Published : 29 Oct 2021 06:00 PM
Last Updated : 29 Oct 2021 06:00 PM

2021 - 2022 குருப்பெயர்ச்சி பலன்கள்; துலாம் ராசி அன்பர்களே! வேலையில் உயர்வு; கடன் தீரும்; தடைகள் நீங்கும்; பொருளாதாரம் மேம்படும்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


துலாம் ராசி அன்பர்களுக்கு வணக்கம்.


இந்த குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களைத் தரும் என்பதை பார்க்கலாம்.

இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த குருபகவான் அர்த்தாஷ்டம குருவாக செயல்பட்டார். தற்போது 5-ம் இடம் செல்கிறார். நான்காம் இடத்தில் இருந்து பல விதமான சோதனைகளை தந்திருப்பார். ஆரோக்கிய பிரச்சினைகள், அசையும் அசையாச் சொத்துகளில் சிக்கல்கள், தாயாரின் உடல் நலத்தில் பாதிப்புகள் என பல வகையிலும் சோதனைகளை தந்திருப்பார். அது மட்டுமல்லாமல் தொழிலில் பலவித சோதனைகளை தந்திருப்பார். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முடிகின்ற தருவாயில் அதை முடிக்க விடாமல் தாமதம் செய்து இருப்பார். இனி அந்த நிலை இருக்காது. ஐந்தாம் இடம் செல்லும் குரு பகவான் உங்கள் ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்ப்பார். நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றிகரமாக முடியும். இன்னும் சொல்லப்போனால் ஒரு முயற்சியில் இறங்கும்போது வெற்றியை உறுதிப்படுத்தித் தருவார். இதுவரை சந்தித்த பிரச்சினைகள் அனைத்தையும் இப்போது குரு பகவான் மிக எளிதாக முடித்துக் கொடுத்து விடுவார். தடைபட்ட காரியங்கள் எல்லாம் இனி தடையில்லாமல் நடந்தேறும். தாயாரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சொத்துகள் மீது ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வழக்குகள் வாபஸ் பெறப்படும். தடைபட்ட திருமணம் நடந்தேறும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவர்களுடைய கல்வியில் நல்ல முன்னேற்றப் பாதையில் செல்லும். சகோதர சகோதரிகள் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அடகு வைத்த நகைகள் மீட்கப்படும். குலதெய்வ வழிபாடு தடையில்லாமல் நடக்கும். இதுவரை குலதெய்வம் தெரியாமல் இருந்தவர்களுக்கு இப்போது குலதெய்வம் தெரிய வரும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி மிக அதிக நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும்.

அலுவலகப் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு இப்போது எளிதாகக் கிடைக்கும். இதுவரை உங்கள் கருத்துக்கு பெரிய அளவில் மதிப்பு தந்து இருக்கமாட்டார்கள். இப்போது அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். மிகப் பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். இட மாற்றம் ஏற்பட்டு அலைச்சல் உண்டாகியிருக்கும். இப்போது விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பலவிதமான ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி இருந்திருப்பீர்கள். அந்த ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் இப்போது கைவிடப்படும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பெரிய நிறுவனங்களிடம் இருந்து அழைப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். அதிக முயற்சி எடுக்காமலேயே மிக எளிதாக பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய முழு திறமையும் வெளிப்படும் காலம் வந்துவிட்டது, வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கும் வேலை நீட்டிப்பு கிடைக்கும். வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை விண்ணப்பித்தவர்களுக்கு இப்போது குடியுரிமை நிரந்தரமாகும் வாய்ப்பு உண்டாகும். இனி அனைத்தும் சிறப்பாகவே இருக்கும் என்பது உறுதி.

சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நான்காம் இடத்து குருவால் மட்டுமல்லாமல் கரோனாவால் பலவித இன்னல்களுக்கு ஆளாகி இருந்திருப்பீர்கள். இப்போது மிகச் சிறப்பான தொழில் வளர்ச்சி உண்டாகும். இந்த குருபெயர்ச்சி காலகட்டத்தில் அதிக நன்மைகளை பெறக்கூடிய ராசிகளில் துலா ராசிக்காரர்களும் ஒருவர். எனவே இதுவரை கடந்து போனதை கடந்து போனதாக மறந்துவிட்டு, இனி நடக்க இருப்பதில் கவனம் செலுத்துங்கள். மிகச்சிறப்பான வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வரப் போகிறீர்கள். தொழில் தொடங்காதவர்கள் கூட இப்போது தொழில் தொடங்கினால் மிகப்பெரிய வெற்றியைக் காண முடியும். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும், பண உதவி முதல் ஆலோசனைகள் வரை அனைத்தும் கிடைக்கும். எனவே தொழிலில் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தி வெற்றிகளைக் குவியுங்கள். இதுவரை பலவித கடன்கள் பெற்று தொழிலை விருத்தி செய்வதற்கான முயற்சிகளை எடுத்து, அதில் பல தடை தாமதங்களை சந்தித்திருப்பீர்கள். இப்போது அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து தொழில் சிறப்பான முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு கடுமையாக உழைத்தால் மிகப்பெரிய வெற்றிகளைக் காண முடியும்.

