Published : 30 Oct 2021 06:55 PM
Last Updated : 30 Oct 2021 06:55 PM

2021 - 2022 குருப்பெயர்ச்சி பலன்கள்; மீன ராசி அன்பர்களே! உத்தியோகத்தில் உயர்வு; தொழிலில் விருத்தி; இல்லத்தில் சந்தோஷம்; ஏற்றம் மாற்றம் நிச்சயம்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மீனராசி அன்பர்களுக்கு வணக்கம்.


இந்த குருப் பெயர்ச்சி மீன ராசிக்கு என்ன பலன்களைத் தரும் என்பதை பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்த குரு பகவான், இப்போது 12-ம் இடமான விரய ஸ்தானத்திற்கு வருகிறார். அப்படியானால் விரயங்கள் அதிகமாக இருக்குமா? என்ற அச்சம் தோன்றுவது இயல்புதான்..! ஆனால் உங்கள் ராசிக்கு அதிபதியான குரு பகவான் விரய ஸ்தானத்திற்கு செல்லும் பொழுது வீண் விரயங்களை நிச்சயம் தர மாட்டார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அப்படியானால் எப்படிப்பட்ட விரயங்களை தருவார்..? சுப விரயங்களை மட்டுமே தருவார்.

சுப விரயங்கள் என்றால் என்னென்ன? வீடு கட்டுவது, வீட்டு பராமரிப்புப் பணிகள் செய்வது, மாடி மேல் மாடி கட்டுதல், திருமணம் செய்தல், திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்தல், பிள்ளைகளுக்கு காதுகுத்து போன்ற விசேஷங்கள் செய்வது, புதிதாக தொழில் தொடங்குவதற்கு முதலீடுகள் செய்தல் இதுபோன்ற சுப விரயங்களை செய்வார். குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக இருப்பது, குடும்பத்தினருடன் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வது, வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது, ஆன்மிகப் பயணங்கள் செய்வது போன்ற சுப விரயங்களும் ஏற்படும்.


குடும்பத்தினர் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கான வழிவகைகளை இந்த குருப்பெயர்ச்சி காட்டும். பூர்வீகச் சொத்து தொடர்பான விஷயங்களில் பாகப் பிரிவினை ஏற்பட்டு அதன் மூலம் ஆதாயம் கிடைப்பது போன்றவை இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் நடக்கும். மேலும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 4, 6 மற்றும் 8 ஆகிய இடங்களை தொடர்பு கொள்வதால் சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் தொடரும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த வீட்டுக் கடன் கிடைக்கும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். 6-ஆம் இடத்தில் குரு பார்வை படுவதால் இதுவரை இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் தீரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிதாக கடன் பெற்று தொழில் அல்லது வியாபாரத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்ப்புகள் காணாமல் போகும். எதிரிகளின் தொல்லைகள் முடிவுக்கு வரும். எட்டாம் இடத்தில் குரு பார்வை படுவதால் வழக்குகள் சாதகமாகும். நீண்டகால ஆரோக்கிய பாதிப்புகள் தீரும். எனவே இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பல வகையிலும் நன்மை தரக் கூடியதாகவே இருக்கும்.

அலுவலகப் பணிகள் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வேறு நிறுவனங்களுக்கு மாறுவது நடக்கும். அல்லது வெளிநாடுகளில் சென்று பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகப் பணிகளில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். குழுவாக பணியாற்றுவது நடக்கும். அந்தக் குழுவுக்குத் தலைமை ஏற்கும் பொறுப்புகளும் கிடைக்கும்.

சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி காலத்தில் நற்பலன்கள் நடக்கும். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும். தொழிலுக்காக வாங்கிய கடன்கள் முழுமையாக அடைபடும். உங்களுடைய தொழில் தொடர்பான உற்பத்தியாகும் பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும். போட்டி நிறுவனங்கள் போட்டியில் இருந்து விலகுவார்கள். தொழிலுக்கு மேலும் அதிக முதலீடுகளைச் செய்து தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது போன்றவை நடக்கும். கூட்டாக தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் இப்போது தனியாக தொழில் செய்யும் வாய்ப்பு உண்டாகும். அயல்நாடுகளில் இருந்து தொழிலுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் எது சிறப்பாக இருக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். மிகப் பெரிய நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யும் வாய்ப்பு பலருக்கும் கிடைக்கும்.

வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். வியாபார இடங்களை விஸ்தரிப்பது, புதிய கிளைகள் தொடங்குவது போன்றவை நடக்கும். இன்னொரு வியாபாரத்தை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கான முதலீடுகள் செய்யும் நிலை ஏற்படும். அதற்கு தேவையான கடன் உதவி கிடைக்கும். பலவகையிலும் உங்களுடைய வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்குக் இந்த குருப்பெயர்ச்சி காலகட்டம் அதிகப்படியான ஆதாயத்தை தரக் கூடிய அளவில் இருக்கும். அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயமும் உண்டு. பல வகையிலும் வருமானம் ஈட்டக் கூடிய வாய்ப்பு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் இருக்கும்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான காலகட்டம். அதிகப்படியான அலைச்சல் ஏற்படும். ஆனாலும் அதற்கு உண்டான பலன் கிடைக்கும். மிகப்பெரிய அளவிலான செய்திகளை கொண்டு சென்று மிகப்பெரிய புகழ் வெளிச்சம் கிடைக்கும். உங்களுக்கான மதிப்பு மரியாதை கிடைக்கும். கூடுதல் பொறுப்புடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் மிகப்பெரிய சாதனைகளைச் செய்ய முடியும்.

கலைத்துறை சார்ந்தவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி காலம் மிக அதிகப்படியாக நன்மைகளை ஏற்படுத்தித் தரும். ஓய்வில்லாத உழைப்பை தர வேண்டியது வரும். புகழ் வெளிச்சம் கிடைக்கும். மதிப்பு மரியாதை உயரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். அரசின் கவனம் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைக் காண்பீர்கள். அசையும் அசையா சொத்துகள் சேரும் யோகம் உண்டு. மிகச் சரியாக திட்டமிட்டு உங்களுடைய கலைச்சேவையை செயல்படுத்தினால் வெற்றிகரமான காலகட்டமாக இருக்கும்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி அதிக நன்மைகளை ஏற்படுத்தி தரக்கூடியதாக இருக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். குடும்ப ஒற்றுமை பலப்படும். கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஆகும். கணவர் வீட்டு உறவுகள் முதல் பெற்றோர்கள் வீட்டு உறவுகள் வரை அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சொத்துகள் சேரும் யோகம் உண்டு. குறிப்பாக கணவர் வீட்டு வகையில் சொத்துகள் கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. சுப நிகழ்வுகள் நடக்கும். சகோதர சகோதரிகளுக்கு திருமணம் நடக்கும், அது உங்கள் முயற்சியால் நடக்கும். இது போன்ற பலவிதமான நன்மைகள் நடைபெறக்கூடிய காலகட்டம் இது.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி முன்னேற்றமும் இருக்கும். உயர்கல்வி முதல் பட்டப்படிப்பு, பட்டயக்கல்வி போன்ற அனைத்து மாணவர்களுக்கும் மிகச்சிறப்பான காலகட்டம். கடின உழைப்புடன் கல்வியை மிகத் திறமையாக முடித்துக் காட்டுவீர்கள். பட்டம் பதவிகள் தேடிவரும். கல்வி முடிந்தவுடன் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். அயல்நாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்பு மிக எளிதாக கிடைக்கும். அதே போல அயல் நாடுகளில் வேலை வாய்ப்பு மிக எளிதாக கிடைக்கும். இந்த குருப் பெயர்ச்சி பல வகையிலும் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்.

மீன ராசிக்காரர்களுக்கு மிக உகந்த பரிகார ஸ்தலம் திருமலை திருப்பதி. அதேபோல் மதுரையில் இருக்கும் "இம்மையில் நன்மை தருவார்" என்ற சிவஸ்தலம் மிகச்சிறப்பான பரிகார ஸ்தலம் ஆகும். இந்த குருப் பெயர்ச்சி காலத்தில் இந்த ஆலயங்களுக்குச் சென்று வருவதன் மூலம் அதிகப்படியான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க வளமுடன்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x