Last Updated : 14 Jul, 2014 09:30 AM

 

Published : 14 Jul 2014 09:30 AM
Last Updated : 14 Jul 2014 09:30 AM

ஆதிதிராவிடப் பெண்களுக்கு 50% மானியத்துடன் கடனுதவி

ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்கள் சுய தொழில் தொடங்க தாட்கோ மூலம் வழங்கப்படும் வங்கிக் கடன், மானியம் குறித்து பார்த்துவருகிறோம். இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படுவது குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் எஸ்.சக்திவேல்.

# ஆதிதிராவிட பெண்களுக்கு எந்த வகையில் தாட்கோ மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது?

ஆதிதிராவிட பெண்களை மட்டும் உள்ளடக்கிய மகளிர் சுய உதவிக் குழுக்களாக இருந்தால் அவர்கள் தாட்கோ மூலம் கடனுதவி பெறத் தகுதியானவர்கள். வருவாய் ஈட்டக்கூடிய எந்தவொரு சுய தொழில் தொடங்குவதற்கும் அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் நிதியுதவியில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 லட்சம் - இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும்.

# ஆதிதிராவிட மகளிர் சுய உதவிக் குழுவினர் கடனுதவி பெற தகுதி நிர்ணயம் உள்ளதா?

இந்து ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த பெண்கள் 12 முதல் 15 பேர் சுய உதவிக் குழுவாக இருக்க வேண்டும். அந்த குழு ஒரு ஆண்டுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். தவிர, அந்த குழுவின் வரவு செலவுக் கணக்கு தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

# சுய தொழில் தொடங்குவதற்கான விண்ணப்பம் எங்கு கிடைக்கும்?

அந்தந்த மாவட்டத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை அணுகலாம். அங்கு பெறப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்று, ரேஷன் கார்டு, தீர்மான நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், திட்ட அறிக்கை ஆகியவற்றை இணைத்து இணையதளத்தில் (http://application.tahdco.com) பதிவு செய்ய வேண்டும். இந்த இணையதளத்திலேயே விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

# தாட்கோ மூலம் வேறு எந்த வகையில் சுய தொழில் தொடங்க நிதியுதவி அளிக்கப்படுகிறது?

மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது. அரசு மூலம் அளிக்கப்படும் எந்தவொரு திட்டத்திலும் பயன்பெற இயலாத- பொருளாதார அளவில் மிகவும் நலிவடைந்த ஏழை, ஆதிதிராவிட மக்கள் மாவட்ட ஆட்சியரால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு சிறு சுய தொழில் தொடங்க 100 சதவீத மானியத்துடன் நிதியுதவி வழங்கப்படுகிறது.

# இதில் அதிகபட்ச தொழில் கடன் எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள் விரும்பும் வருவாய் ஈட்டக்கூடிய தொழில்புரிய ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தொழில் உபகரணங்கள் (தையல் இயந்திரம்) வழங்கப்படுகின்றன. இவை முற்றிலும் இலவசம். கொத்தடிமை கள், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டோர், விதவைகள், உடல் ஊனமுற்றோர், ஆதரவற்றோர் போன்றோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x