Last Updated : 03 Nov, 2023 11:31 AM

 

Published : 03 Nov 2023 11:31 AM
Last Updated : 03 Nov 2023 11:31 AM

Bigg Boss 7 Analysis: எகிறி குதித்த விசித்ரா.. அர்ச்சனாவின் ‘எமோஷனல்’ கேம் எடுபடுமா? 

பழைய போட்டியாளர்களின் ஆட்டத்தை மாற்ற வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த புதிய போட்டியாளர்கள் தங்கள் ஆட்டத்தை தொடங்கும் முன்னரே பழைய போட்டியாளர்கள் வேறு ஒரு ரூட் பிடித்து அவர்களை திக்குமுக்காடச் செய்து வருகின்றனர்.

வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளிலிருந்தே தொட்டதற்கெல்லாம் சிணுங்கிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. இத்தனைக்கும் பழைய வீட்டின் போட்டியாளர்கள் அவரை தனியாக டார்கெட் செய்யவில்லை. அதற்கே தன்னை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்குமாறு பிக்பாஸிடம் மன்றாடினார். மறுநாளே அப்படி எதுவும் நடக்காதது போல மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பினார்.

31ஆம் நாள் நடந்த பிக்பாஸ் டேலன்ட் ஷோவின் இறுதியில் மாயாவிடம் ‘நீங்கள் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்று தெரியும். ஆனால் உங்களிடமிருந்து செம பர்ஃபார்மன்ஸை எதிர்பார்த்தேன்’ என்று அர்ச்சனா கூறியதை மாயா ரசிக்கவில்லை என்பது அவரது முகத்திலிருந்து வெளிப்பட்ட அஷ்டகோணல்களிலிருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. அர்ச்சனாவின் கருத்துக்கு பதிலளித்த மாயா ‘நீங்கள் முதலில் ஒரு மேடை நாடகத்தை பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டதும், அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் சமாளிர்த்து மழுப்பினார் அர்ச்சனா. இந்த பஞ்சாயத்து 32ஆம் நிகழ்ச்சியிலும் தொடர்ந்தது.

இதற்கிடையே டேலன்ட் ஷோவில் கூல் சுரேஷின் டீம் குறித்து கானா பாலா சொன்ன கருத்துகளால், கூல் சுரேஷ் - கானா பாலா இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான அதிருதியை பிக் பாஸ் வீட்டாரிடம் கானா பாலா மிக சீரியசாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இதனையடுத்து, நள்ளிரவில் 8 காபி போட்டுத் தரவேண்டும் என்று கேட்ட நிக்சனிடம், பொங்கித் தள்ளிக் கொண்டிருந்தார் விசித்ரா. வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு போதவில்லை என்கிற பிக்பாஸ் வீட்டாரின் குற்றச்சாட்டு நீண்டநேரம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர் தினேஷும், விசித்ராவும்.

மறுநாள் விசித்ராவ தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியதால் அன்னபாரதியும், ப்ராவோவும் கிச்சடி என்ற பெயரில் பசை போன்ற ஏதோ ஒன்றை கிண்டி அனைவருக்கும் கொடுத்தனர். “கையில் எடுத்து வாயில் போட்டேன். மீண்டும் ஒட்டிக் கொண்டு வந்துவிட்டது” என்று கூல் சுரேஷ் காமெடியாக சொன்னது ரசிக்கவைத்தது. இதுகுறித்து பிக்பாஸ் வீட்டாரும் பெரிய அளவில் அலட்டிக் கொள்ளவில்லை. பெரிய மனதுடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டனர். எல்லாவற்றிலும் கன்டென்ட் தேற்ற முயலும் பிரதீப்புமே கூட இதனை பிரச்சினையாக்காமல் பக்குவமாக நடந்து கொண்டது ஆச்சர்யம். தன்னால் சரியாக சாப்பாடு கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்று விசித்ரா கண்கலங்கினார்.

அடுத்ததாக பிக்பாஸ் கொடுத்த ‘சந்துல பொந்துல மாட்டிக்காத’ டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டார் சிறப்பாக ஆடி வென்றனர். இதனையடுத்து, “இந்த டாஸ்க்கில் விளையாட உன்னை கூப்பிடலாம் என்று நினைத்தேன். நீதான் அதற்கு ஃபைட் பண்ணனும்” என்று அர்ச்சனாவிடம் கொளுத்திப் போட்டார் கூல் சுரேஷ். இது தொடர்பாக நீண்ட விவாதம் அர்ச்சனா - விசித்ரா - தினேஷ் இடையே நடந்தது. மற்ற இருவர் சொல்லும் விளக்கத்தை அர்ச்சனா கேட்க தயாராக இல்லை. ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிர்வாதம் வைத்து வளர்த்துக் கொண்டே சென்றார். ஒருகட்டத்தில் எரிச்சலின் உச்சத்துக்கே சென்ற விசித்ரா ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து எகிறி குதித்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். ரூல்ஸை மீறுவது குறித்து கடந்த வாரம் கமல் எச்சரித்தும் கூட அதுகுறித்து அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் வந்து சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை.

மீண்டும் சமாதானம் பேசவந்த அர்ச்சனாவிடம், ‘எனக்கு பொறுமை இல்லை. காதுன்னு ஒன்னு இருக்கு. ஓரளவுதான் கேட்கமுடியும்’ என்று சொன்னார். அந்த அளவுக்கு பேசியே வீட்டை விட்டு வெளியே துரத்தியிருக்கிறார் அர்ச்சனா. விசித்ரா இதனை எல்லோர் முன்னாலும் சொன்னதை அர்ச்சனாவால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. பொங்கி வந்த கண்ணீரை அடக்கவும் முடியாமல், சத்தமாக அழவும் முடியாமல் தன்னுடைய க்ளீனிங் டாஸ்க்கை தொடர்ந்தார்.

டாஸ்க்கின் போது ஏன் தன்னுடைய கருத்து கேட்கவில்லை என்று அர்ச்சனா கேட்பது நியாயம்தான். அவர் சொல்வது போல அது அவரது உரிமையும் கூட. ஆனால் இப்படி காதோரத்தில் ரீங்காரமிடும் கொசு போல ‘கன்டென்ட்’ கிடைக்கும் என்பதால் விடாமல் நச்சரித்தால் யாராக இருந்தாலும் எதிர்வினை இப்படித்தான் இருக்கும். இத்தனைக்கும் பிக்பாஸ் வீட்டாரிடம் கடுமை காட்டிய அளவுக்கு கூட விசித்ரா அர்ச்சனாவிடம் கடுமையாக பேசவில்லை.

இதற்கே வழக்கம் போல எமோஷனல் ஆகி கண்ணீர் சிந்தினார் அர்ச்சனா. தனது பக்கம் நியாயம் இருந்தாலும் அர்ச்சனா ஆடும் இந்த எமோஷனல் கேம் அவரது வாதத்தை நீர்த்துப் போக செய்யக் கூடும். இதுவே அவர் வீட்டுக்குள் வந்த முதல் நாளிலும் நிகழ்ந்தது. முதல் வாரத்திலேயே எதற்காக தங்களை தண்டிக்க வேண்டும் என்று மற்றவர்கள் சார்பாக அவர் கேட்ட நியாயமான கேள்வி, அவருடைய அழுகையால் அவர் பக்கமே திரும்பியது. ஆரம்பத்திலேயே இப்படி என்றால், இன்னும் போகப் போக ஆட்டத்தின் கடுமை அதிகரிக்கும்போது அர்ச்சனாவால் இதனை தாக்குப் பிடிக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x