Published : 01 Feb 2021 03:16 PM
Last Updated : 01 Feb 2021 03:16 PM

கன்னி ராசி அன்பர்களே! பிப்ரவரி மாத பலன்கள்; பண வரவு உண்டு; நிதானம் தேவை; ஆரோக்கியத்தில் கவனம்; வீண் வம்பு!

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), குரு, சுக்கிரன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

10ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27ம் தேதி சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

கன்னி ராசி அன்பர்களே!

இந்த மாதம் பணவரவு வரும். ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துகள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. ஆவணங்களை முறையாக கவனித்து வாங்குவது சிறந்தது. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும்போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டிய நபரைப் பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலியச் சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவதுபடி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். அலுவலகத்தில் யாருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ நிலையினை எடுக்காதீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். வம்பு வழக்குகள் உங்களைத் தேடி வரலாம்.

பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். ஆனாலும் ராசிநாதன் சஞ்சாரம் ராசிக்கு மூன்றில் இருப்பதால் சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும்.

அரசியல் துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். புதிய பொறுப்புகள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். சிறிது டென்ஷனும் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களைப் படிப்பது அவசியம்.

உத்திரம்:
இந்த மாதம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்குத் தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள்.
ஹஸ்தம்:
இந்த மாதம் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். பிள்ளைகள் கேட்பதை வாங்கிக் கொடுத்து சந்தோஷம் காண்பீர்கள். இடம், வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். அதற்கான காரியங்களையும் செய்ய ஆரம்பிப்பீர்கள்.

சித்திரை:
இந்த மாதம் பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று பலனடைவீர்கள். வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வாருங்கள். காரியத் தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
*****************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x