பாரத் ஆர்மி vs Barmy ஆர்மி | டக் அவுட்டான பேட்ஸ்மேன்களை வைத்து சமூக வலைதளத்தில் ட்ரோல் பதிவு

படம்: எக்ஸ்
படம்: எக்ஸ்
Updated on
1 min read

சென்னை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் லக்னோ நகரில் விளையாடின. இதில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் சிலர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதனை மையமாக வைத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவளிக்கும் பாரத் ஆர்மி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆதரவளித்து வரும் Barmy ஆர்மியை சேர்ந்தவர்கள் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்யும் வகையிலான போஸ்ட்களை பதிவிட்டனர். இதில் வத்துகளின் படத்தை வைத்து ட்ரோல் செய்திருந்தனர்.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. அதன்போது விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அதனை வைத்து விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார் என்றும், வாத்து ஒன்றின் தலைக்கு பதிலாக விராட் கோலியின் தலையை வைத்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது பார்மி ஆர்மி. அது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது.

தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட் செய்தது. அப்போது ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மார்க் வுட் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். அவர்கள் மூவரது தலையையும் வாத்துக்கு வைத்து பதில் போஸ்ட் பதிவிட்டது பாரத் ஆர்மி. இதில் ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ‘கொஞ்சம் எடிட் செய்ய டைம் கொடுங்க’ என்ற கேப்ஷனை போட்டிருந்தது.

இந்த ட்ரோல் யுத்தத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேலும் இணைந்து கொண்டார். வரும் நவம்பர் 11-ம் தேதி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக கொல்கத்தாவில் விளையாடுகிறது இங்கிலாந்து. அந்த போட்டி முடிந்ததும் நவம்பர் 12-ம் தேதி லண்டனை விரைந்து அடைவதற்கான வேலையை ஏர் இந்தியா பார்த்துக் கொள்ளும் என குறிப்பிட்டு பார்த்தீவ் படேல் ட்வீட் செய்திருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in