Last Updated : 20 Apr, 2023 03:48 PM

 

Published : 20 Apr 2023 03:48 PM
Last Updated : 20 Apr 2023 03:48 PM

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 | கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு எப்படி?

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக தனவாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக சுகஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ரண ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்கள்: குடும்ப பாசத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் குணம் கொண்ட கடக ராசிக்காரர்களே! நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த குரு பெயர்ச்சியால் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளில் சாதகமான நிலையே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைபடாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும்.

குடும்பத்தில் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும். பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரத்து கூடும். மனக்குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். அமைச்சர்களின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். சககலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

புனர்பூசம்: இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.

பூசம்: இந்த குரு பெயர்ச்சியால் எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும்.

ஆயில்யம்: இந்த குரு பெயர்ச்சியால் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழே இருப்பவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளால் நன்மை ஏற்படும்.

பரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக ராசியில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தைரிய வீரிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்கள்: எந்த சூழ்நிலையிலும் தன்மானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் சிம்ம ராசியினரே! இந்த குருப்பெயர்ச்சியால் சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். பணவரத்து உண்டாகும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைத்தபடி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும். பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் போட்டி பொறாமைகளை எதிர்கொண்டாலும் மக்களின் ஆதரவைப் பெறமுடியும். கட்சிகளில் உட்பூசல்கள் ஏற்பட்டாலும் உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எதிலும் சற்றுச் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சற்று தாமதமாகக் கிடைத்தாலும் நல்ல வாய்ப்புகளாக அமையும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் உடல்நலக் குறைவுகளையும் உண்டாக்கும். மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.

மகம்: இந்த குருப்பெயர்ச்சியால் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச்செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

பூரம்: இந்த குருப்பெயர்ச்சியால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

உத்திரம்: இந்த குருப்பெயர்ச்சியால் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சினை இருக்காது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்வதும் செம்பருத்தி, அரளிமலர்களால் சூரியனை அர்ச்சனை செய்வதும் வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக அயன சயன போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், பார்க்கிறார்.

பலன்கள்: உழைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வாழ்வில் வெற்றி பெறும் கன்னி ராசிக்காரர்ளே! இந்த குருப்பெயர்ச்சியால் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். எப்போதோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.

குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியபடும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.

அரசியல்வாதிகளின் பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய காலமாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பதவிக்கு இருந்த இடையூறுகள் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இதுவரை வராமல் தடைப்பட்ட பணத்தொகை கைக்கு வந்துசேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் மேன்மைகளும் உண்டாகும். உடனிருக்கும் சக கலைஞர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.

உத்திரம்: இந்த குரு பெயர்ச்சியால் கடந்த காலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேருவர். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

அஸ்தம்: இந்த குருப்பெயர்ச்சியால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

சித்திரை: இந்த குருப்பெயர்ச்சியால் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தங்களைப் பாராயணம் செய்து வர எல்லா நன்மைகளும் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அனைத்து ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

> மேஷம், ரிஷபம், மிதுனம்
> கடகம், சிம்மம், கன்னி
> துலாம், விருச்சிகம், தனுசு
> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x