அவ்வளவு நிறை கொண்ட எதுவும், ஏன் நிறை கொண்ட பொருள் எதுவுமே பிரபஞ்சத்தில் ஒளி வேகத்தில் பயணிக்க முடியாது. ஒளி வேகத்தில் பயணிக்க நிறையற்ற ஒளியால் மட்டுமே முடியும்.

அப்படியெனில் ஒலி(sound)யை விட அதிவேகத்தில் பயணிக்கும் ஒரு விண்கலத்தில் வந்தால்... வர எடுத்துக் கொள்ளும் காலம் என்பதை கற்பனை செய்ய முடிகிறதா?! ஒளி வேகத்தில் பயணித்தால் ஆகும் காலத்தை விட ஆயிரம் மடங்கு அதிக காலம் ஆகும்.

எக்காலத்திலும் ஏலியன்கள் நம்மை நெருங்கவோ, நாம் அவர்களை நெருங்கவோ முடியாது.

இவ்வளவையும் தாண்டி, சூரிய மண்டலத்திற்குள் ஏலியன்கள் வந்திருந்தால், பூமி மீது போரோ அல்லது நட்புறவோ புரிந்திருப்பார்கள். இப்படி ஒளிந்து கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

நாசா உட்பட பல விண்வெளி நிலையங்களும் தொடர்ந்து பல்வேறு சமிக்ஞைகளை விண்ணுக்கு அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

உண்மையில் வளர்ச்சி அடைந்த ஏலியன் இருக்கும் கோளை, அந்த சமிக்ஞைகளை அடையவே இன்னும் பல நூறு கோடி ஒளி ஆண்டுகள் ஆகும்‌. அதேபோலத்தான் அவர்கள் அனுப்பும்‌‌ சமிக்ஞைகளும்.

ஒருவேளை 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏதோவொரு ஏலியன் இனம் வித்தியாசமான ஒளியை சமிக்ஞையாக அனுப்பி, அந்த சமிக்ஞை இப்போது நம்மை வந்தடைகிறது என வைத்துக் கொள்வோம். இக்கட்டத்தில் அந்த ஏலியன் வசிக்கும் நட்சத்திர மண்டலமே அழிந்திருக்கலாம்‌.

நாம் திருப்பி அனுப்பும் சமிக்ஞை அங்கு சென்று சேர அடுத்த 500 கோடி ஆண்டுகள் ஆகும்‌. அப்போது நமது சூரிய மண்டலமும் அழிந்திருக்கும். ஏனெனில், சூரியனின் ஆயுள் இன்னும் 500 கோடி ஆண்டுகள்தான்.

ஆனால், இப்பிரபஞ்சத்தில் உயிர்களின் அன்பையும், அறிவையும் சுமந்துகொண்டு சமிக்ஞைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். ஏதோவொரு காலத்தில் ஏதோவொரு நட்சத்திர மண்டலத்தில் அந்த சமிக்ஞைகள் உள்வாங்கப்பட்டால், அந்த வளர்ந்த ஜீவராசிகள் பிரபஞ்சத்தில் நாம் தனியாக இல்லை. ஏதோவொரு காலத்தில் ஏதோவொரு நட்சத்திர மண்டலத்தில் வளர்ந்த உயிர்கள் இருந்திருக்கிறார்கள் என்று மகிழக் கூடும்.

ஆமாம், ஏலியன்கள் தோற்றம் எப்படி இருக்கும்?

நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கலாம். ஹாலிவுட் பட ஏலியன்கள் போலவும் இருக்கலாம். ஒரு பூமியிலேயே இவ்வளவு பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறது இயற்கை.

அப்படியெனில் பிரபஞ்சத்தில் வேறு எல்லையில் இருக்கும் ஏலியனின் தோற்றம்? பூமியில் இருக்கும் உயிர்களை ரெஃபரன்ஸ் எடுக்காமல் ஓர் அசாத்திய கற்பனையை நாம் நிகழ்த்த வேண்டும்‌.

ஆனால் சுவாசித்தல், உணவு உட்கொள்ளுதல், கழிவு வெளித்தள்ளுதல், புணர்ந்து இனப்பெருக்கம் செய்தல் முதலான அடிப்படை அம்சங்கள் வெவ்வேறு உடல் வடிவங்களில் அமைந்திருக்கும்.

- அருண் பகத்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x