

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், குரு, சனி - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள் :
07-03-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-03-2021 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-03-2021 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள் :
குழந்தை மனம் கொண்ட சிம்ம ராசியினரே!
இந்த மாதம் சில எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரும். ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். உறவினர்களிடம் பேசும்போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல்லிய வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது.
பெண்கள் முன் பின் யோசிக்காமல் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு தொழில்ரீதியாக போட்டிகள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. வரவேண்டிய பண பாக்கிகள் மட்டும் இழுபறி நிலையிலேயே இருந்து வரும். இடைவிடாத உழைப்பால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் முடிந்தவரை தவிர்த்துவிடுவது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவிகள் கிடைக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மாணவர்கள் எந்த வேலை செய்தாலும் கவனமாகச் செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுப் படிப்பது நல்லது.
மகம்:
இந்த மாதம் எதிர்பாராத செலவினங்கள் இருந்தாலும் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்தப் பிரச்சினையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் வாதங்களைத் தவிர்க்கவும். பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பூரம்:
இந்த மாதம் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் சிற்சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். அதேபோல் உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். புதிய நபர்களின் நட்பு உண்டாகும்.
உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை.
பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்து பூஜித்து வாருங்கள். பிரச்சினைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8
*****************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |