Published : 31 Dec 2020 11:18 AM
Last Updated : 31 Dec 2020 11:18 AM

மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்;  (டிசம்பர் 31 - ஜனவரி 6ம் தேதி வரை)

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் - தொழில் ஸ்தானத்தில் புதன், குரு, சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் மனதில் தெம்பு உண்டாகும்.

மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை பிற்பகுதியில் செய்வது நல்ல பலன்களைத் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்தி சாதுர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.

பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன்தரும். கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு திறமைகள் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வந்தால், எல்லா கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.
****************
ரிஷபம்

(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் ராகு - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், குரு, சனி - விரய ராசியில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் உங்களது கருத்துக்கு மற்றவர்களிடம் வரவேற்பு இருக்கும். இந்த காலகட்ட தொடக்கத்தில் பணவரத்து இருக்கும். ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும்.

தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் உண்டாகும்.
தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

புதிய நண்பர்களின் சேர்க்கை நிகழும். அவர்களால் உதவி உண்டாகும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களைச் செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.
கலைத்துறையினருக்கு உற்சாகம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு முயற்சிகள் பலிதமாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும்.

பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை சுண்டல் செய்து நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குங்கள். செய்ய பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
*****************

மிதுனம்

(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - சப்தம ஸ்தானத்தில் சூரியன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், குரு, சனி - லாப ராசியில் செவ்வாய் - விரய ராசியில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும் மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

சிக்கலான சில விஷயங்களை சாதுர்யமாகப் பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும்.

உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்படச் செய்து முடித்து பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுகளைக் குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தைத் தவிர்த்து பேசுவது நல்லது.

பெண்களுக்கு சாதுர்யமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சினைகளையும் தீர்த்து விடுவீர்கள்.

கலைத்துறையினர் பயணங்கள் செல்ல நேரிடலாம். அரசியல்வாதிகளுக்கு அரசு அனுகூலம் ஏற்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாத அஷ்டகம் படித்து வழிபட்டு வாருங்கள். எல்லா துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.
*************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x