Published : 16 Jan 2023 06:30 PM
Last Updated : 16 Jan 2023 06:30 PM

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 - மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு எப்படி?

என்ன ஜோதிடரே! வாரப் பெயர்ச்சி, வருடப் பெயர்ச்சி, வக்ரப் பெயர்ச்சி என்று கிரகப் பெயர்ச்சிகளோடு நீங்களும் ஓடிக்கொண்டே இருந்தீர்களா? சரி! பகவான் எப்போது பெயர்ச்சி ஆகிறார்? கோயிலில் இருக்கும் இறைவனா அல்லது கோள்களில் இருக்கும் பகவானா? திருவிழா நேரத்தில் பகவான் (சுவாமி) பெயர்ச்சியாகி திருவீதி உலா வருவது எல்லோருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். திருநள்ளாறுக்காரர் எப்போது, என்று இடம் பெயருகிறார் என்று கேட்க வந்தேன்!

சுற்றி வளைக்காமல் சனிப்பெயர்ச்சி எப்போது என்று நேரடியாக கேட்கலாம் அல்லவா? எல்லாம் ஒரு பயம் தான்! அவரைப் பார்த்து பயமா! இல்லை.. ஒரு மரியாதை தான். கடந்த காலங்களில் பட்டதை நினைத்துப் பார்த்தால் இப்பவும் மனது படபடக்குது. அதான். அளவுக்கு அதிகமாக ஆசைப்படாமல் அடுத்தவன் சொத்தை அபகரிக்காமல், வாரி அடிச்சு வழிச்சி சுரண்டி சாப்பிடாமல் கடவுள் கொடுத்த காற்று, நீர், நிலம், காசு பணமெல்லாம் பிறரும் அனுபவிக்கட்டும். நம் வேலையை ஒழுங்காக பார்த்துக் கொண்டு விட்டுக் கொடுத்துப் போனால்.. அவர் ஒதுங்கிப் போய் விடுவார்.

வரும் 17.01.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி 4 நிமிடத்தில் கும்ப ராசிக்குள் சனிபகவான் அமர்கிறார். நிகழும் சுபகிருது வருடம் தை 3-ம் நாள் கிருஷ்ணபட்சத்து தசமி திதி, விசாகம் நட்சத்திரம், கண்டம் நாமயோகத்தில், பவம் நாமகரணத்தில், நேத்திரம், ஜுவனம் நிறைந்த மந்தயோகத்தில் காணும் பொங்கல் திருநாளில் நம்மைக் காப்பதற்காக மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் குடி பெயர்கிறார். வாக்கியப் பஞ்சாங்கப்படி 29.03.2023 அன்று மாறுகிறார்.

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்): தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் உங்களை சீண்டினால், எரிமலையாய் பொங்கி எழுவீர்கள். அரண்மனையில் வேலைக்காரனாய் இருப்பதை விட குப்பத்தில் தலைவனாய் இருப்பதை விரும்புவீர்கள். எவ்வளவு பேரம் பேசினாலும் கொள்கை, குறிக்கோளை விட்டு விலகமாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உத்தியோகத்தில் பிரச்சினைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் லாப வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். மனத்தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

எதிலும் ஆர்வம் பிறக்கும். குழந்தையில்லா தம்பதியருக்கு இனி குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு, மரியாதை கூடும். சகோதரர்கள் நெருங்கி வருவார்கள். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு. உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் சற்று உடல் நலம் பாதிக்கும்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் புதிய வாகனம் வாங்குவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

உங்கள் பாக்ய-விரயாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 07.04.2024 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும். தந்தையாரின் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். மகளின் கல்யாணத்தை சீரும் சிறப்புமாக நடத்தி முடிப்பீர்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபமும், உத்தியோகத்தில் உயர்வும் உண்டாகும்.

இல்லத்தரசிகளே! விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் சேரும். கணவர் உங்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பார். அலுவலகம் செல்லும் பெண்களே! தேங்கிக் கிடந்த பணிகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் கனவுகள் நனவாகும். உங்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். பெற்றோரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள்.

வியாபாரிகளே, தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர்களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.

உத்தியோகஸ்தர்களே, உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கணினி துறையினர்களே! பணி செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.

இந்தச் சனிப்பெயர்ச்சி திக்கித்திணறி தவித்துக் கொண்டிருந்த உங்கள் வாழ்வில் திடீர் திருப்பத்தையும், புதிய அத்தியாயத்தையும் தொடங்கி வைப்பதாக அமையும்.

