Last Updated : 12 Dec, 2017 01:00 PM

 

Published : 12 Dec 2017 01:00 PM
Last Updated : 12 Dec 2017 01:00 PM

ரஜினி ரஜினியாகவே..!

‘வாயா வார்த்தையா...’ என்று சும்மாவெல்லாம் சொல்லிவிட முடியாது. வெறும் வாயில் இருந்து வார்த்தைகள் மட்டுமே கிடையாது இந்த மந்திரச் சொல். ஒவ்வொருவரும் இந்த வார்த்தையைச் சொல்லும்போது, ஒருவிதப் புத்துணர்ச்சி தொற்றிக்கொள்வதை உணர்ந்திருப்பார்கள். உணர்ந்துதான் சொல்லியிருப்பார்கள். அந்தப் புத்துணர்ச்சியின் இன்னொரு பெயர்... எல்லோரும் உச்சரிக்கும் பெயர்... ரஜினிகாந்த்!

கே.பாலசந்தர் தீர்க்கதரிசிதான். ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் இழுத்துக் கொள்ளும் காந்தம் என்று ரஜினியைப் பார்த்த மாத்திரத்திலேயே அறிந்திருக்கிறார். சொல்லப்போனால், சிவாஜி ராவ் எனும் காந்தம், பாலசந்தரை இழுத்துக் கொண்டதால், ஈர்த்ததால் ஆன பலன்... நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

இந்தப் பட்டமும் சும்மா ஒன்றும் கிடைத்துவிடவில்லை. ‘இந்தா வைச்சுக்கோ’ என்று தூக்கிக் கொடுத்துவிடவில்லை. மிகப்பெரிய அசுர உழைப்புக்குக் கிடைத்த பலன் இது. தனித்துவமான ஸ்டைலுக்கும் அவரின் வேகமான நடைக்கும் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டுதான் என்றாலும் அவரின் தேன்மிட்டாய் பேச்சுக்கும் முக்கியமாய் அந்தக் கண்களுக்குமாய் கிடைத்த பரிசு... சூப்பர் ஸ்டார் பட்டம்!

எம்.ஜி.ஆரை ரொம்பப் பிடிக்கும் எனக்கு. ஆனால் சினிமா தெரிய தெரிய, அவர் சினிமா விட்டு விலக, ஐந்தாவது படிக்கும் போது, ரஜினி எனக்கு ஹீரோவானார். எங்களின் காலம், எம்.ஜி.ஆர் - சிவாஜி யுத்தம் முடிந்து, கமல் - ரஜினி சண்டை மூண்ட காலம். பின்னாளில், பழைய சிவாஜி படங்கள் பிடித்துப் போக, அப்படியே கமலுக்கு யு டர்ன் அடித்துச் சென்றது வேறுவிஷயம்.

ஆனால், தமிழ் கூறும் நல்லுலகுக்கு ரஜினி ஆகச் சிறந்த போஷாக்கு. வைட்டமின். சொல்லப்போனால், வைட்டமின் ‘ப’. அதாவது பணம் காய்ச்சி மரம். ரஜினியின் சுமாரான படங்கள் என்று இப்போது நாம் பட்டியலிடுகிற படங்கள் கூட, மிகப்பெரிய வசூலை வள்ளலென வாரித் தந்திருக்கிறது.

என் பள்ளித் தோழன் தீவிர ரஜினி வெறியன். அப்போது நான் கமலுக்கு மாறியிருந்த காலம். ஆனால் என் மீது கொண்ட பாசத்தால் அவனும் அவன் மீது கொண்ட பிரியத்தால் நானும் எழுதாமலேயே, ஒப்பந்தம் போடாமலேயே சில விஷயங்களை மேற்கொண்டோம். கமல் படம் தோல்வியடைந்து மற்றவர்கள் கலாய்த்தால், அங்கே நண்பன் சிவா, அந்தப் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்டுகளையெல்லாம் அடுக்குவான். அதேபோல் ரஜினிக்காக நான் குரல் கொடுப்பேன்.

கமல் படம் வெளியாகும்போது நான் அழைத்துச் செல்வதும் ரஜினியின் படம் பார்க்க, அவன் கூட்டிப் போவதுமாகக் கழிந்த பால்யங்கள் சுகம். அதற்கு ரஜினி காரணம். ரஜினியும் காரணம்.

'முள்ளும் மலரும்' பார்த்துவிட்டு, ரஜினி மாதிரியே முடியை வளர்த்து, அடிக்கடி தள்ளி விட்டுக் கொண்ட ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். பைரவியும் தாய் மீது சத்தியமும் பில்லாவும் என வெவ்வேறு விதமான கதைகளில் அசத்திய ஆரம்ப கால ரஜினிதான்... இன்றைய பிரமாண்ட ரஜினிக்கு அஸ்திவாரம். விவிதபாரதியில் ‘மை நேம் இஸ் பில்லா’ போட்டால், சவுண்டு வைத்து தெருவே திரும்பிப் பார்க்க அலப்பறையைக் கூட்டியது, நான் மட்டும்தானா என்ன?

