Published : 16 Dec 2021 01:57 PM
Last Updated : 16 Dec 2021 01:57 PM

துலாம், விருச்சிகம், தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! டிசம்பர் 22ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


கிரகநிலை:


தன ஸ்தானத்தில் கேது, செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சூர்யன் - சுக ஸ்தானத்தில் சனி, சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.


பலன்கள்:


கூர்மையான தராசு என்பதற்கேற்ப புத்தியோசனையுடனும் அதே வேளையில் கவர்ச்சியாகவும் பேசி அனைவரிடமும் காரியங்களை சாதித்துக் கொள்வதில் வல்லமையும் உதவிகள் செய்வதன் மூலம் பட்டமும் பதவியும் பெறும் துலாம் ராசி அன்பர்களே!


இந்த வாரம் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அக்னியைப் போல சுடலாம். ஆனால் வார்த்தைகள் வழிகாட்டும் ஒளி நிறைந்திருக்கும். நல்ல செய்கைகளினால் மட்டுமே புகழைத் தக்க வைக்க முடியும்.


உத்தியோகஸ்தர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலை உருவாகும். தனியார் ஊழியர்கள் தெய்வபலத்தை நம்புங்கள். பொருளாதாரம் சரளமாக கிடைக்கும். இருக்கும் புகழை தக்க வைக்க நேரம் சரியாக இருக்கும்.


வியாபாரிகள் தங்கள் தொழிலில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டு தகுந்த பொருளாதாரம் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடந்த காலங்களில் ஆதாயமாய் கிடைத்த பொருளாதாரம் சுபமங்கலச் செலவுகளை உருவாக்கித்தரும்.


பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் கை சேமிப்பை குடும்பச் சுபசெலவுகளுக்காக பயன்படுத்தும் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வ காரியங்களில் பங்கெடுக்கும் மார்க்கங்கள் நிரம்பவே உண்டு, சமூகத்திலும் குடும்ப உறவினர்களிடமும் தகுந்த புகழ் கிடைக்கும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு புதிய வாகனம் வாங்கிடும் யோகபலன்கள் உண்டாகும்.


மாணவர்கள் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் எல்லா வகையிலும் உதவி புரிவார்கள். ஆயள் பலம் பெறும். தந்தை மகன் உறவு சீராக இருக்கும். சுற்றுலா சென்றுவரும் வாய்ப்புகள் மனநிறைவைத் தரும்.


பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குலதெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள். வெள்ளிக்கிழமைதோறும் பச்சரிசி சாதம், வெல்லம், எள், நல்லெண்ணெய் கலந்து காக்கைக்கு வைக்கவும்.
~~~~~~~~~~


விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)


கிரகநிலை:


ராசியில் கேது, செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.


பலன்கள்:


புகழ் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு பொன்னான வாழ்க்கையை அமைத்து நடுநிலைமையுடன் நடக்கும் எண்ணத்துடன் கொண்ட கடமையை பெரிதென போற்றும் விருச்சிக ராசி அன்பர்களே!


இந்த வாரம் நீங்கள் செய்கிற எல்லா செயல்களும் ஒன்றுக்கு பத்தாக லாபத்தை தரும். சாதனைகள் பல நிகழ்த்தி புகழ் பெறும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வகையில் தகுந்த ஒத்துழைப்பும் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வு தருவதாக அமையும். வீடு மனை வாகனம் தொடர்பான இனங்களில் அனுகூலமான நிகழ்வுகள் நடக்கும். திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கிய அனுகூலம் உண்டு. கடன், வழக்கு, எதிரி ஆகிய வகைகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் சமரச பேச்சுகளால் சுமுக நிலைக்கு வரும்.


கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஆலோசனைகள் வழங்கி குடும்பத்தை நல்ல முன்னேற்றமான நிலைக்கு கொண்டு வருவர். தந்தை வழி உறவினர்கள் அளவான முறையில் உறவு வைத்துக் கொள்வார்கள். செய்தொழிலில் முன்னேற்றமும் ஆதாயமும் கண்கூடாக கிடைக்கும்.


உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த காலங்களில் இருந்த செயல்நிலைகள் மாறி மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான பணிவாய்ப்புகளைப் பெறுவார்கள். அரசு சுற்றுலாத் துறையில் பணிபுரியும் அதிகாரிகளும் தனியார் சுற்றுலா நிறுவன அதிகாரிகளும் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை செய்துபொடுத்து பொருளாதார நிலை உயரப்பெறுவர்.


தொழிலதிபர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். நல்ல வியாபார வாய்ப்புகள் பெற்று முன்னேற்றம் பெறுவார்கள். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று பொருளாதார முன்னேற்றம் அடைவர். வியாபாரத்திற்கு புதிய வாகனம் வாங்குவீர்கள். பொதுவாக அனைத்து தொழிலதிபர்களும் நல்ல நிலைக்கு வருவர்.


பெண்கள் சக ஊழியர்களின் மறைமுக நெருக்கடிக்கு உள்ளாவார்கள். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு குறைவாக இருக்கும். தைரியமான குணங்களுடன் பணி செய்வதால் மட்டுமே இருக்கும் வேலையில் இடர்களை எதிர்கொள்ள முடியும்.


மாணவர்களுக்கு படிப்பினில் சிறப்பான பலனைக் காணலாம். இந்த கல்வி ஆண்டில் நீங்கள் விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம். உங்களின் கவனம் படிப்பை விட்டு சிதறாமல் பார்த்துக் கொள்ளவும்.


பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோயிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும். செவ்வாய்கிழமைகளில் அம்பாளுக்கு எலுமிச்சையில் விளக்கு ஏற்றி வழிபடவும்.
~~~~~~~~~~~~~~~~~