பரிகாரம்: திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகைலாய நாதர் சந்நிதியில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானை அஸ்தம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் நீங்கள் பழி பாவத்துக்கு அஞ்சி நேர்பாதையில் செல்பவர்கள். நுண்ணறிவும், பேச்சு சாதுர்யமும், எடுத்த வேலையை முடிக்கும் வல்லமையும் கொண்டவர்கள் நீங்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் கையில் காசு தங்காமல் கடன் பிரச்சினைகளாலும், மனக் கவலைகளாலும் கலங்கடித்த சனி பகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 10-ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். இனி நீங்கள் விஸ்வரூபம் எடுப்பீர்கள். தொட்டது துலங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கியில் கடன் கிடைக்கும். பேசாமல் இருந்து வந்த சகோதரர் இனி பேசுவார். குழந்தை பாக்கியம் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கர்ப்பப்பைக் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சப்தம-விரயாதிபதியான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் வீடு, மனை சேரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் திடீர் பணவரவு, யோகம் உண்டாகும். திருமணம், கிரகப்பிரவேசம் என வீடு களைகட்டும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலை கிடைக்கும். நவீன வாகனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள்.

உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 07.04.2024 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் திடீர் செல்வாக்கும், பணப்புழக்கமும், தங்க ஆபரண சேர்க்கையும் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதாயமடைவீர்கள்.

இல்லத்தரசிகளே! உற்சாகமே இல்லாமல் சோர்வாகவும், சலிப்பாகவும் இருந்தீர்களே! இனி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! உங்களின் நிர்வாகத் திறமையை கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயரும். சம்பளம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களே! காதலில் குழப்பம், கல்வியில் தோல்வி, கல்யாணத்தில் தடை என அடுக்கடுக்கான பிரச்சினைகளால் நிலைக் குலைந்துப் போனீர்களே! இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். வீட்டில் பார்க்கும் வரனே முடியும்.

வியாபாரிகளே, முடங்கிக் கிடந்த நீங்கள் ஆர்வம் அடைவீர்கள். போட்டிகளை முறியடிப்பீர்கள். பழைய கடையை புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். வியாபார நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே, ராசிக்கு 10-ம் வீட்டில் சனி வந்து அமர்வதால் உயர்வு உண்டு. அநாவசிய விடுப்புகளை தவிர்க்கவும். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். மேலதிகாரி உதவுவார். முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. என்றாலும் சாதகமாகவே அமையும். புது சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு.

இந்த சனி மாற்றம் குடத்தில் இட்ட விளக்காய் இருந்த உங்களை கோபுர விளக்காய் ஒளிர வைக்கும்.

பரிகாரம்: பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகரை அருகம்புல் மாலை அணிவித்து சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். வசதி பெருகும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) தும்பைப்பூ சிரிப்பும், பலரை வழி நடத்தும் அளவுக்கு பட்டறிவும், எடுத்த காரியத்தை முடிக்கும் வல்லமையும் கொண்ட நீங்கள் காசு பணத்துக்காக கௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 9-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால் இனி எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். மனதில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை துளிர்விடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். இனி ஓரளவு வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்சினை தீரும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீர்கள். சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டதிபதியும்-லாபாதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பழைய கடனைத் தீர்ப்பதற்கு புது வழி பிறக்கும். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். தொண்டை புகைச்சல், யூரினரி இன்பெக்ஷன், காய்ச்சல் வந்து நீங்கும்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். மகனுக்கு அயல்நாட்டு தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு சொந்தத்திலேயே நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.

07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் சப்தம-ஜீவனாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்திலும் மதிப்பு, மரியாதை கூடும்.
இல்லத்தரசிகளே! தங்க ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். பிள்ளைகள் உதவிகரமாக இருப்பார்கள். மாமனார், மாமியாருடனான கருத்துமோதல்கள் நீங்கும். அலுவலகம் செல்லும் பெண்களே! இனி பணியில் நிரந்தரமாக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்களே! விரைவிலேயே திருமணம் நடைபெறும். மாணவ-மாணவிகளே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள்.

வியாபாரிகளே, மற்றவர் களின் பேச்சைக் கேட்டு தவறாக முதலீடு செய்து கையை சுட்டுக் கொண்டீர்களே! இனி சந்தை நிலவரம் அறிந்து புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, பாசுமதி அரிசி, எண்ணெய் வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகத்தில் இனி உங்கள் கை ஓங்கும். உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகள் வந்து அமையும்.

இந்த சனி மாற்றம் உங்களை தலை நிமிர வைப்பதுடன், நீண்ட நாள் ஆசைகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்: விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதையிலுள்ள கல்பட்டு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசாந்த சனீஸ்வரரை புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். வாழ்வில் வளம் பெருகும்.

