Published : 27 Oct 2021 05:00 PM
Last Updated : 27 Oct 2021 05:00 PM

2021 - 2022 எப்படியிருக்கும்? எந்த ராசிக்கு விசேஷ பலன்கள்? குருப்பெயர்ச்சி பொதுப் பலன்கள் 

-’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

குருப் பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம். குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் 13-ஆம் நாள் அன்றும். திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் 20ஆம் தேதியன்றும் பெயர்ச்சியாகிறார், இந்தப்பதிவு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கணிக்கப்பட்டது.

இதுவரை மகர ராசியில் நீச்சம் என்ற அந்தஸ்தோடு இருந்தவர். இப்போது அந்த நீச்சம் என்னும் நிலை நீங்கி கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார். மகர ராசியில் நீச்சமாக இருந்தாலும் நீச்சபங்க ராஜயோகமாகவே தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார்.

கும்ப ராசிக்கு வரும் குருபகவான் எந்தெந்த ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தர இருக்கிறார் என்பதையும், பொதுப்பலன்களாக என்ன செய்யக் காத்திருக்கிறார் என்பதையும் பார்க்கலாம். இந்த குருப்பெயர்ச்சியில் குருவின் பார்வையை பெறக்கூடிய ராசிகள் மிதுனம், சிம்மம், துலாம் இந்த மூன்று ராசிகளையும் குருபகவான் முறையே 5ம் பார்வை, 7ம் பார்வை, 9-ம் பார்வையாக பார்க்கிறார். அதுமட்டுமல்லாமல் மேஷ ராசிக்கு 11-ம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்குவார். மகர ராசிக்கு 2-ம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களைத் தருவார். இந்த ஐந்து ராசிகளும் குருவின் பார்வையால் நன்மையை அதிக அளவில் பெறக்கூடிய ராசிகளாகும்.

அப்படியானால் மற்ற ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும்? ஏதேனும் குறை இருக்குமா? பாதிப்புகள் இருக்குமா? பிரச்சினைகள் இருக்குமா? என்று கேட்டால் கவலைப்பட வேண்டியதில்லை. நிச்சயமாக குரு பகவான் கடுமையான கெடுபலன்களை யாருக்கும் தருவதில்லை! சோதனைகளை தாங்கக் கூடிய அளவிலேயே தருவார். அவைகூட ஒரு மனிதனை திருத்தி அமைப்பதற்காகத்தான் இருக்குமே தவிர, பெரிய பாதிப்புகளை உண்டு பண்ணாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

பொதுவாக குரு பகவான் தனித்து இயங்கக் கூடியவர் அல்ல. அவருக்கு வேறு ஏதேனும் கிரகத் தொடர்புகள் இருந்தால் மட்டுமே குருவால் தன் முழு பலன்களையும் தர முடியும். அதாவது உங்கள் ஜாதகத்தில் கிரக அமைப்புகள் குருவின் பார்வை பெறக்கூடிய வகையில் இருந்தால் மட்டுமே பலன்கள் முழுமையாகக் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் தற்போது நடைபெறக்கூடிய தசா புத்தியும் சாதகமாக இருந்தால் மட்டுமே குருவின் முழுப் பலன்களையும் அனுபவிக்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுப்பலன்களாக குரு பகவான் என்ன செய்வார் என்பதைப் பார்த்து விடலாம். குரு பகவான் கும்ப ராசி என்ற இடத்தில் இருக்கும் போது மிக அதிகப்படியான நற்பலன்களைத் தருவார் என்பதில் ஐயமில்லை!

இந்த குருப்பெயர்ச்சி, மக்களுக்கு பலவிதத்திலும் அனுசரணையும், வேண்டிய உதவிகளையும் தரும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தையும், விவசாய விளைச்சலில் நல்ல மகசூலையும், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அனைவரும் வாங்கக் கூடிய அளவில் விலை குறைவு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. தகவல் தொழில்நுட்பத்துறை, பத்திரிகை, ஊடகத்துறை, இசைக்கலைஞர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள் என அனைவருக்கும் மிகச் சிறப்பான நன்மைகளை குருபகவான் நிச்சயமாக தருவார்.

அதேபோல அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் இவர்களுக்கெல்லாம் புகழ் வெளிச்சம் கிடைக்கும். அதிலும் குறிப்பாக தலைமை பதவிகளில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய மக்கள் ஆதரவும், அங்கீகாரமும் கிடைக்கும்.

தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமணங்கள் இப்போது நடக்கும். திருமணமாகி புத்திர பாக்கியத்திற்காக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு தற்போது மன உளைச்சல் நீங்கி மன மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இவை அனைத்தையும் குருபகவான் சிறப்பாகவே நடத்தித் தருவார் என்பதை நிச்சயமாக நம்பலாம்.

இந்த குருப் பெயர்ச்சியால் நன்மை அடையக்கூடிய ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் தொழில் வளர்ச்சி, வியாபார வளர்ச்சி, புதிதாகத் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், சுப நிகழ்வுகள், திருமணம், சொந்த வீடு வாங்குதல் போன்றவை மிக எளிதாக நிறைவேறும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு இப்போது தடையில்லாமல் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் இருப்பவர்களுக்கு தற்போது வெளிநாடு செல்லும் வாய்ப்பு மிக எளிதாகக் கிடைக்கும். வெளிநாடுகளில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும். சிறிய நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான லாபத்துடன் கூடிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு ஒப்பந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் எந்தவிதமான போட்டியும் இல்லாமல் எளிதாகக் கிடைக்கும்.


இசை, நாடகம், நாட்டியம் முதலான துறைகளிலுள்ள கலைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களாக எந்த விதமான வாய்ப்பும் இல்லாமல் சிரமப் பட்டுக் கொண்டிருந்தார்கள். தற்போது அவர்களுக்கெல்லாம் ஓய்வே இல்லாத அளவிற்கு ஒப்பந்தங்களும் மன நிறைவான வருமானம் கிடைக்கக்கூடிய காலமும் தொடங்கிவிட்டது. மேலும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு மிகச் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும்.

பெண்களுக்கு தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது எளிதாக நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். தனியார் நிறுவனம் அல்லது அரசுப் பணி போன்றவை கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை இயல்பாக ஏற்படும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுடைய திருமணம் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அற்புதமான முன்னேற்றத்தையும் அபார ஞாபக சக்தியையும் குருபகவான் தருவார்.

இந்த ஐந்து ராசிக்காரர்களும் (மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம்) குருவின் ஸ்தலமான ஆலங்குடி, திட்டை, திருச்செந்தூர் போன்ற ஆலயங்களுக்குச் சென்று வருவதன் மூலம் மேலும் நன்மைகளை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். இவர்கள் மட்டுமல்லாமல் மற்ற ஏழு ராசிக்காரர்களும் ( ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம்) குருபகவான் வழிபாட்டை தவறாமல் செய்யுங்கள். நன்மைகள் நடக்கும். சிரமங்கள் குறையும். பிரச்சினைகள் எதுவும் நம்மை அணுகாமல் குருபகவான் காத்தருள்வார்.
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x