Published : 06 Nov 2017 12:43 PM
Last Updated : 06 Nov 2017 12:43 PM

நெட்டிசன் நோட்ஸ்: கார்ட்டூனிஸ்ட் பாலா கைது- நாளை நாமா?

தமிழக முதல்வர், நெல்லை ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் ஞாயிற்றுக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். இதனை விமர்சித்து நெட்டிசன்கள் தொடர்ந்து தங்களின் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Hansa Hansa

நாம் எவருமே கற்காத ஒரு பாடத்திற்கு கார்டூனிஸ்ட் பாலா பலியாகி இருக்கிறார். சட்டப்படி அவர் செய்தது தவறே.

ஆட்சியர் என்பவர் அரசு ஊழியர். அவர் அரசியல்வாதி அல்ல. ஆட்சியரும் தவறு செய்தார் என்பதைச் சொல்ல விரும்பி இருந்தால், இதே அளவு கோபத்தை வேறு வகையில் காட்டி இருக்கலாம். இது பேச்சுரிமையில் வராது. (சட்டத்தை மட்டும் வைத்துப் பேசுகிறேன்)

மீண்டு வரவும்.

M.m. Abdulla

கேள்வி : கார்ட்டூனிஸ்ட் பாலா கைது குறித்து?

பதில் : சில ஆண்டுகள் முன்னர் சிங்களப் பத்திரிக்கை ஒன்று ஜெயலலிதாவை அரை நிர்வாண நிலையில் ஆபாசமாக கார்ட்டூன் இட்டபோது " இதற்குப் பெயர் கருத்து சுதந்திரம் அல்ல காவாலித்தனம்" என்று சொல்லி தமிழகத்தில் அதை முதலில் கண்டித்தவர் திமுக தலைவர் கலைஞர்.

நந்தன் ஸ்ரீதரன்

பாலாவுக்கும் எனக்கும் கருத்தியல் ரீதியாக நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆனாலும் கருத்து சுதந்திரத்தை நான் மதிக்கிறேன். அந்த மூன்று பேரையும் பாலா அம்மணமாக வரைந்து விட்டார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். நாட்டின் அதிபர்களையே அம்மணமாக வரைந்த கார்ட்டூன்கள் உள்ளன என்பதை எப்போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

பாலாவின் கைதை ஏற்கெனவே வட செய்தி நிறுவனங்கள் பெரிதாக்கத் துவங்கிவிட்டன.. நீங்கள் கலைத்தது சிலந்திக் கூடல்ல. தேன் கூடு..

N Vasanthakumar

கைதிற்கு பிறகு: இனியும் வரைவேன், இதை விட அதிகமாக வரைவேன்- பாலா.

vinoth rajadurai @vinothrajadurai

ஒரு நாட்டின் கலைஞர்கள் எப்போது அடக்குமுறைக்கு உள்ளாகிறார்களோ அப்போதே அழிவு ஆரம்பித்துவிட்டது. கார்ட்டூனிஸ்ட் பாலா கைது..

KM Meeran

கருணாநிதி பூரண நலத்துடன் இருந்ததால் முதல் கண்டனம் அவருடையதாகத்தான் இருக்கும்.

Valthoose Michal

பல கைது, சில மரணம் இவைகள் எப்போதும் விமர்சனங்களை விடாது பிரசவிக்கும். அப்படியான இன்னொரு கைது கார்ட்டூன் பாலா..

கருத்து சுதந்திரம் தேவைதான். டயானாக்கள் உயிரை பறிக்கும் அளவுக்கு வரம்பு மீறாமல்...

நிச்சயம் கண்டனமும் தேவைதான். ஆட்சியாளர்களை விமர்சித்தால் சுட்டுக் கொல்லும் போதும் கைது செய்து மிரட்டும் போதும்..!