வியாபாரிகளுக்கு மிகச் சிறப்பான காலகட்டம் தொடங்கி விட்டது. வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சக வியாபாரிகளிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வந்து வரும். அதன் மூலம் ஏற்பட்ட பலவிதமான விரயங்கள் இனி இருக்காது. உங்கள் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தால் வியாபார வளர்ச்சி மட்டுமல்லாமல் உங்களுடைய வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தைப் பெருக்குவதன் மூலம் அதிகப்படியான ஊழியர்கள் பணிக்கு அமர்த்துவது, கிளைகள் தொடங்குவது போன்றவை நடக்கும். பல விதமான வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்றுமதி வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். மொத்தத்தில் மிகச்சிறப்பான காலகட்டமிது, கடன் பிரச்சினைகள் தீர்ந்து சுதந்திர மனிதராக வலம் வர முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான காலகட்டம் தொடங்கி விட்டது. இதுவரை உங்களுக்கான சரியான அங்கீகாரம் இல்லாமல் ஒரு வித மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பீர்கள். இப்போது உங்களுடைய திறமை அங்கீகரிக்கப்படும். உங்களுடைய திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். உங்களுடைய எழுத்துகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். கவனம் பெற்ற பத்திரிகையாளராக வலம் வருவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் நிறுவனம் உங்களுக்கு முழு சுதந்திரத்தை தரும். பலவிதமான சாதனைகளை செய்யக்கூடிய காலகட்டம் இது.

கலைத் துறை சார்ந்தவர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் நேரம் இது. புகழ் கௌரவம் அந்தஸ்து மரியாதை பட்டம் பதவி என பல விதமான யோகங்கள் இப்போது கிடைக்கும். உங்களுடைய திறமை உலகம் முழுவதும் தெரியவரும். இயல்பாக சொத்து சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சினைகள் முழுமையாக தீரும். உங்கள் துறை சார்ந்த பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு பரபரப்பான, வெற்றிகரமான கலைஞராக வலம் வருவீர்கள்.

பெண்களுக்கு மிக யோகமான நேரம். திருமண முயற்சிகள் எளிதாக முடியும். திருமணம் நடந்தேறும். திருமணமான தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். சுயதொழில் தொடங்கும் சிந்தனையில் இருந்தவர்களுக்கு இப்போது சொந்தத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. கூட்டுத் தொழில் செய்யும் வாய்ப்பும் ஏற்படும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். குழந்தைகளுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த உடல் நல பிரச்சினைகள் அனைத்தும் தீரும். அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை முதல் சொத்து சேர்க்கை வரை தடையில்லாமல் கிடைக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோர்கள் உடல்நலம் சிறப்பாக இருக்கும். அவர்களுடைய ஆதரவு தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கும். அவர்கள் மூலமாக சொத்துகள் கிடைக்கும். மொத்தத்தில் மிக அற்புதமான காலகட்டம் இது.

ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்குமே மிக அருமையான நேரம் இது. கல்வியில் எந்தத் தடையும் இல்லாமல் முதல் மதிப்பெண் பெறக்கூடிய வாய்ப்பு பலமாக உள்ளது. மருத்துவத் துறை மாணவர்கள் மேற்கல்விக்கு எடுக்கும் முயற்சி சாதகமாக இருக்கும். உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி போன்ற படிப்பு படிப்பவர்களுக்கு எந்தவிதமான தடையும் இல்லாமல் வெற்றிகரமாக கல்வியை முடிக்க முடியும். அதற்கு உண்டான பட்டம் பதவி கிடைக்கும். சற்றும் எதிர்பாராத புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பும் எளிதாக கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலத் தேவையான உதவிகள், வங்கிக் கடன் போன்றவை கிடைக்கும். மொத்தத்தில் கல்வியில் சாதிக்கக் கூடிய காலமாகும்.

துலாம் ராசி அன்பர்களுக்கு, சிறந்த பரிகார ஸ்தலம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் ஆகும். எனவே இந்த குருப் பெயர்ச்சி காலத்தில் அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வாருங்கள். அதிக நன்மைகளைப் பெற முடியும். அதேபோல சிவாலயங்களில் இருக்கும் தட்சிணாமூர்த்தி குரு பகவானையும் வணங்கி வாருங்கள். பெரும் நன்மைகளை பெறுவீர்கள். வாழ்க வளமுடன்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x