Published : 09 Jan 2024 03:47 PM
Last Updated : 09 Jan 2024 03:47 PM

அறிவிப்புகள் முதல் கொள்கைகள் வரை: முக்கிய நிகழ்வுகள் 2023 @ தமிழ்நாடு

தமிழகம் - மத்திய அரசு: # தமிழகத்தில் நரிக்குறவர், குருவிக்காரர் ஆகிய சாதிகளைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. | # 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக் குறிஞ்சிப் பூச்செடியைப் பாதுகாக்கப்பட்ட தாவரங்களின் பட்டியலில் மத்திய வனத்துறை சேர்த்தது.| # தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநராகவும், மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் நாகலாந்து ஆளுநராகவும் நியமிக்கப்பட்டனர்.

# தேசிய தூய்மைப் பணி ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ம.வெங்கடேசனை மத்திய அரசு நியமித்தது.| # தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பாஜக தேசியக் குழு உறுப்பினரான நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டார். | # மதுரை எய்ம்ஸ் தலைவராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரசாந்த் லவானியாவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. | # சென்னை - கோவை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தொடங்கப்பட்டது.

# திருநெல்வேலி - சென்னை, விஜயவாடா - சென்னை உள்பட ஒன்பது வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கப்பட்டது. | # மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

அறிவிப்புகள்: # தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா வாபஸ் பெறப்பட்டது. | # மாணவர்களிடையே சாதி, இன பிரிவினைகள் இல்லாத நிலையை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக் கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

# உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப் படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. | # மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குடும்பத்துக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

திட்டம்: # சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டது. | # தமிழ்நாட்டில் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் செய்யப்பட்டது.

# பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது. | # அழிந்துவரும் தமிழ்நாடு மாநில விலங்கான நீலகிரி வரையாடு பாதுகாப்பு முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது.

கொள்கைகள்: # தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023 வெளியிட்டப்பட்டது. | # செயற்கை மணல் (எம்.சாண்ட்) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. | # 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கை வெளியிடப்பட்டது. | # தமிழ்நாடு மாநில மேலாண்மைத் திட்டம், பேரிடர் மேலாண்மைக் கொள்கை ஆகியவை வெளியிடப்பட்டன.

நியமனங்கள்

# மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாருக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

# தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக அறிவொளி நியமனம்.

# ஆசிரியர் தேர்வு வாரியச் செயலாளராக ராமேஸ்வர முருகன் நியமனம்.

# தமிழ்நாடு மாநிலத் தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற டிஜிபி முகமது ஷகில் அக்தர் நியமனம்.

# தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்.

# தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். சென்னைப் பெருநகரக் காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றார்.

# தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் கே.சீனிவாசனுக்கு மூன்று ஆண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

தமிழகச் சட்டப்பேரவை

# தமிழ்நாடு அமைச்சரவை யிலிருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம். மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் முதல் முறையாக இந்த நீக்கம் நடைபெற்றது.

# தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக (தொழில் துறை) டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டார். நிதித் துறைக்கு தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பால்வளத் துறைக்கு மனோ தங்கராஜ் மாற்றப்பட்டனர். வெள்ளக்கோவில் சாமிநாதனுக்குத் தமிழ் வளர்ச்சித் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

# தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, அரசின் உரையில் இடம்பெற்ற சில அம்சங் களைத் தவிர்த்தும் புதிதாகச் சிலவற்றைச் சேர்த்தும் வாசித்தார். ஆளுநரின் உரையைச் சுட்டிக்காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். இதனால், ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார்.

# ஆளுநர் ஆர்.என். ரவியால் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

# முன் அனுமதியின்றி விசாரணை நடத்த சிபிஐக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது.

தேர்தல்
தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6,20,41,179.
தமிழகத்தின் மிகப்பெரிய சட்டப் பேரவைத் தொகுதி சோழிங்கநல்லூர் (6,66,295 வாக்காளர்கள்).
சிறிய தொகுதி துறைமுகம் (1,70,125 வாக்காளர்கள்).
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர் தென்னரசுவை 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

ஆளுநர் மாளிகை

# தமிழ்நாடு என்பதைத் தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையானது.

# தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா இரண்டாம் முறையாக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தார்.

# தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டார். அடுத்த சில மணி நேரத்தில் அந்த உத்தரவை அவர் நிறுத்திவைத்தார்.

# செந்தில் பாலாஜியை அமைச் சரவையிலிருந்து நீக்கியது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதிய நிலையில், அமைச்சரவை யிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதினார்.

# தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் நியமனம் தொடர்பாக அரசுப் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் நிராகரித்தார்.

# சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் வெளியே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்தது.

நீட் விவகாரம்

# நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் தனக்கு இருந்தால் கண்டிப்பாக அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

# நீட் தேர்வு தோல்வி காரணமாக சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்கிற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். மகனின் மரணத்தால் துக்கத்தில் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவங்கள்

# சென்னை மூவரசன்பட்டில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஐந்து இளைஞர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

புவிசார் குறியீடு: ராமநாதபுரம் மாவட்டம் குண்டு மிளகாய், வேலூர் மாவட்டம் இலவம்பாடி முள் கத்தரிக்காய், மணப்பாறை முறுக்கு, மானாமதுரை தேன், ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, வீரமாங்குடி செடி புட்டா சேலை, திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் உள்ளிட்ட பொருள்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 58 பொருள்களுக்கு இந்தக் குறியீடு கிடைத்துள்ளது.

- ஆசிரியர் குழு: ஆதி வள்ளியப்பன், டி.கார்த்திகேயன், ச.கோபாலகிருஷ்ணன், எஸ்.சுஜாதா, பிருந்தா சீனிவாசன், வா.ரவிக்குமார், ச.சிவசுப்பிரமணியன், சு.அருண் பிரசாத், கார்த்திகா ராஜேந்திரன், இந்து குணசேகர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x