Published : 14 Sep 2022 04:47 PM
Last Updated : 14 Sep 2022 04:47 PM

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.15 - 21 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் கிரகநிலை - ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் கேது - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சனி(வ) - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்தமாதம் 17-ம் தேதி - புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

இந்தமாதம் 17-ம் தேதி - சூர்யன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: ராசிநாதன் செவ்வாயின் பாதசார சஞ்சாரத்தால் உங்கள் வாழ்வின் முன்னேத்திற்கான வழிகள் பிறக்கும். தொழில்-வியாபாரம் ஏற்றம் தரும் வகையில் இருக்கும். தேக்கி வைத்துள்ள பொருட்களை விற்பனை செய்ய முற்படுவது நல்லது. நல்ல வாடிக்கையாளர்கள் கிடைக்கும் நேரமாக இது இருக்கிறது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு சற்று அதிகமாக இருக்கும்.

சளைக்காமல் கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். சக பணியாளர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே சுமூகமான உறவு இருக்கும். குடும்பத்துடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். பெண்களுக்கு வெளியூர் செல்ல வேண்டி வரலாம்.

நீண்ட நாட்களாக தேடிய பொருள் ஒன்று கிடைக்கும். கலைத்துறையினருக்கு மனதில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் அகலும். அரசியல்வாதிகளுக்கு வரவேண்டிய பணம் தேடி வரும். மாணவர்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புவதன் மூலம் உங்கள் மதிப்பு உயரும்.

அஸ்வினி: ரத்தம் சம்பந்தமான உறவுகளால் அனுகூலம் பிறக்கும்

பரணி: குழந்தைகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

கிருத்திகை: உடல் ஆரோக்கியம் நலம் பெறும்.

பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வந்தால புது உற்சாகம் பிறக்கும்.

***********

ரிஷபம் கிரகநிலை - ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் குரு(வ) - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்தமாதம் 17-ம் தேதி - புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

இந்தமாதம் 17-ம் தேதி - சூர்யன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: ராசியில் செவ்வாய் இருக்கிறார். ராசிநாதன் சுக்கிரன் சுய சாரம் பெற்றிருக்கிறார். மற்றவர்களைப் பற்றி புரிந்து கொள்ள பல சூழ்நிலைகள் உருவாகும். தொழில் - வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறைந்து உங்கள் விற்பனை அமோகமாக இருக்கும். வாடிக்கையாளர்கள் விரும்பி உங்கள் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள்.

மேலதிகாரிகளின் சில வேலைகளை நீங்கள் முன்னின்று செய்ய வேண்டியதிருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். உடன் பணிபுரிபவர்களுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். குடும்பத்தில் தெய்வீக காரியங்கள் அதிகரிக்கும். அதற்கான செலவுகளும் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். சிரத்தை எடுத்து செய்தால் நல்ல முறையில் திருமணம் நடந்தேறும்.

பெண்கள் உணர்வுப்பூர்வமான முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது. குழந்தைகள் விசயத்தில் மகிழ்ச்சியை எதிர்பார்க்கலாம். கலைத்துறையினருக்கு பண விஷயங்களை நீங்கள் உங்கள் நேரடி பார்வையில் வைத்துக் கொள்வது அவசியம். அரசியல்வாதிகள் மேலிடத்திலிருந்து நல்ல செய்தி வரும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவது நல்லது. பொழுது போக்கு, வேடிக்கை நிகழ்ச்சிகளில் கவனத்தை சிதற விடாமல் இருப்பது நல்லது.

கிருத்திகை - 2, 3, 4 பாதங்கள்: எதிலும் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும்.

ரோகினி: பணப் பற்றாக்குறை நீங்கும்.

மிருகசீரிஷம் - 1, 2 பாதங்கள்: எடுக்கும் காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.

பரிகாரம்: மஹாலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி வர மனம் ஒரு நிலைப்படும்.

***********

மிதுனம் கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்தமாதம் 17-ம் தேதி - புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

இந்தமாதம் 17-ம் தேதி - சூர்யன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: ராசிநாதன் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். மனதிற்கு நிம்மதியான காலகட்டமாக இருக்கும். பெரியோர் பேச்சு கேட்டு நடப்பது சிறந்தது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தொழிலில் சக பங்குதாரர்களால் இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். உங்கள் பேச்சுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து தொழிலை விரிவுபடுத்துவது பற்றி பேச்சை தொடங்குவார்கள் நன்மையில் முடியும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இருந்து வந்த பனிச்சுமை குறையும். சக பணியாளர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். வேலை விஷயமாக வெளியூர் வெளிமாநிலங்களுக்கு சென்று வர வேண்டி வரும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்வர்.

பெண்கள் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கலைத்துறையினர் மிக அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் பெற்றோர்களிடம் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். கல்வி அல்லாது பிற துறைகளிலும் சாதிப்பீர்கள்.

மிருகசீரிஷம் - 3, 4 பாதங்கள்: மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும்.

திருவாதிரை: நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

புனர்பூசம் - 1, ,2 ,3 பாதங்கள்: மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.

பரிகாரம்: விஷ்ணு மந்திரங்களை ஜெபித்து வர வாழ்வில் வளம் உண்டாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x