Published : 04 Mar 2021 09:52 AM
Last Updated : 04 Mar 2021 09:52 AM

கடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள், மார்ச் 4 முதல் 10ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் புதன், குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்:

இந்த வாரம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும்.

எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

பிள்ளைகளை தட்டிக் கொடுத்து எதையும் செய்யச் சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம்.
பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சைக் குறைப்பது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும்போது கவனமாக இருப்பது நல்லது.

அரசியல் துறையினருக்கு கடின உழைப்புக்குப்பின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மேலிடத்தை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய அதிக கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
பரிகாரம்: சிவனையும் அம்பாளையும் வணங்கி வர மனக் குழப்பங்கள் அகலும்.
**********************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், குரு, சனி - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்:
இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் தரும்.

எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்துச் செய்வது நல்லது. தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
நிதி பிரச்சினை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும்.

குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தைத் தரும். பயணங்கள் செல்லும்போது கவனம் தேவை.

பெண்களுக்கு எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும்.

வீண் பிரச்சினைகளைக் கண்டால் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நன்மை தரும்.

முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலில் உள்ள காலபைரவரை வணங்குங்கள்.
**********

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், குரு, சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்:
இந்த வாரம் வீண் பிரச்சினையால் மனக்குழப்பம் ஏற்படலாம். தன பாக்கியாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தில் இருக்கிறார். பயணங்களில் இருந்து வந்த தடங்கல் நீங்கும்.

ஆறாமிடத்தில் கேது இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தடை தாமதம் நீங்கும். போட்டிகளைச் சமாளிக்கும் திறமை உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனக்கிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும்.

பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். கலைத்துறையினர் புதிய பணி காரணமாக, வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது.

அரசியல் துறையினருக்கு வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாகப் பேசுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாகப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி;
பரிகாரம்: அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசித்து வரவும். நற்பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x