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)


கிரகநிலை:


ராசியில் புதன், சூர்யன் - தன ஸ்தானத்தில் சனி, சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண் ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது, செவ்வாய் என கிரக நிலவரம் உள்ளது.


பலன்கள்:


சாதனை வில் என்பதற்கேற்ப சராசரி மனிதனாய் பிறந்து நல்ல செயல்கள் செய்தும் பொறுப்பாக பணி செய்தும் பேரும் புகழும் பெருமையும் அடைந்து சாதனையாளராகத் திகழ்ந்து உரிய பலன் பெறும் தனுசு ராசி அன்பர்களே!


இந்த வாரம் பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும். புத்திரர்கள் தவறான பழக்க வழக்கம் உள்ள நபர்களுடன் சேர்ந்து சிரமப்படும் வாய்ப்புகள் உள்ளதால் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சிலரது குறுக்கீடுகளில் மனக்கசப்புகள் தோன்றி பின்னர் படிப்படியாக நிலைமை சீராகும்.


உத்தியோகஸ்தர்கள் வருமான வரித்துறை, சுங்க இலாகா தணிக்கை துறை ஆகியவற்றில் உயர்பதவி வகிப்பவர்களுக்கு தன் துறை சார்ந்த ஊழியர்கள் ஒத்துழைப்பு குறைவினால் இடம் மாற்றம் அல்லது துறை சார்ந்த அதிகாரிகளின் நெருக்குதல்கள் ஆகியவற்றுக்கு ஆளாகி புதிய அனுபவ பாடங்களைப் பெறுவார்கள்.
தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சிறிது சுணக்கமான நிலை அடைவார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெற்று முன்னேறுவர். பொருளாதார வரவுகள் சமச்சீராக இருக்கும். நற்செயலுக்கேற்ப புகழ் கிடைக்கும்.


பெண்கள் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். பணியிடமாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும்.


மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் படித்து நல்ல தேர்ச்சியும் புகழும் பெறுவார்கள். ஓவியப் பயிற்சிபெறும் மாணவர்கள் தங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்தி பெயரும் புகழும் பெறுவார்கள். படிப்புக்கு தேவையான பெருளாதார வசதிகள் தாராளமாக கிடைக்கும்.


பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும். சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும். ஊற வைத்த நாட்டு கொண்டைக்கடலையை (மூக்கடலை) உங்கள் கையால் கோர்த்து குருவிற்கு அர்ப்பணிக்கவும்.
~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x