Published : 27 Oct 2021 07:57 PM
Last Updated : 27 Oct 2021 07:57 PM

2021 - 2022 குருப்பெயர்ச்சி பலன்கள் ; ரிஷப ராசி அன்பர்களே! வேலை தேடி வரும்; வியாபாரத்தில் லாபம்; குடும்பத்தில் சந்தோஷம்; வீண் பேச்சு தவிர்க்கவும்! 

-’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரிஷப ராசி நேயர்களுக்கு வணக்கம்.


இந்த குருப்பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களாகிய உங்களுக்கு என்ன மாதிரியான பலன்களை தரக் காத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து 5-ம் பார்வையாக குரு பகவான் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பல வகையிலும் உங்களுக்கு உதவிகரமாகவும், பக்கபலமாகவும் இருந்தார். தற்போது பத்தாம் இடமான கும்பத்திற்குச் செல்கிறார். குரு 10-ம் இடத்திற்குச் சென்றாலும் அவருடைய பார்வை உங்கள் ராசிக்கு 2-ம் இடம், 4-ம் இடம், 6-ம் இடம் ஆகிய இடங்களில் தன் பார்வையைச் செலுத்துவதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும், ஏற்கெனவே வீடு அல்லது நிலபுலங்கள் பாகப்பிரிவினைகள், சட்ட சிக்கல்கள் ஏதும் இருந்தால் இப்போது அனைத்தும் முடிவுக்கு வரும். குரு 6-ம் இடத்தை பார்வையிடுவதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நெருக்கடி தந்து கொண்டிருந்த பல விதமான தொல்லைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தற்போது பணிபுரியும் இடத்தில் இருந்து வேறு நல்ல நிறுவனத்திற்கு மாறும் வாய்ப்பையும் குருபகவான் கொடுப்பார். எனவே குரு பகவான் 10-ம் இடத்திற்கு வந்தாலும் உங்களுக்கு நன்மைகளைச் செய்வதில் எந்தக் குறையும் வைக்க மாட்டார்.

குடும்ப உறவுகள் பலமாக இருக்கும். ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். இல்லத்திற்கு புதிய உறுப்பினர் வருவார். அது திருமணமாகவும் இருக்கலாம், அல்லது புத்திரபாக்கியமாகவும் இருக்கலாம். வருமானத்திற்கு குறை இருக்காது. குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். எனவே குரு பகவான் உங்கள் குடும்பத்திற்கு பல வகையிலும் நன்மைகளைத் தருவார் என்பதை நிச்சயமாக நம்பலாம்.

சகோதர சகோதரிகளுக்கு பல வகையிலும் உதவிகள் செய்ய வேண்டியது வரும். அதன் மூலம் சகோதர சகோதரிகளின் ஆதரவும் அன்பும் மேலும் அதிகமாகும். அவர்களுடைய முக்கியத் தேவைகளை முன்னின்று பூர்த்தி செய்து தாருங்கள். அது உங்களுக்கு பலவகையிலும் நன்மைகளை உண்டாக்கித் தரும். சொத்துகள் பாகப்பிரிவினைகள் செய்யும்போது சற்று விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். அதனால் உங்களுக்கு இழப்பு ஏதும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் நன்மைகள் தான் அதிகமாகும். சகோதரிகள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். அதற்கு தயாராகிக் கொள்ளுங்கள். பத்தாமிடமான கர்ம ஸ்தானத்திற்கு குரு பகவான் வருவதால் தாய் தந்தையரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். அவர்களுக்கு சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டாலும் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சல் அதிகரிக்கும். ஆனாலும் கவலை வேண்டாம். அதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதாவது தற்போது இருக்கும் வீட்டை விட நல்ல வீட்டுக்கு மாறும் வாய்ப்புகள் உள்ளன. பணியில் மாற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இப்போது மிக எளிதாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கிடைக்கின்ற எந்த வாய்ப்பையும் தவற விடவேண்டாம். அனைத்தும் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும். அது வீடு மாற்றமாக இருந்தாலும், வேலையில் இடமாற்றமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வது நல்லது.

சுய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தற்போது தொழில் தொடர்பாக வெளியூர், வெளிநாடு என அதிகம் சுற்ற வேண்டியது வரும். அனைத்தும் உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். போட்டி நிறுவனங்கள் சற்று இடைஞ்சல்களைக் கொடுத்தாலும் உங்கள் தயாரிப்புக்கு நிச்சயம் ஒரு மதிப்பு மரியாதை இருந்து கொண்டே இருக்கும். ஊழியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தாருங்கள். தொழிற்சாலைகளில் இயந்திர பழுதுகளை அவ்வப்போது சரி செய்து விடுங்கள். இப்படி கவனமாக இருந்தால் தொழிலில் எந்தவிதமான பிரச்சினைகளும் இருக்காது. போட்டி நிறுவனங்களின் மீது உணர்ச்சிவசப்பட்டு வழக்குகள் போடுவதை தவிர்த்து விடுங்கள். உங்களுடைய தொழிலில் மட்டும் முழுமையாக கவனத்தை செலுத்தினால் தொழிலில் மிகச் சிறந்த வெற்றியாளராக வலம் வர முடியும் என்பதை உணருங்கள்.

