Published : 04 Oct 2020 10:38 AM
Last Updated : 04 Oct 2020 10:38 AM

ஏகப்பட்ட நண்பர்கள்; முன்கோபம் ஜாஸ்தி; கேட்காமலேயே உதவி; இவர்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள்; வேலையில் வெற்றி; பூரட்டாதியின் குணங்கள்!  27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 79 ; 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

பூரட்டாதி நட்சத்திரத்தைப் பற்றி பார்த்து வருகிறோம். இப்போது பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்குமான பலன்களையும் குணங்களையும் பார்ப்போம்.

பூரட்டாதி நட்சத்திரம் 1ம் பாதம் :-

பூரட்டாதி 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் நேர்மையானவர்கள்.

சுறுசுறுப்பானவர்கள், செயல்களில் தீவிரத்தை காட்டக் கூடியவர்கள், எடுத்துக்கொண்ட காரியங்களை முழுமையான வெற்றியோடு முடிப்பவர்கள். முன்கோபம் அதிகம் இருக்கும்.

தான் என்னவாக வர வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்? என்பதை சுயமாக முடிவு செய்பவர்கள். பெற்றோரின் அரவணைப்பிலும் அவர்களின் அறிவுரையையும் முழுமையாக ஏற்று அதன்படி நடப்பவர்கள். சகோதரர்களிடம் பாசத்தைக் காட்டுபவர்கள்.

பரம்பரைச் சொத்து, பூர்வீகச் சொத்து சிறிதளவாவது இருக்கும். கௌரவத்திற்காகவாவது பூர்வீகத்தில் சொந்த வீடு வைத்திருப்பார்கள். வாழ்க்கைத் துணையிடம் அதீத அன்பையும் பாசத்தையும் காட்டுவார்கள். அதிகப்படியான நண்பர் கூட்டம் இருக்கும். கேட்டு உதவி செய்வதிலும், கேட்காமலேயே உதவி செய்வதிலும் சிறந்தவர்கள்.

இவர்களில் பெரும்பாலும் மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக இருப்பார்கள் மேலும், நூலகர், வங்கிப் பணியாளர், தனியார் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பு, குழுவிற்கு தலைமை தாங்குதல். காவல்துறை, தடயவியல் துறை, வழக்கறிஞர், நீதிபதி, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய தொண்டு நிறுவனங்கள், ரத்த தானம், கண் தானம் போன்ற அமைப்புகளில் செயல்படுதல், விளையாட்டு வீரர்கள் என்றிருப்பார்கள். தகவல் தொழில்நுட்பத் துறை, அயல்நாடுகளில் பணி, அந்நிய நாட்டு நிறுவனத்தில் பொறுப்புகள், பதவிகள் போன்றவற்றில் இருப்பது என பூரட்டாதி நட்சத்திர 1ம் பாதத்தைச் சேர்ந்தவர்கள், எங்கும் எதிலும் கோலோச்சுபவர்களாக இருப்பார்கள்.

நேர்த்தியான உடை, கச்சிதமான உடல் வாகு, தெளிந்த முகம், பக்திமயமான தோற்றம், இனிமையான பேச்சு இவர்களின் அடையாளமாக இருக்கும். உணவு விஷயத்தில் அதிக காரமான உணவுகளை உண்பவர்கள், அதை அளவோடு உண்பவர்களாகவும் இருப்பார்கள். பகிர்ந்து உண்ணும் குணம் அதிகம் கொண்டவர்கள்.

பொதுவாக இவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், இதய நோய், எலும்பு தேய்மானம், முதுகு எலும்பில் வலி போன்ற பிரச்சினைகள் இருக்கும். ஆசன வாயில் புண், மூலம் போன்ற பிரச்சினைகளும் இருக்கும்.

இறைவன் - சிக்கல் சிங்காரவேலன்

விருட்சம் - தேமா (மாமரம்)

வண்ணம் - மஞ்சள்

திசை - வடக்கு
****************

பூரட்டாதி நட்சத்திரம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் :-

பூரட்டாதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள்.

நிதானமாக சிந்தித்து செயல்படுபவர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தை எப்பாடுபட்டாவது முடிப்பவர்கள். எந்த ஒரு காரியத்திலும் ஆதாயம் அடைபவர்கள். பொருளாதாரப் பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை அமைந்தவர்கள்.

அசையாச் சொத்துக்கள் அதிகம் சேர்ப்பவர்கள், விவசாய வருமானம் என்பது நிச்சயமாக இருக்கும். பூர்வீகச் சொத்துக்களை விற்காமல் மேலும் விரிவுபடுத்துபவர்கள். தாய் தந்தையரின் ஒப்பற்ற பாசத்திற்கு கட்டுப்பட்டவர்கள். தாயாரின் அரவணைப்பு அதிகம் பெற்றவர்கள். தாய் மாமன் வகை உறவுகளால் பக்கபலமும் உதவியும் கிடைக்கப் பெற்றவர்கள்.

