Published : 07 Dec 2022 06:38 AM
Last Updated : 07 Dec 2022 06:38 AM

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ டிச.8 - 14

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை: ராசியில் சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), சந்திரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன் - விரைய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் என கிரகநிலை இருக்கிறது.

பலன்: இந்த வாரம் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக் கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக் கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். பெண்களுக்கு முயற்சிகள் தாமதப்படும். கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.

பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.

*****************
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது.

பலன்: இந்த வாரம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். அவற்றை லாவகமாக கையாண்டு சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயங்களை பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தொழிலில் முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும்.

*****************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை: ராசியில் குரு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது.

பலன்: இந்த வாரம் சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாக பேசுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும்.

அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: விநாயகரை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x