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) மிரட்டல் உருட்டல்களுக் கெல்லாம் அஞ்சாதவர்களே, யானையின் தும்பிக்கை பலமோ இல்லையோ உங்களின் நம்பிக்கை அசுர பலம் கொண்டது. சமையல் முதல் விஞ்ஞானம் வரை அனைத்தையும் ஆர்வமாய் அறிந்து கொள்வீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப் பாருங்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுப்பது நல்லது. மகனின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். வர வேண்டிய பூர்விக சொத்துப் பங்கை போராடிப் பெறுவீர்கள். கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். பூர்விக சொத்தில் பிரச்சினைகள் வந்து சரியாகும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். அரசு காரியங்கள் தடையில்லாமல் முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உங்கள் சஷ்டமாதிபதியும்-பாக்யாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 07.04.2024 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வாடகை வீட்டிலிருந்து சிலர் சொந்த வீட்டுக்கு குடி புகுவீர்கள்.
இல்லத்தரசிகளே! குடும்பத்தில் பெரிய முடிவெல்லாம் இனி நீங்கள்தான் எடுக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் குறித்து கவலைகள் தலைதூக்கும். அலுவலகம் செல்லும் பெண்களே! விளையாட்டாகப் பேசி வம்பில் சிக்க வேண்டாம். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! விரைவில் திருமணம் முடியும்.

வியாபாரிகளே, போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்சினைகளும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும்.

உத்தியோகஸ்தர்களே, நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

இந்த சனி மாற்றம் செலவுகளிலும், பிரச்சினை களிலும் சிக்க வைத்தாலும் கடின உழைப்பாலும் சமயோஜித புத்தியாலும் இலக்கை எட்டி பிடிக்க வைக்கும்.

பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ள மொரப்பாண்டி எனும் ஊரில் அபய முத்திரையுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீபஞ்சலோக சனீஸ்வரரை பரணி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்): எடுத்த எடுப்பிலேயே எதையும் முடிக்க விரும்பும் நீங்கள் வெற்றி ஒன்றையே இலக்காக வைத்திருப்பீர்கள். ஒரு குடும்பத்தையோ, இயக்கத்தையோ, தொழிற்கூடத்தையோ திறம்பட வழிநடத்தும் தலைமைப் பண்பு உங்களிடம் உண்டு. பேச்சிலே காரத்தைத் தூவினாலும் உங்கள் இதயத்தில் ஈரம் இருந்துகொண்டே இருக்கும்.

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 7-ம் வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். சனிபகவான் 7-ல் அமர்வதால் குடும்பத்தில் வீண் விவாதங்கள் வரக்கூடும். விலை உயர்ந்த பொருட்கள், நகைகளை கவனமாக கையாளுங்கள். மகனின் உயர் கல்விக்காக சிலரின் சிபாரிசை நாடவேண்டியிருக்கும். உத்தியோகம், வியாபாரத்தின்பொருட்டு குடும்பத்தை பிரியவேண்டி வரும். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் விளம்பர மோகத்தில் மயங்கி புது நிறுவனங்களின் சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் வகைகளை பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். மறதியும், பித்தத்தால் தலைச்சுத்தலும் வந்து நீங்கும். சனிபகவான் 4-ம் வீட்டை பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் கையிருப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான அதாவது சுக-பாக்யாதிபதியான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் புதிய சொத்து வாங்குவீர்கள். வேலை கிடைக்கும். வாகனம் அமையும். திருமணம், காதுகுத்து, உபநயனம் என வீடு களைகட்டும்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்ய மாற்று வழி பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியும் - அட்டமாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டங்களில் பிள்ளை பாக்கியம் உண்டாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும்.

இல்லத்தரசிகளே! கணவரின் சின்ன சின்ன கோபங்களையெல்லாம் பெரிதாக்க வேண்டாம். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! சக ஊழியர்களை விமர்சித்து பேசவேண்டாம். வேலைப் பளு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

கன்னிப் பெண்களே! எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோ சிக்காமல் எடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடி வரும். வியாபாரிகளே, கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். கூட்டுத் தொழில் வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். அரிசி-பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகளால் லாபம் வரும். சிலருக்கு பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும்.

உத்தியோகஸ்தர்களே, முன்புபோல் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர்பாராத இடத்துக்கு திடீரென மாற்றப்படுவீர்கள். பழைய அதிகாரிகள் உதவுவார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம்.