Araathu R

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது மிக மிக தவறு ! அதே நேரத்தில் அந்த கார்ட்டூனில் விஷயம் இல்லை. நடந்த அந்த தீக்குளிப்பு தற்கொலைக்கு , கார்ட்டூனில் இருக்கும் யாரும் பணம் வாங்கிக்கொண்டு , சும்மா இருக்கவில்லை. பிரச்சனை வேறு என்று தெரிகிறது. அலட்சியம் என்ற வகையில் வேண்டுமானால் கார்ட்டூன் போட்டு இருக்கலாம். வேறு பல விஷயங்களில் பணம் விளையாடுகிறது. அது வேறு.

கார்ட்டூன் ஒரு பிரச்சனையை மையமாக வைத்து போடுகையில் சுரீர் என்று இருக்க வேண்டும் , அதே சமயம் மீனிங்ஃபுல்லாக இருக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் கைது தவறு.

விஷ்வா விஸ்வநாத்

இன்று பாலா கைதாகி இருக்கலாம், நாளை அவரின் கருத்துக்கு எதிரானவர்க்கும் இதே நிலை வரலாம். எனவே, எதிர் வீட்டுக்காரன் வாசலுக்கு மழை வெள்ளம் வந்ததை ரசிக்காதீர்... அந்த வீட்டிற்கு எதிரேதான் உங்கள் வீடும் உள்ளது.

Michael Amalraj

பாலா...?- இன்னொரு மெர்சல்தான்.

ஜெயிப்பார், பிரபலமாவார்.

Vincent Raj

பாலா கோபத்தின் நீதி உணர்ச்சியை மதிக்கிறேன். ஆனால் இப்படி நிர்வாணமாக வரையலாமா? என்கிற குரல் எழுகிறது. கண்டிப்பாக எனக்கும் இது போன்ற கார்ட்டூன் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் பாலாவின் நீதி உணர்ச்சி மீதும் அவரது கோபத்தின் மீதும் அதிக அன்பு இருக்கிறது.

இது அவதூறு. ஆகவே அவர் மீது 501 இ.த.ச.கீழ் வழக்கு பதிவு செய்து இருக்கிறோம் என்கிறார்கள். ஒப்புக்கொள்ளுகிறேன். என் கேள்வி என்னவென்றால் அந்த குற்றம் என்பது பிணையில் வர கூடியது. கைது செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஜாமீன் உண்டு. அதுவும் ஞாயிறன்று ஏன் கைது செய்ய வேண்டும்?

Vijay Sivanandam

கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.

இன்று கார்டூனிஸ்ட் பாலா...

நாளை அது நாமாகக் கூட இருக்கலாம்...

கே. என். சிவராமன்

திமுகவையும் கலைஞரையும் தனிப்பட்ட முறையில் இழிவுப்படுத்துவதையே தன் முழு நேர கார்ட்டூன் தொழிலாகக் கொண்டவர் பாலா. அப்பொழுதெல்லாம் இணையதள திமுக ஆதரவாளர்களும் அபிமானிகளும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். தரம் தாழ்ந்து வரம்பு மீறி பாலாவை விமர்சித்திருக்கிறார்கள்.

ஆனால் அவரை கைது செய்து கருத்து சுதந்திரத்தை நசுக்க நினைத்ததுமில்லை; முற்பட்டதுமில்லை. இப்போது, தான் வரைந்த கார்ட்டூனுக்காக பாலா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கருத்து சுதந்திரத்தை நசுக்கி இருப்பது தமிழக அரசு. அப்படியிருக்க பாலாவின் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் பலர் / சிலர் இணையதளத்தில் இயங்கும் திமுக ஆதரவாளர்கள் + அபிமானிகளை இதற்கு குற்றம் சாட்டுவதேன்?