ஒருபக்கம் பாலசந்தர், இன்னொரு பக்கம், மகேந்திரன், அந்தப் பக்கம் பார்த்தால், கே.பாலாஜி, இந்தப் பக்கம் தேவர் பிலிம்ஸ் என்று ரஜினி அடித்ததெல்லாம் மாஸ் ஹிட். சூப்பர் ஹிட். இன்றைக்கு இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு இணையான வளர்ச்சி, ரசிகர்கூட்டம், ‘என்ன சொல்வார்... எப்போ சொல்வார்’ என்று பிபி எகிறித் தவித்துக் கிடக்கிறான் தமிழன்.

ரஜினியும் ராதிகாவும் ஷூட்டிங் முடிய நள்ளிரவாகி விட, இரண்டுபேரும் காரில் வந்தார்கள். அது 'ரங்கா' படம் என்று படித்ததாக நினைவு. அந்த நள்ளிரவில், சென்னை மவுண்ட் ரோடில் எல்லாக் கடைகளும் அலுவலகங்களும் மூடியிருந்தன. ஒரு கடை வாசலில் வண்டியை நிறுத்தச் சொன்னார் ரஜினி. இறங்கினார். கடை வாசலுக்கு வந்தார். பாக்கெட்டில் இருந்து சிகரெட் எடுத்தார். பற்றவைத்தபடி இங்கும் அங்கும் நடந்தார். அவருக்கே உண்டான ஸ்டைல் அது.

ராதிகாவுக்கு ஆச்சர்யம்... குழப்பம். ‘என்னாச்சு’ என்று கேட்டார். கண்களில் லேசான கலக்கம். நடுக்கத்துடன் குரல் உடையச் சொன்னார்... ‘பெங்களூர்லேருந்து சென்னைக்கு வந்து, சினிமா சான்ஸ் தேடிட்டிருந்த சமயத்துல, சாப்பிடக் காசு கிடையாது. தூங்கறதுக்கு இடம் கிடையாது. இதோ... இந்தக் கடைவாசல்லதான் பல முறை தூங்கியிருக்கேன்’ என்று சொல்ல... அதிர்ந்துவிட்டார் ராதிகா. அதுதான் ரஜினி.

சினிமா, அறிமுகம், கைநிறைய சம்பளம், பேர், புகழ் என நாளொரு கால்ஷீட்டும் பொழுதொரு சம்பள உயர்வுமாக ரஜினி கிராஃப் ஏறிக்கொண்டே இருக்க... அதைப் புத்திக்குள் ஏற்றிக்கொள்ளவே இல்லை அவர். ஷூட்டிங் முடிந்தால், படம் முடித்துக் கொடுத்தால், கண்டக்டராக வேலை பார்க்கும் போது, பெங்களூருவில் சுற்றிய போது என பழைய நண்பர்களை அழைத்து, அவர்களுடன் பொழுதைக் கழித்த ரஜினி... பாசநேசத்தின் அடையாளம்.

சம்பளத்தில் கறார் காட்டுவதில்லை. சக நடிகர்களுடன் பந்தா காட்டுவது கிடையாது. மூத்த நடிகர் நடிகைகளை மதிப்பது, படம் முடிந்த கையுடன் ஆன்மிகத் தேடல்... என வாழ்க்கையை அழகாகவும் அன்பாகவும் ஆக்கிக்கொண்டிருக்கிற ஆகச் சிறந்த மனிதர் ரஜினிகாந்த். ஆன்மிக குருவான ராகவேந்திரர், சினிமா குருவான கே.பாலசந்தர், செதுக்கிய மகேந்திரன், கைதூக்கி விட்ட நண்பர்கள் என எவரையும் மறக்கவில்லை. அதே மதிப்பு, மரியாதை, பிரியம், பக்தி! அதுதான் ரஜினிகாந்த்.

'பாட்ஷா' இவரை இன்னும் உச்சத்துக்கு ஏற்றியது. சொல்லப்போனால், இவரின் வாழ்க்கையை பா.பி., பா.மு. என்று பிரிக்கலாம். காரணம்... பாட்ஷாவுக்குப் பிறகு இவருடன் ஒட்டிக்கொண்ட அரசியல்!

விழாவில் பேசிய பேச்சு, தீயாய் பற்றிக் கொள்ள... ரஜினி வெர்ஸஸ் ஜெயலலிதா என்றானது. இப்போது ரஜினி சொல்லும் போர் அப்போதே நிகழ்ந்தது. உடனடியாக ஆலோசனைகள் கொடுக்கப்பட்டன. எல்லாமே அரசியல் ஆலோசனைகள். அறிவுரைகள். வியூகங்கள்.

