Published : 30 Dec 2021 08:02 PM
Last Updated : 30 Dec 2021 08:02 PM

தனுசு ராசி அன்பர்களே! ஜனவரி 2022 பலன்கள்;திறமை வெளிப்படும்; பண வரவு; ஆடம்பரச் செலவு வேண்டாம்! 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)


கிரகநிலை:


ராசியில் சூர்யன் - தனவாக்கு ஸ்தானத்தில் புதன், சுக்(வ), சனி - தைரிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - விரய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரக நிலை இருக்கிறது.


பலன்கள்:


தனுசு ராசியினரே! நீங்கள் தெய்வ நம்பிக்கை அதிகமிக்கவர்கள். இந்த மாதம் மன உறுதி அதிகரிக்கும். சொத்துகளை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும்.
தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.

பெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும்.

கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. எனவே அனுசரித்துச் செல்வது நல்லது.
அரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும்.

மூலம்:


இந்த மாதம் உங்களின் மனதிடம் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். ஆடம்பரச் செலவை குறைக்கவும். அவ்வப்போது ஒருவித சோர்வு ஏற்படலாம். அதை தகுந்த நபர்களிடம் திட்டமிட்டு சரிசெய்யவும். எந்தப் பிரச்சினையானாலும் பொறுமையுடனும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும் செயல்படுங்கள்.


பூராடம்:


இந்த மாதம் அடுத்தவரை நம்பி காரியங்களைச் செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். மனக்கவலை அகலும். யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப்படாமல் தனித்தன்மையுடன் விளங்குவீர்கள். தடைப்பட்ட பணம் வந்து சேரும். பயணங்கள் உண்டாகும்.


உத்திராடம்:


இந்த மாதம் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நன்மை ஏற்படும். உங்களது செயல்கள் மற்றவர்களைக் கவரும் விதத்தில் இருக்கும். ஆனால் மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர போட்டிகள் குறையும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், புதன், வெள்ளி; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x