அரசுப் பணி முதல் தனியார் நிறுவனப் பணிகள் வரை எங்கும் எதிலும் தலைமைப் பதவியில் இருப்பவர்கள். தலைமைப் பதவியில் இல்லாவிட்டாலும் இவர்கள் பேச்சுக்கு கட்டுப்படக்கூடிய சக ஊழியர்களைக் கொண்டவர்கள். அதிகமான பயணங்களை மேற்கொள்ளக் கூடியவர்கள். தொழில் செய்பவர்கள், மனிதவள மேம்பாடு போன்ற துறைகளில் இருப்பவர்கள். கட்டுமானத் துறை மற்றும் வீட்டு அலங்கார நிபுணர், இன்டீரியர் டெக்கரேட்டர், சமையல் கலை வல்லுநர்கள், சமையலறை வடிவமைப்பாளர்கள், உழவுத் தொழில் செய்பவர்கள், உழவுத் தொழிலுக்கு தேவையான இயந்திரங்களை இயக்குபவர்கள், அது தொடர்பான தொழில்களைச் செய்பவர்கள்.

சுவையான உணவின் மீது விருப்பமுடையவர்கள், சுவையான உணவு எங்கு கிடைத்தாலும் தேடிச்சென்று உண்பவர்கள். நண்பர்களோடு இணைந்து உண்பதில் ஆர்வம் காட்டுபவர்கள். சிறுநீரகப் பிரச்சினை, சர்க்கரை நோய் பிரச்சினை,உடலில் உள்ள சுரப்பிகளில்... அதாவது தைராய்டு போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - திருவந்திபுரம் தேவநாதசுவாமி, கடலூர்.

விருட்சம் - குங்குலியம்

வண்ணம் - இள மஞ்சள்

திசை - வடகிழக்கு
******************

பூரட்டாதி நட்சத்திரம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் :-

பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்தவர்கள்.

அபார ஞாபக சக்தி கொண்டவர்கள். எடுத்துக்கொண்ட வேலைகளில் முழுமையான வெற்றியைக் காண்பவர்கள். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அவற்றில் முழு கவனத்தையும் செலுத்துபவர்கள். கண் பார்த்து கை வேலை செய்யும் என்பார்களே... அதைப் போன்ற அபாரத் திறமை வாய்ந்தவர்கள்.

கல்வி கற்பதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பவர்கள். கல்வி கற்பதை நிறுத்தவே மாட்டார்கள். ஏட்டுக்கல்வி மட்டுமல்லாமல் அனுபவக் கல்வியும் கற்றுக் கொண்டே இருப்பவர்கள். அதிக நண்பர்களைக் கொண்டவர்கள்.

உறவினர்களிடம் தன்னைப்பற்றிய உயர்வான, மதிப்பான எண்ணங்களை விதைப்பவர்கள். பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் ஒருங்கே பெற்றவர்கள். குறிப்பாக தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களிடம் அதிக நெருக்கத்தைப் பெற்றவர்கள். தந்தைவழி உறவுகளிடம் அளவாகப் பழகுபவர்கள்.

சகோதர சகோதரிகளிடம் அதிக அன்பையும் அவர்களுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சியையும் கொண்டவர்கள். நேர்த்தியான உடை, கச்சிதமான உடல்வாகு, தெளிவான சிந்தனை, நேர்மையான செயல்பாடு, புத்திசாலித்தனம் போன்றவை இவர்களின் அடையாளம்.

ஆசிரியர்களாக, பயிற்சியாளர்களாக, தகவல் தொழில்நுட்பத்துறையில் சாதிப்பவர்களாக, கணினியில் திறமை வாய்ந்தவர்களாக, புதுப்புது சிந்தனைகளைச் செயல்படுத்திப் பார்ப்பவர்களாக, இருப்பார்கள். கூட்டாகப் பணிபுரிந்து வெற்றிகரமாக செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள்.

பத்திரிகைத்துறை, ஊடகத் துறை, வங்கிப் பணி, அரசியல் ஆலோசகர், பங்கு வர்த்தகத் துறையில் நிபுணர், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். கதை, கவிதை எழுதுவதில் ஆர்வம் இருக்கும். திரைத்துறை, சின்னத்திரை போன்றவற்றில் ஏதாவது ஒரு துறையில் இருப்பார்கள்.

ஜோதிடத் துறையில் சிறந்தவர்களாக இருப்பார்கள். புரியாத விஷயங்களில் கூட ஆழ்ந்த கவனம் செலுத்தி புரிந்ததை அனைவருக்கும் தெளிவுபடுத்தக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். நுணுக்கமான செயல்கள், ஓவியத்திறமை, சிற்பக்கலை போன்ற கலைகளிலும், நடனம், நாட்டியம், இசை போன்ற துறைகளிலும் சிறப்பாகச் செயல்படுவார்கள்.

இறைவன் - யோக நரசிம்மர்

விருட்சம் - சுந்தரவேம்பு

வண்ணம் - இளம் பச்சை

திசை - வட மேற்கு
***************

பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம்:-

பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்.

கருணை வடிவானவர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவர்கள். தன்னிடம் இருப்பதை அப்படியே அள்ளித் தருபவர்கள், யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்கள்.

அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளர்களாக இருப்பார்கள். தாயாரின் வளர்ப்பில் ஆளாகுபவர்கள். தந்தையிடம் இருந்து சற்று விலகி இருப்பவர்கள். கடல் கடந்து சென்று சாதனைகளை செய்பவர்கள். சகோதர சகோதரிகளிடம் அன்பு காட்டுபவர்கள். உறவினர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவுகளை பலப்படுத்தக் கூடியவர்கள்.

தோல்வியில் இருப்பவர்களை வெற்றிக்கு அழைத்துச் செல்பவர்கள். ஆடம்பரம் இல்லாத உடைகளை அணிபவர்கள். அபார ஞாபக சக்தியைக் கொண்டவர்கள். இறை ஞானம் கொண்டவர்கள்.

ஆழ்ந்த பக்தியில் ஈடுபடுபவர்கள். ஆலய தரிசனம் விடாமல் செய்பவர்கள். ஆலயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்கள். பிரபஞ்ச ரகசியங்களை அறிய முற்படுபவர்கள். ஜோதிடத்தில் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

வாழ்க்கை துணையிடம் தன்னை ஒப்புவிப்பவர்கள். அவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத நபர்கள். நட்பு வட்டத்தில் போற்றக் கூடியவர்களாக இருப்பார்கள். எவரிடமும் பகையை ஏற்படுத்திக் கொள்ளாதவர்கள். தேவையான உதவிகளை, தேவையான சமயத்தில் மற்றவர்களுக்கு செய்து தருபவர்கள்.

அந்நிய நாடுகளில் வேலை செய்பவர்கள். தனியார் நிறுவனங்களில் தலைமைப் பதவி போன்ற உயர் பதவிகளை வகிப்பவர்கள். அரசியலில் இருப்பவர்கள். அரசியலில் ஆலோசகராகவும் இருப்பார்கள். மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களை நண்பர்களாக கிடைக்கப் பெற்றவர்கள் இவர்கள்.

கவிதை எழுதுபவர்கள். கற்பனா சக்தி அதிகம் இருக்கும். புதுமையான சிந்தனைக்குரியவர்கள். கலைத் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். பயணம் தொடர்பான தொழில், உணவுத் தொழில், மருந்துக் கடை, மருத்துவம், கட்டட வடிவமைப்பாளர் போன்ற துறைகளில் இருப்பார்கள். நீர் மேலாண்மை போன்ற துறைகளிலும் இருப்பார்கள். நிதி நிர்வாகம், வங்கிப்பணி, வட்டித் தொழில், வாடகை வருமானம், தங்கும் விடுதிகள், பெண்கள் தங்கும் விடுதிகள், ஆடை அலங்கார பொருட்கள் விற்பனை, அக்குபஞ்சர் போன்ற மருத்துவர், பிசியோதெரபி இது போன்ற பணிகளிலும் இருப்பார்கள்.

உணவு விருப்பம் என பெரிதாக இருக்காது. ஆனாலும் சுவையான உணவு உண்பவர்கள். இனிப்பு உணவுகளை அதிகம் உண்பவர்கள். நட்பு வட்டத்தில் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்பவர்கள்.

ஆரோக்கியத்தில் அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷம் போன்ற பிரச்சினைகள் இருக்கும். சிறுநீரகப் பிரச்சினை, சிறுநீரகத்தில் கல், சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகளும் இருக்கும்.

இறைவன் - திருச்செந்தூர் குருபகவான் (பிரகாரத்தில் இருக்கும் தனி சந்நிதி)

விருட்சம் - கன்னிமந்தாரை

வண்ணம் இளநீலம்

திசை வடக்கு
***************

பொதுவாக பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்... தான தர்மங்கள் செய்வதில் ஆர்வம் உடையவர்கள். ஆனாலும் வாயில்லாத ஜீவன்களுக்கும், வயது முதிர்ந்தோர்களுக்கும், நோயாளிகளுக்கும் உதவி செய்தால் மேலும் வளர்ச்சியை அடையலாம்.

விருட்சங்கள், அதாவது மரங்களை நட்டு வளர்த்து வருதலும், மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பதும் நல்லது. இவர்களுக்கு எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் கண நேரத்தில் காணாமல் போகும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், வாழ்க்கை மேலும் மேலும் உயரும்.

அடுத்த பதிவில் உத்தரட்டாதி என்னும் உன்னதமான நட்சத்திரத்தைப் பார்ப்போம்.

இந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மிக முக்கியமான தெய்வம் "காமதேனு."

காமதேனுவைப் பற்றி நீங்கள் அதிகம் அறிந்திருக்கலாம்!

கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய சக்தி வாய்ந்த தெய்வம் காமதேனு! அந்த காமதேனுவை தன்னுடைய நட்சத்திர அடையாளமாகவும் பெற்றிருப்பது இந்த உத்திரட்டாதி நட்சத்திரம்.

இதைப் பற்றிய இன்னும் பல தகவல்களோடு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x