இப்போது ரசிகர்கள் ‘தலைவா வா’ என்கிறார்கள். ஆனால் அப்போது ரசிகர்களுடன் சேர்ந்து மக்களும் எதிர்பார்த்தார்கள். ஆசைப்பட்டார்கள். அந்த விருப்பங்கள், ரஜினி பட ஹிட்டுக்களாக அறுவடை செய்யப்பட்டன என்பது கிளைக்கதை. ஆனால் ரஜினிக்கு அரசியலோ, பதவியோ, ஆட்சியோ ஆள்வதோ பிடிக்கவில்லை. அதுதான் யதார்த்த ரஜினி. அதுதான் உண்மையான ரஜினி.

எந்த ஜெயலலிதாவை எதிர்த்தாரோ அந்த ஜெயலலிதாவைப் புகழ்ந்தும் பேசினார். எந்தக் கருணாநிதி மூப்பனார் கூட்டணி உருவாகக் காரணமாக இருந்தாரோ... அந்த ஆட்சியையே சரியில்லை என்றும் ஒருகட்டத்தில் போட்டுடைத்தார். இந்த நிமிடம் வரை அரசியலுக்கு அவர் வரவில்லை. வழக்கம்போலவே அவர் வருவாரா கேள்வி மட்டும் சிந்துபாத் லைலா கதைப் போல் தொடர்கதையாகி, விடுகதை போல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் ரஜினியைச் சுற்றியே மையம் கொண்டிருக்கிறது அரசியல் புயல்.

நின்றால் ஸ்டைல், நடந்தால் ஸ்டைல், பேசினால் ஸ்டைல். பார்த்தால் ஸ்டைல் என்றிருந்த காலம் போய், நின்றால், நடந்தால், பேசினால், பேசாது மெளனம் காத்தால், பார்த்தால் என எல்லாமே அரசியல் சூழ் ரஜினி உலகாகிவிட்டது இன்றைக்கு!

எங்களுடன் வாங்க... நாங்க கியாரண்டி என்று எல்லாக் கட்சிகளும் தங்கள் பக்கம் இழுக்க வலை வீசுகின்றன. என்ன செய்தார் வருவதற்கு... என்று சில கட்சிகள் கொம்பு சீவிக் காத்திருக்கின்றன. வருவார் என்று ஒருசாராரும் வரமாட்டார் என்று இன்னொரு கூட்டமும் இப்போதும் பேசிக்கொண்டிருப்பதற்கு பெயரும் அரசியல்தான்... இது ரஜினி அரசியல்!

ஆனால் இன்று வரை படம் முடிவு செய்கிறார். நடிக்கக் கிளம்புகிறார். நடிக்கிறார். நடுவே உடல்நலனில் அக்கறை செலுத்துகிறார். குடும்பத்துடன் செலவழிக்கிறார். பேரக்குழந்தைகளைக் கொஞ்சுகிறார். முக்கியமாக நண்பர்கள் சூழ பொழுதைக் கழிக்கிறார். இது ரஜினியின் உலகம்

12.12.17. தமிழ்நாடே குதூகலமாகும் நாள். வருடந்தோறும் இப்படித்தான் ரஜினி புகழ் தெரு போஸ்டர் தொடங்கி, இணையதளம், முகநூல், டிவிட்டர் என்று எல்லா இடங்களிலும் ரஜினி புகழ் நாலாதிசையெங்கும் பரவி, வாழ்த்துகளாக மலர்ந்திருக்கும். இன்றைக்கும் அப்படித்தான்!

ரஜினி பிறந்த நாள். அவர் இன்னும் இன்னும் ஆரோக்கியத்துடன் இருக்கப் பிரார்த்தனை செய்வோம். நோய் நொடியில்லாமல், பழைய வேகத்துடன் அதே உத்வேகத்துடன் உற்சாகமாய் இருந்து, நம்மையெல்லாம் உற்சாகப்படுத்தட்டும். எழுபதுகளில் தொடங்கி இன்றுவரை வசூல் சக்கரவர்த்தியாக இருந்து, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் முதலாளிகள், கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்தவர்கள், வண்டி பாஸ் போடும் ஊழியர்கள் தொடங்கி... ஒட்டுமொத்த ரசிகக்கூட்டத்தை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் ரஜினி, அந்த வேலையை இன்னும் இன்னும் செய்து, கொடி உயரப் பட்டொளி வீசி ஜெயித்துக் கொண்டே இருக்கட்டும். ரஜினி அப்படித்தான். அப்படியெல்லாம் இருந்தால்தான் ரஜினி. இதுவே ரஜினி ஸ்டைல். ரஜினியின் லைஃப் ஸ்டைல்.

ரஜினியை ரஜினியாகவே, சூப்பர் ஸ்டாராகவே இருக்கவைப்பதுதான், அவர் விருப்பப்படி அவரைச் செய்யவிடுவதுதான்... இந்தப் பிறந்தநாளில் அவருக்குத் தரும் பரிசு..! உண்மையான பரிசு!

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x