இந்த சனி மாற்றம் சில நேரங்களில் உங்களை சூழ்நிலை கைதியாக மாற்றினாலும் அனுபவ அறிவாலும், சமயோஜித புத்தியாலும் பிரச்சினைகளை சமாளித்து சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: திருநள்ளாறில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானை அஸ்தம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். தொழுநோய் மற்றும் காசநோயாளிகளுக்கு உதவுங்கள். தடைகள் நீங்கி நல்லது நடக்கும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) முயற்சியை முதுகெலும்பாக கொண்டவர்களே. குடிசையில் வாழ்ந்தாலும், கோபுரமாய் சிந்திப்பவர்களே. எதிலும் அழகையும், நேர்த்தியையும் விரும்பும் நீங்கள், பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்கமாட்டீர்கள். பணம், பதவி பார்த்து பழகாமல் அனைவரையும் அளவுக்கு அதிகமாக நேசிப்பீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 6-ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகத்தை அள்ளித்தருவார். மனஇறுக்கம், கோபத்தில் இருந்து விடுபடுவீர்கள். இனி உங்களின் வாழ்க்கை பாதையை சீராக அமைத்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும். பக்குவமாகப் பேசி பல காரியங்களை கச்சிதமாக முடிப்பீர்கள். பிள்ளைப்பேறு கிட்டும். மனைவி உறுதுணையாக இருப்பார். தடைபட்டுவந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கவுரவம் கூடும். சனிபகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் வாகனங்களை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள்.
மகான்களின் தரிசனம் கிடைக்கும். சனிபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் திருதியஸ்தானாதிபதியும் - அஷ்டமாதி பதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சகோதரர்களால் மன உளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் மதிப்பு, மரியாதை கூடும். கல்யாணம், காதுகுத்து என வீடு களைகட்டும்.

07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் சுக-சப்தமாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்தி ரத்தில் சனிபகவான் செல்வதால் வீடு மாறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

இல்லத்தரசிகளே! தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! உங்களை நம்பி மேலதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். கல்யாணம் கூடிவரும். பெற்றோர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள்.

வியாபாரிகளே, அதிரடி லாபம் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். பங்குதாரர்கள், வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களே, இனி உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் உண்டு. கணினி துறையில் இருப்பவர்களுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த சனிப் பெயர்ச்சி எங்கும் எதிலும் திடீர் யோகங்களையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: தஞ்சாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். மேன்மேலும் முன்னேறுவீர்கள்.

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பும் நீங்கள், எதிர்நீச்சல் போட்டு பழகியவர்கள். அருவி நீர்போல அதிர்ந்து பேசாமல் பனிநீர் போல பாசமாய் பேசுவீர்கள். தர்மம், நியாயத்தின் பக்கம் நிற்கும் நீங்கள், பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்வீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான், இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 5-ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். யோக பலன்கள் அதிகரிக்கும். சனி பகவான் இப்போது உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்து பேசி மகிழக் கூடிய இனிய நிலை உருவாகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். இனி பணவரவு அதிகரிக்கும். வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசத்தை கோலாகலமாக செய்வீர்கள். உங்களை கண்டும் காணாமல் சென்ற உறவினர்கள், நண்பர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள். 5-ம் இடத்தில் சனி அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டாமல் தோழமையாக பழகுங்கள். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் சரிசெய்து கொள்ளுங்கள். இனி வலி நீங்கி வலிமை கூடும். தாய்மாமன், அத்தை வகையில் அலைச்சல் இருக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். வாகன வசதி பெருகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது. சில நேரங்களில் உங்களையும் அறியாமல் உணர்ச்சி வசப்பட்டு பேசுவீர்கள். கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கை,கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். சனிபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் தனாதிபதியும்-சப்தமாதிபதியும் செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் திடீர் பணவரவு உண்டு. அரசு அதிகாரிகள் உதவுவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த தடைகள் நீங்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு\ களைகட்டும். வெளிநாட்டிலிருப்பவர்களால், ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். நல்ல நிறுவனத்திலிருந்து வேலைக்கு அழைப்பு வரும்.

உங்கள் 3 மற்றும் 6-ம் வீட்டதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 07.04.2024 முதல் 29.03.2025 வரை உள்ளக் காலகட்டங்களில் முயற்சிகள் பலிதமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். என்றாலும் விபத்து, வீண் சந்தேகம், இனந்தெரியாத கவலைகள், மறைமுக எதிர்ப்புகள், வீண் பழி வந்து செல்லும்.

இல்லத்தரசிகளே! குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கணவர் உங்களின் வேலைகளை பகிர்ந்து கொள்வார். மாமியார், மாமனார் உங்களை பெருமை பேசுவார்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! வேலைச்சுமை, மன உளைச்சலிலிருந்து விடுபடுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தரும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை வரக்கூடும். நாட்டமில்லாமல் இருந்து வந்த உயர்கல்வியில் இனி ஆர்வம் பிறக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கும்.

வியாபாரிகளே, பற்று வரவு உயரும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்துக் கொண்டு கொள்முதல் செய்யப் பாருங்கள். கூட்டுத் தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். விளம்பர சாதனங்களை சரியாகப் பயன்படுத்தி விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு. ஏஜென்ஸி, புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபமடைவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களே, அதிகாரிகளே ஆச்சரியப்படும்படி சில கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். கேட்ட இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினி துறையினர்களுக்கு வெளிநாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும்.