D S Gauthaman

ஒரு விதத்தில், தனது மாதாந்திர வருமானம் தரும் பணியிலிருந்து விலகி, சுதந்திர உணர்வோடு புதிதாக நிறுவனம் தொடங்கி, அதனை அனைவரிடத்திலும் அறிமுகம் செய்ய சிரமப்பட்ட அவருக்கு, இந்த கைது நடவடிக்கை பேருதவியாகத்தான் இருக்கும். கார்ட்டூனிஸ்ட் பாலாவையும், அவரது கார்ட்டூனையும் பிரபலப்படுத்திய அரசுக்கு நன்றி தான் சொல்லணும்!

thirumurugan @thiruja

டியர் கலெக்டர் , இந்த வேகத்தை கந்துவட்டி கும்பலிடம் காட்டியிருந்தீர்களேயானால் 4 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். #கார்ட்டூனிஸ்ட்_பாலா

டி.வி.எஸ். சோமு

பாலா கைதுக்கும் அந்த கார்டூனுக்கும் கண்டனங்கள்..

நெல்லையில் பெறப்பட்ட புகாருக்கு அம்மாவட்ட காவல்துறையினர் சென்னை வந்து பாலாவை கைது செய்திருக்கிறார்கள். இதுபோன்ற சமயங்களில் உள்ளூர் (சென்னை மாவட்ட) காவல்துறையினரை தொடர்புகொண்டு அவர்களது உதவியுடன் கைது செய்ய வேண்டும். இதில் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை. ஆக இதுவும் சட்டத்துக்குப் புறம்பான செயலே.

அதே நேரம் பாலாவின் அந்த கார்டூனும் ஏற்கத்தக்கது அல்ல. "தவறு செய்தவர்களைத்தானே நிர்வாணமாக வரைந்தார்" என்பவர்கள், தங்களது தவறுகள் குறித்து கேள்வி கேட்டுக்கொள்ளட்டும். அவர்களை நிர்வாணமாக கார்டூன் வரைந்தால் அவர்களது மற்றும் அவர்களது குடும்பத்தினர் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் சிந்திக்கட்டும்.

இப்படி எழுதுவதும், வரைவதும் அவரவர் மனநிலையையே வெளிப்படுத்துகிறது. பாலாவின் கைது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கடந்து எனது இந்த எண்ணத்தையும் பதிய விரும்புகிறேன்.

Shan Karuppusamy

பாலாவின் சில கார்ட்டூன்களை நான் வெளிப்படையாக கண்டித்திருக்கிறேன். தலைவர்களின் உடல் குறையை அல்லது தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப்படுத்தும் விதமானவை அவை. ஆனால் சர்ச்சைக்குள்ளான அந்த கேலிச்சித்திரம் அவற்றிற்கு அருகில் கூட வராது. உண்மையில் வேறு பல படங்களுக்கு பாலா மீது வழக்குத் தொடர்ந்திருக்க நிறையவே முகாந்திரம் உண்டு. ஆனால் அப்போதெல்லாம் நடக்காத ஒன்று இப்போது நடந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. தற்போதைய அரசின் பதற்றத்தையே இது காட்டுவதாகத் தோன்றுகிறது.

பாலாவின் அந்தப் படத்தைப் பார்த்து நானும் முகம் சுழித்தேன். வேறு விதமாகவும் அரசின் கையாலகாத்தனத்தை வெளிப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அது பாலாவின் படைப்பு உரிமை. அது தாழ்ந்த ரசனை என்று கண்டிப்பது வேண்டுமானால் நிச்சயமாக நமது உரிமையாக இருக்கும். முதல்வர் உட்பட இதனால் கவுரவக் குறைவு ஏற்பட்டதாக நினைக்கும் அனைவரும் அவர் மீது வழக்குத் தொடரலாம். அவர் அதை நீதிமன்றத்தில் சந்திக்கட்டும். ஆனால் தனிப்படை குற்றப்பிரிவு போலீசாரை விட்டு கைது செய்து அடைக்கும் அளவுக்கான அவ்வளவு பெரிய குற்றவாளியா அவர்?

அவருடைய படங்களை நீங்கள் ஆதரிக்கவேண்டாம். அவை அவருடையவை. ஆனால் அந்தப் படங்களை உருவாக்கும் அவருடைய உரிமைக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அது நம் அனைவருக்குமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x