Published : 28 Apr 2020 02:21 PM
Last Updated : 28 Apr 2020 02:21 PM

துலாம், விருச்சிகம், தனுசு - மே மாத பலன்கள்


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

உழைப்புக்கு ஏற்ற உயர்ந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் துலா ராசியினரே!
நீங்கள் அனைவரையும் சரிசமமாக கருதுபவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் இருக்கிறார். சின்ன விஷயங்களுக்குக் கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணத்தேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம். கவனம் தேவை.


லாப ஸ்தானத்தை செவ்வாய் பார்க்கிறார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிப்போடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை.


குடும்பத்தில் எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை. வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நல்லது.


பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம்.
கலைத்துறையினருக்கு சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம்.


அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண வரவு இருக்கும். தேவையான வசதிகள் கிடைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும்.


மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சித்திரை:
இந்த மாதம் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தலை தூக்கச் செய்யும். எனவே சாதுர்யமாகப் பேசி எதையும் சமாளிப்பது நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஸ்வாதி:
இந்த மாதம் எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். நக்ஷத்ராதிபதி ராகுவின் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும்.

விசாகம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.

பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17
**********************************************


விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)

கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு கோபப்பட்டாலும் அதை மனதில் கொள்ளாமல் அடுத்தவருக்கு உதவி செய்யும் விருச்சிக ராசியினரே!


இந்த காலகட்டத்தில் பேச்சுத் திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதைக் குறைப்பது நல்லது. எந்தச் செயலையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.
தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் பார்க்கிறார். ராகு இருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி சூரியன் பஞ்சம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது.


குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன் -மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துப் பேசுவது வீண் சர்ச்சையைக் குறைக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.


பெண்களுக்கு பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.
கலைத்துறையினருக்கு யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். சிலருடன் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம்.


அரசியல்துறையினருக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள். தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும்.


மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

விசாகம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.

அனுஷம்:
இந்த மாதம் இழுபறியாக இருந்த பிரச்சினைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சினைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும். கடன் பிரச்சினை குறையும். முன்னேறத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

கேட்டை:
இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். நக்ஷத்ரநாதன் புதன் சஞ்சாரம் உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவக்கிரகத்தில் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனத் துணிவு உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
**********************************

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)

உங்கள் திறமைகளை மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் தனுசு ராசியினரே!


நீங்கள் எடுக்கும் காரியங்களில் குறுக்கு வழியை பின்பற்ற மாட்டீர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் புதனுடன் சேர்க்கை பெறுவதால் எதிலும் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் குரு பார்ப்பதால் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.


குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும்.


பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும்.
கலைத்துறையினருக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவீர்கள். ஆடை ஆபரணங்கள் சேரும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு பரிசும் பாராட்டுதல்களும் கிடைக்கும்.


அரசியல்துறையினருக்கு பயணங்களால் மகிழ்ச்சியும் ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.


மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

மூலம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

பூராடம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலகப் பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

உத்திராடம்:
இந்த மாதம் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும்.

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21, 22
******************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x