இந்தச் சனிப்பெயர்ச்சி குழப்பங்கள், தடுமாற்றங்களில் இருந்து விடுவிப்பதுடன் வெளிவட்டாரத்தில் செல்வாக்கையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: பாண்டிச்சேரிக்கு முன்புள்ள பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆஞ்சநேயரை அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். உயர்கல்விக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவ - மாணவியரின் படிப்புக்கு உதவுங்கள். நினைத்ததை முடிப்பீர்கள்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) மனதில் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசும் நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள். மற்றவர்களை உடனே நம்பி உதவி செய்து, தர்மசங்கடத்தில் சிக்கிக் கொள்வீர்கள். சட்ட திட்டங்களை சரியாக பின்பற்றும் நீங்கள், வரம்பு மீறி பழகமாட்டீர்கள். இலவசமாக எதையும் பெறமாட்டீர்கள்.

இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை பெறுவீர்கள். சனி ஆட்சிப் பெற்று அமர்வதால் குடும்பத்தில் மனைவியின் கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கிக் கொள்வீர்கள். எந்த விஷயத்திலும் கூட்டு வேண்டாம். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. எந்த சொத்து வாங்கினாலும் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது.

அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். தாய்வழி சொத்துகளில் சிக்கல்கள் வரக்கூடும். அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பிள்ளைகள் கொஞ்சம் செலவு வைப்பார்கள். அவர்களின் நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனிபகவான் 10-ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேலை மாறுவீர்கள். புது பொறுப்புகளும் உங்களை நம்பி தரப்படும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும் - சஷ்டமாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கோபத்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வெகுநாட்களாக வராமலிருந்த பணம் இப்போது கைக்கு வரும். பெரிய பதவிகள் தேடி வரும்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் புதிய நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும். உங்கள் பேச்சில் பக்குவம் தெரியும். லோன் மூலம் புது வாகனம் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல இப்போது விசா கிடைக்கும். அடிப்படை வசதிகள் பெருகும்.

உங்கள் பூர்வ புண்யாதிபதியும் - தனாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 07.04.2024 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் தொட்ட காரியம் துலங்கும். பொது விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். குலதெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள்.

இல்லத்தரசிகளே! உடல் எடையை குறைக்க பட்டினி கிடக்காதீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! ஓவர் டைமிலிருந்து விடுபடுவீர்கள். சக ஊழியர்களின் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் வலையில் இப்போது சிக்கிக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கல்யாணம் தடைபட்டு முடியும். மாணவ-மாணவிகளே! விளையாட்டைக் குறைத்து படிப்பில் அக்கறை செலுத்துங்கள். தெரியாதவற்றை வகுப்பாசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அலட்சியப்போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் இனி வேண்டாம்.

வியாபாரிகளே, பண விஷயத்தில் கறாராக இருங்கள். போட்டிகள் அதிகரிக்கத்தான் செய்யும். வாடிக்கையாளர்களை கனிவாக நடத்துங்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும். வேலையாட்களை முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே, சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கணினி துறையினருக்கு பார்வை கோளாறு, தசைப் பிடிப்பு நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும்.

இந்த சனி மாற்றம் வேலைச்சுமையையும், செலவுகளையும் அவ்வப்போது தந்து அலைக் கழித்தாலும் தொலை நோக்குச் சிந்தனையால் துவளாமல் வெற்றி பெறவைக்கும்.

பரிகாரம்: கஞ்சனூர் அருகிலுள்ள திருக்கோடிக் காவலூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபால சனீஸ்வரரை அஸ்வினி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவுங்கள். தடைகள் நீங்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) குறி விலகாத அம்பை போல் குறிக்கோள் தவறாதவர்களே. எவ்வளவு சம்பாதித்தாலும் அலட்டிக்கொள்ளாதவர்களே. உயர்ரக வாகனம், விமானம் என மாறி மாறி பயணித்தாலும், பழைய மிதிவண்டி பயணத்தை மறக்காதவர்களே! மதம் மீறிய மனிதநேயர்களே. மனசாட்சிக்கு பயந்தவர்களே!

ஏறக்குறைய எட்டரை ஆண்டுகளாக உங்களை ஆட்டிப் படைத்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் உங்களை விட்டு விலகி 3-ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். கார் இருந்தும் பெட்ரோல் போட காசில்லை என்ற நிலை மாறும். எதையும் முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். எப்போது பார்த்தாலும் நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று அலைந்து கொண்டிருந்த நீங்கள், இனி ஆரோக்கியம் அடைவீர்கள். நடைபயிற்சி, யோகா, தியானம் என்று மனதை பக்குவப்படுத்திக் கொள்வீர்கள்.

