Published : 30 Aug 2020 10:17 AM
Last Updated : 30 Aug 2020 10:17 AM

ராகு - கேது பெயர்ச்சி ; விருச்சிக ராசி அன்பர்களே! திரும்பிய திசையெல்லாம் பணம்; நல்ல உத்தியோகம்; ஏமாற்றிய நண்பர்கள்; தடையில்லாத முன்னேற்றம்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

விருச்சிக ராசி அன்பர்களே வணக்கம்.

ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு தரும் பலன்கள் எப்படியெல்லாம் இருக்கப் போகிறது என்பதையெல்லாம் பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும் இரண்டாமிடமான தன ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து கடும் நெருக்கடிகளைத் தந்து கொண்டிருந்தனர். இப்போது ராகு உங்கள் ராசிக்கு 7ம் இடத்திற்கும், கேது உங்கள் ராசிக்குள்ளேயும் வரப்போகிறார்கள். இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

ராகு பகவான் எட்டாமிடத்தில் அமர்ந்து சொல்லொண்ணா துயரத்தையும், கடுமையான நெருக்கடிகளையும் தந்தார். வீண் வம்பு வழக்குகளையும், குடும்பத்தில் பலவித பிரச்சினைகளையும் தந்திருப்பார். இப்போது உங்கள் ராசிக்கு ஏழில் அமர்ந்து இதுவரை தந்த குழப்பங்களையும், நெருக்கடிகளையும் தீர்த்து வைக்கப் போகிறார். இனி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியான மன நிலை ஏற்படும்.

இனி பொருளாதாரக் கஷ்டம் இருக்காது. சொற்ப பணத்திற்காக அலைச்சலையும் அவமானத்தையும் சந்தித்து வந்த நீங்கள் இனி பண மழையில் நனையப் போகிறீர்கள். திரும்பிய பக்கமெல்லாம் பணவரவாக இருக்கும். யாரெல்லாம் உங்களுக்குத் தொல்லை தந்தார்களோ அவர்களாலேயே ஆதாயம் ஏற்படப் போகிறது. பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள்.

உங்களுக்கு எதிரான வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் இப்போது கைவிடப்படும். இனி சுதந்திர மனிதராக வலம் வருவீர்கள். பணத் தட்டுப்பாட்டால் குடும்பத்தில் இழந்த நிம்மதி திரும்ப வரும். இழந்த வேலை திரும்பக் கிடைக்கும். அல்லது வேறு நிறுவனத்தில் உயரிய பதவி, உரிய அங்கீகாரத்தோடு கிடைக்கும். புதிய இடத்தில் பணியில் சேருவீர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.

தொழிலில் இருந்த நெருக்கடிகள், வராமலிருந்த பணம், தேங்கி நின்ற உற்பத்திப் பொருட்கள் என அனைத்துப் பிரச்சினைகளும் தீரும். அரசு நடவடிக்கைகள். கைவிடப்படும். அபராதங்கள் தள்ளுபடியாகும். ஊழியர்கள் உண்மையாக இருப்பார்கள். புதிய தொழில் வாய்ப்புகள், முதலீடுகள் கிடைக்கும். வங்கிப் பிரச்சினைகள் சமரசமாகும்.

வியாபாரத்தில் இருக்கும் நிலையிலேயே தொடர்ந்து வியாபாரம் செய்யலாமா? அல்லது வியாபாரத்தை விட்டுவிட்டு வேறு வேலைக்குப் போகலாமா? என்ன சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு... இனி வியாபார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். உதவிகள் நாலா பக்கமும் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். கடனாகக் கொடுத்த அனைத்தும் இப்போது திரும்பக் கிடைக்கும்.

ரியல்எஸ்டேட், கட்டுமானத் தொழில், தரகுத் தொழில், கமிஷன் தொழில், பயணம் தொடர்பான தொழில், உணவுத் தொழில் என அனைத்தும் இயல்பு நிலைக்கு வரும். லாபம் தரத்துவங்கும்.

விவசாயத்தில் இதுவரை ஏற்பட்ட நஷ்டங்கள் இனி இருக்காது. இழப்புகளும் இனி இல்லை. விளைச்சலுக்கு ஏற்ற வருமானம் லாபகரமாக இருக்கும். நிலத் தகராறு, வரப்பு பிரச்சினைகள், நீர் பாய்ச்சும் உரிமை பிரச்சினை என அனைத்துப் பிரச்சினைகளும் கவலைகளும் தீர்ந்து உடன்படிக்கை ஏற்படும். அரசின் தாமதப்பட்ட சலுகைகள் இப்போது கிடைக்கும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும். உங்கள் தகுதிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வழக்குகள் முடிவுக்கு வரும்.

பெண்களுக்கு இதுவரை இருந்த மன உளைச்சல் தீரும். கணவர் குடும்பத்தாரால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். இழந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். தாமதப்பட்ட பதவி உயர்வு , ஊதிய உயர்வு கிடைக்கும். கடன் தீரும். திருமணம் நடக்கும். தந்தை வழி சொத்து கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வித்தடை அகலும். ஞாபகத் திறனில் இருந்த தடுமாற்றங்கள் இனி இருக்காது. விரும்பிய கல்வி வாய்ப்பு கிடைக்கும். மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்கலாம்.

கலைஞர்களுக்கு இதுவரை விரக்தியின் உச்சத்தில் இருந்திருப்பீர்கள். இப்போது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். ஏமாற்றிய நண்பர்கள் காணாமல் போவார்கள். இனி தடையேதும் இல்லை என்பதைப் புரிந்து உணர்ந்து காரியத்தில் ஈடுபடுங்கள்.

கேது பகவான் தரும் பலன்கள் -

இதுவரை தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த கேது அளவிட முடியாத துன்பங்களைத் தந்திருப்பார். இப்போது உங்கள் ராசிக்கே வந்து உங்களை ஆளப்போகிறார். இனி குடும்பப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் ஆகியவற்றில் இருந்து விடுபடுவீர்கள். இனி உங்கள் தேவைகளை மனதில் நினைத்தாலே போதும். கேது பகவான் அதை நிறைவேற்றித் தருவார். எனவே எதையும் ஆவலோடு எதிர்நோக்காமல் அமைதியாக இருந்தாலே அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆலய தரிசனம், ஆன்மிகப் பெரியோர் தரிசனம் செய்வீர்கள்.

பொதுவாக இதுவரை வாக்கு கொடுத்து அதை நிறைவேற்ற முடியாமல் கூனிக்குறுகி நின்ற நீங்கள், இனி, உங்கள் வாக்கு வேதவாக்காக மாறும், சத்தியம் காப்பாற்றப்படும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். போலியான மனிதர்களை இனம் காணும் வேளை வந்துவிட்டது. அவர்களை விலக்கி வைக்கவும், விலகிச் செல்லவும் காலம் வந்துவிட்டது.

வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள். கடந்த கால நிகழ்வுகளை மறந்து எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுங்கள்.

மாற்றுத் திறனாளிக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள். வாழ்க்கைத்துணையை இழந்த பெண்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளைச் செய்து தாருங்கள். நன்மைகள் அதிகமாகும். ஆரோக்கியம் சிறக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் - பிரத்தியங்கிரா அம்மன்- அய்யாவாடி கும்பகோணம்.
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x