Published : 13 May 2022 06:51 PM
Last Updated : 13 May 2022 06:51 PM

துலாம், விருச்சிகம், தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! மே 12 முதல் 18ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - சப்தம ராசியில் சூர்யன், புதன்(வ), ராகு என கிரகநிலை இருக்கிறது. இம்மாதம் 15ம் தேதி - சூர்யன் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 17ம் தேதி - செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். அதே வேளையில் திட்டமிடாத செயல்களால் வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உறவினர்கள் வகையில் வீண் கருத்து மோதல்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.

லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. மேலிடம் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு கேட்பது சிறந்தது. சக பணியாளர்களிடம் மேலிடம் பற்றி குறை கூறாமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியலில் உள்ளவர்களுக்கு வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

பரிகாரம்: செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமையில் மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
*****************************
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) - தைரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - விரய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது. இம்மாதம் 15ம் தேதி - சூர்யன் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 17ம் தேதி - செவ்வாய் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் மனதில் உற்சாகம் ஏற்படும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஏதாவது சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் அகலும். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போதும் வாங்கும்போதும் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். பணத்தை கையாளும்போது கவனம் தேவை. பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. பாடங்களைக் கவனமாக படிப்பது நல்லது.

பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்பப் பிரச்சினைகள் தீரும்.
************************


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) - தனவாக்கு ஸ்தானத்தில் சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது. இம்மாதம் 15ம் தேதி - சூர்யன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 17ம் தேதி - செவ்வாய் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்குவன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயரும், புகழும் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். புதிதாக வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும்.

இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கலாம். பெண்களுக்கு திட்டமிட்டபடி எதையும் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். அரசியலில் உள்ளவர்கள் அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.
*****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x