குடும்பத்தில் இனி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பெண்ணுக்கு ஏற்ற நல்ல வரன் அமையும். சொந்தபந்தங்கள் வியக்கும்படி திருமணத்தை முடிப்பீர்கள். சொந்த வீட்டில் குடிப்புகுவீர்கள். பலரின் உள்மனசில் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்துக் கொள்ளாமல் வெளிப்படையாக, வெகுளியாக பேசி சிக்கிக் கொண்டீர்களே! இனி எதிலும் கறாராக இருப்பீர்கள். யாரோ செய்த தவறால் நீங்கள் தலைமறைவானீர்களே, வழக்கில் இனி வெற்றிதான். கடனை நினைத்தும் நடுங்கினீர்களே, கல்யாணம் கிரகப்பிரவேசத்தில் எல்லாம் உங்களை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தார்களே, இனி எல்லோ ரும் ஆச்சர்யப்படும்படி சாதிப்பீர்கள். பலரும் வலிய வந்து பேசுவார்கள். விஐபி அந்தஸ்து பெறுவீர்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்துக்காக அதிகம் செலவு செய்வீர்கள். சில சமயங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொண்டு உங்களை டென்ஷன் படுத்துவார்கள். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். தந்தையாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரயாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சகோதரிக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களை எதிரியாக நினைத்த பலர், இனி உங்களின் நல்ல மனசைப் புரிந்து கொண்டு நட்பு பாராட்டுவார்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். பாதிபணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பெரிய திட்டங்கள் தீட்டி வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர், மாநிலத்தவர்கள் அறிமுகமாவார்கள். வீட்டில் குடிநீர், கழிவுநீர் பிரச்சினைகள் தீரும். உங்களை ஏமாற்றியவர்களை இனங் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வரும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள்.

07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் ராசிநாதனும் - சுகாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டங்களில் தடைபட்ட திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். கல்வியாளர்கள், தொழிலதிபர்களின் உதவி கிடைக்கும். ஷேர் பணம் தரும். அரசாங்கத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் வாங்குவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். அவ்வப்போது பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் விலகும்.

இல்லத்தரசிகளே! உடல் ஆரோக்கியம் மேம்படும். சமையலறை சாதனங்களை புதுப்பிப்பீர்கள். கணவரின் வியாபாரத்தை முன்னின்று நடத்துவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! உங்களின் திறமையை குறைவாக எடைபோட்டவர்கள் வியக்கும்படி சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! கூடிய விரைவில் கெட்டி மேளச்சத்தம் கேட்கும். தடைப்பட்ட கல்வியை தொடர்வீர்கள். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வெளிநாட்டில் வேலை, மேற்கல்வி அமையும். முகப்பரு, தோலில் நமைச்சல் வந்து நீங்கும்.

வியாபாரிகளே, கடையை நவீன மயமாக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலையாட்களை மாற்றுவீர்கள். அனுபவம் மிகுந்த புது வேலையாட்கள் அமைவார்கள். விளம்பர யுக்திகளை சரியாக கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டு தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அரசாங்க கெடுபிடிகள் குறையும்.

உத்தியோகஸ்தர்களே, பிரச்சினை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைபட்ட பதவி உயர்வு உடனே கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வழக்கு சாதகமாகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்ப்புகள் நீங்கும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமானாலும் அதற்குத்தகுந்த சம்பள உயர்வும் உண்டு.

இந்த சனி மாற்றம் எல்லாவற்றையும் இழந்து தவித்துக்கொண்டிருந்த உங்களை ஆடம்பரமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும்.

பரிகாரம்: தேனிக்கு அருகில் உள்ள குச்சனூரில் வீற்றிருக்கும் சுயம்பு சனீஸ்வர பகவானை விசாகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழையின் அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) செடி, கொடியில் பூத்துக் குலுங்கும் பூவைக் கூட சேதப்படுத்தாமல் ரசிக்கும் மனிதாபிமானிகளே! தோல்வி தீயில் சாம்பலாகாமல் பீனீக்ஸ் பறவை போல உயிர்த்தெழுபவர்களே. அனாவசியப் பேச்சை குறைத்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஆர்வம் காட்டுபவர்களே. கலா ரசிகர்களே!

இதுவரை உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக அமர்ந்து நாலாபுறத்திலும் குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் கொடுத்தாரே, எந்த வேலையையும் முழுமையாக செய்யவிடாமல் உங்களை பைத்தியம் பிடிக்க வைத்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார் உங்களின் ராசிநாதனாகிய சனிபகவான் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். அலைபாய்ந்த மனசு இனி அமைதியாகும். உங்களை கண்டும் காணாமல் போனவர்களெல்லாம் இனி வலிய வந்து பேசுவார்கள். மனதில் இருந்த பயம் நீங்கும். உடல் நிலை சீராகும். ஆழ்ந்த உறக்கமும் வரும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்து நீங்கும். சர்க்கரை, ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது.

உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். குடும்பத்தில் இனி மகிழ்ச்சி தங்கும். வெளிப்படையாக பேசுவதாக நினைத்து யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். முடிந்த வரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களானாலும் சரி அதிகம் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும். சாலை விபத்து ஏற்படலாம். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள். உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீங்கள் சரியாக மதிப்பதில்லை என்று மூத்த சகோதரர்கள் நினைப்பார்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சுகாதிபதியும்-லாபாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பணவரவு அதிகரிக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். ஆனால் செவ்வாய் பாதகாதிபதியாக வருவதால் அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டு மற்றும் முழங்கால் வலி வந்து நீங்கும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பழைய கடன் பிரச்சினைகள் ஓயும். நாடாளுபவர்களால் உதவியுண்டு. சிலர் இடவசதியுடன், காற்றோட்டமுள்ள குடிநீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு பயணம் ஏற்படும்.

07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் திருதியாதிபதியும் - விரயாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டங்களில் தைரியம் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். புது முயற்சிகள் யாவும் வெற்றியில் முடியும். கோயில் கும்பாபிஷேகத்தை சொன்னபடி நடத்தி முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. சொத்து சேர்க்கை உண்டு. விலையுயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.

இல்லத்தரசிகளே! எப்போதும் அலுத்துக் கொண்ட கணவர் இனி அன்பாகப் பேசுவார். என்றாலும் கோபப்படத்தான் செய்வார். அவரின் வருமானம் உயரும். அலுவலகம் செல்லும் பெண்களே! வேலைச் சுமை குறையும். சம்பளம் உயரும். பிள்ளைகளுடன் பேச நேரம் கிடைக்கும். கன்னிப் பெண்களே! கல்வி, காதல், வேலை என அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அனுசரித்துப் போகக் கூடிய நபர் அறிமுகமாவார். மாதவிடாய்க் கோளாறிலிருந்து விடுபடுவீர்கள்.

வியாபாரிகளே, தொடர்ந்து வந்த போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகள் செய்வீர்கள். தொலைக்காட்சி-வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலையாட்கள் இனி அடிக்கடி விடுப்பு எடுக்கமாட்டார்கள். கடையை விரிவாக்கி நவீனமயமாக்குவீர்கள். தள்ளிப் போன பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். ஹோட்டல், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களே, நிலையற்ற சூழல் நிலவியதே! இனி அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களை கசக்கிப் பிழிந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாறுவார். உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். நீதி மன்றத் தீர்ப்பும் சாதகமாகும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடி வரும். அலுவலகத்தில் வீண் பேச்சை குறையுங்கள். சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். கணினி துறையினர்களுக்கு, வெளிமாநிலம், வெளிநாடுகளில் கான்ட்ராக்ட் முறையில் பணி புரிய வாய்ப்புகள் வரும்.

இந்த சனி மாற்றம் கொஞ்சம் அலைச்சலையும், செலவினங்களையும் தந்தாலும், உங்களை முன்னேற்றப் பாதைக்கும் அழைத்துச் செல்லும்.

பரிகாரம்: சென்னை பல்லாவரம் அருகிலுள்ள பொழிச்சலூரில் அருள்பாலிக்கும் வட திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவானை கேட்டை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நினைத்தது நிறைவேறும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) குப்பை, கூவம், ஓடை, ஆறு எல்லாம் வந்து கலந்தாலும் கொஞ்சமும் உவர்ப்புத்தன்மை மாறாத கடலைப் போல இழப்பு, ஏமாற்றம், தோல்வி, துக்கம் வந்தாலும் ஏற்றுக் கொள்பவர்களே. சொன்னது யாரென்று பார்க்காமல், சொல்லப்பட்டதை பற்றி யோசிப்பவர்களே. கொடுத்துச் சிவந்தவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். கவலை வேண்டாம். நல்லதையே செய்வார். ஆட்சிப் பெற்று சுபத்தன்மை அடைவதால் சனிபகவான் பணவரவையும் அதிகரிப்பார். இனி நிம்மதி பிறக்கும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த பணமெல்லாம் வந்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

ஜென்மச்சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். தோலில் நமைச்சல், எரிச்சல், கட்டி வந்து போகும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்களால் வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, அலட்சியப் போக்கு மாறும். மகளுக்கு விரைவில் கல்யாணம் நடக்கும். மகனின் கூடா நட்பு விலகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் கவுரவப் பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்களின் ஏழாம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தை குறையுங்கள். சனிபகவான் உங்களின் பத்தாம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர் சுய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் திருதியாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் கம்பீரமாகப் பேசி காரியம் முடிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயமடைவீர்கள். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் நவீன மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். திருமணத் தடை நீங்கும்.

07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் தனாதிபதியும் - லாபாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டங்களில் இழுபறி நிலை மாறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் லாபமடைவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

இல்லத்தரசிகளே! அடுப்படி அலமாரிகளில் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! இனி வேலைச்சுமை குறையும். கன்னிப் பெண்களே! முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள்.

வியாபாரிகளே, தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பெரிய முதலைப் போட்டு மாட்டிக் கொள்ளாமல் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. இனி கணிசமாக லாபம் உயரும். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்து போங்கள்.

உத்தியோகஸ்தர்களே, வேலைச்சுமைகள் அதிகரித்துக் கொண்டே போகும். சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனி தாமதம் இல்லாமல் கிடைக்கும். கணினி துறையினர்களே! கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும்.

இந்த சனி மாற்றம் இழப்பு, எதிர்ப்பு, ஏமாற்றங்களிலிருந்து விடுவிப்பதுடன், ஓரளவு வருமானம், வசதிகளையும் தரும்.

பரிகாரம்: திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபொங்கு சனீஸ்வரரை திருவோணம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். முயற்சிகள் வெற்றியடையும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) வெள்ளை மனமும் பிள்ளை குணமும் கொண்ட நீங்கள் எடுத்த காரியத்தை முடிக்காமல் உறங்க மாட்டீர்கள். பலருக்கும் நல்ல ஆலோசனைகளை வழங்கும் நீங்கள் அதிகம் ஆசைப்பட மாட்டீர்கள். எல்லோரையும் எளிதில் நம்பும் நீங்கள் எதிலும் அமைதியை விரும்புவீர்கள். முன்னுக்குப் பின் முரணாக யோசித்து புதுமையை புகுத்துவீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார். ஏழரைச்சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். இப்போது ராசிக்கு 12-ல் சென்று மறைவதால் தடைபட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள்.

ஏழரைச் சனி தொடங்குகிறதே! என்று பதற வேண்டாம். தற்சமயம் விரய வீட்டில் வந்து அமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். இதுவரை உங்கள் ராசி மீது விழுந்த சனியின் பார்வை இனி விலகுவதால் கம்பீரமாக பேசி மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். இருவரும் பரஸ்பரம் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளை கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். அவர்களின் விருப்பங் களையும் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். தாய்வழி சொத்து வந்து சேரும். நட்பு வட்டம் விரியும். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தடைபட்ட குலதெய்வ பிரார்த்தனையை தொடருவீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். சனிபகவான் உங்களின் 2-ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற போராட வேண்டியது இருக்கும். பேச்சால் பிரச்சினை, பார்வைக் கோளாறு வரக்கூடும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி, கை, கால் அசதி வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் தனாதிபதியும் - பாக்யாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். இழுபறியான வேலைகள் முடியும். குழந்தை பாக்கியம் உண்டு. தாமதமானாலும் எதிர்பார்த்த பணம் வரும். புதிதாக நிலம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதரர்கள் தங்கள் தவறை உணருவார்கள். புது வேலை கிடைக்கும். பணம் வந்தாலும் சேமிப்புகள் கரையும்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் வாகனத்தை அதிவேகமாக இயக்க வேண்டாம். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு மற்றும் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் ராசிநாதனும் - ஜீவனாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டங்களில் தடைபட்ட திருமணம் கூடி வரும். சீமந்தம், காதுகுத்து என வீடு களை கட்டும். கொஞ்சம் வேலைச்சுமை இருக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள்.

இல்லத்தரசிகளே! விசேஷங்களுக்கு போய் வரக்கூட ஒரு நகை நட்டுமில்லாமல் அடகில் இருந்ததே! இனி அவற்றையெல்லாம் மீட்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. அலுவலகம் செல்லும் பெண்களே! இனி ஆரோக்கியம் கூடும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கன்னிப்பெண்களே! உங்கள் காதலின் உண்மையான ஆழத்தை இப்போது உணர்ந்து கொள்வீர்கள்.

வியாபாரிகளே, வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். போட்டிகளையும் மீறி ஓரளவு சம்பாதிப்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மருந்து, கமிஷன், மரவகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும்.

உத்தியோகஸ்தர்களே, சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடி வரும். சக ஊழியர்களுடன் சலசலப்பு உண்டு. கணினி துறையினர்களே, பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைபட்டாலும் போராடி பெறுவீர்கள்.

இந்த சனி மாற்றம் பழைய பிரச்சினைகளிலிருந்து விடுபட வைப்பதாகவும், அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாக அமையும்.

பரிகாரம்: ஆரணி- படவேடு தடத்தில் ஏரிக்குப்பம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீஎந்திர சனீஸ்வர பகவானை மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விதவைப் பெண்களுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x