அலுவலகப் பணிகளில் உங்களுடைய கருத்தையும் கவனத்தையும் ஒருங்கே செலுத்துங்கள். சக ஊழியர்களுடன் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடவேண்டாம். சக ஊழியர்களையோ உயர் அதிகாரிகளையோ விமர்சனம் செய்து பேசவேண்டாம். குழுவாகப் பணியாற்றும்போது மற்றவர்களோடு இணைந்து செயல்படுங்கள். உங்கள் கருத்தை திணிப்பதில் பிடிவாதமாக இருக்காதீர்கள். விட்டுக் கொடுத்துச் சென்றால் எந்தவிதமான பிரச்சினைகளும் இருக்காது. பணி நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டியது வரலாம். அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அனுபவமே சிறந்த பாடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி வெளியூர் பயணங்கள் ஏற்படுகிறதே என்று கவலைப்பட வேண்டாம். இவை அனைத்தும் பிற்காலத்தில் உங்களுக்கு ஒரு மிகப் பெரிய உதவிகளை செய்யக்கூடியதாக இருக்கும் என உறுதியாக நம்புங்கள். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் கிடைக்கப் பெற்றால் மட்டும் வேலை மாற்றம் செய்து கொள்ளுங்கள். நீங்களாக வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடலாம் என்ற எண்ணம் ஏதும் இருந்தால் அதை கைவிட்டு விடுங்கள். அழைப்பு கிடைக்கும் வரை பொறுமை காக்க வேண்டும். அரசு அலுவலராக இருந்தாலும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் வேலையில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். சிறிய தவறு கூட உங்களுக்கு எதிராக திருப்பப்பட்டு விடும். எனவே கவனமாக பணிகளைச் செய்யுங்கள். உயரதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லுங்கள். மறந்தும் கூட குறுக்கு வழியில் செல்ல வேண்டாம் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.

வியாபாரிகளுக்கு மிகச் சிறந்த வியாபார வாய்ப்புகளும் வியாபாரத்தின் மூலமாக பலவித ஆதாரங்களும் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் புதிய கிளைகள் தொடங்குவது போன்றவை நடக்கும். அதற்காக அதிகம் முதலீடு செய்ய வேண்டியது வரும். தேவையான கடன் உதவி கிடைக்கும். வியாபாரத்திற்காக வைத்திருக்கும் பொருட்களில் தரமான பொருட்களை மட்டுமே வைத்து விற்க வேண்டும். அதில் மிக கவனமாக இருங்கள். தரமற்ற பொருட்களுக்கு ஊக்கம் தராதீர்கள். சக வியாபாரிகளுடன் போட்டி மனப்பான்மை இல்லாமல் நட்புடன் இருங்கள். அது உங்கள் வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்தும்.

விவசாயிகளுக்கு உங்கள் விவசாய உற்பத்திப் பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகி மனமகிழ்ச்சியை உண்டுபண்ணும். சரியான பருவத்தில் உங்களுக்கு விளைச்சல் கைகொடுக்கும். விவசாயப் பொருட்கள், விவசாய இயந்திரங்கள் வாங்க வேண்டியது வரும். அவை அனைத்தும் முதலீடுதான் என்பதை நம்புங்கள். புதிய விவசாய முயற்சிகளில் ஈடுபடும் எண்ணம் உடையவர்கள் சுய ஜாதகத்தை ஆய்வு செய்து விட்டு புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். பணப்பயிர்கள் ஓரளவுக்கு நன்மை தரக்கூடியதாகவும் இருக்கும். உற்பத்தியான பொருட்களை கடனுக்குக் கொடுப்பதைச் செய்ய வேண்டாம். கை மேல் பணம் என்பதில் உறுதியாக இருங்கள். கடனுக்கு கொடுத்தால் அந்த பணத்தை திரும்ப வாங்குவதற்குள் பெரும்பாலும் வருத்தம் மேலிடும். எனவே கடனுக்கு எந்தப் பொருளையும் கொடுக்க வேண்டாம்.

கலைத்துறை சார்ந்தவர்கள், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்கள், திரைக்கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், இசை நடனம் நாட்டியம் முதலான துறைகளில் உள்ள கலைஞர்கள், அனைவருக்கும் மிகச் சிறப்பான வருமானம் தரக்கூடியதாக இந்த குருப் பெயர்ச்சி இருக்கும். தகுதியான நபர்களிடம் ஒப்பந்தங்கள் போட்டு உங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ளுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கறாராக இருப்பது நல்லது. வெளிநாடுகளில் கலைத் துறை சம்பந்தமான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது வந்தால் ஒப்பந்தத் தொகை முழுவதையும் பெற்றுக்கொண்ட பிறகு செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பத்திரிகை, ஊடகத்தில் இருப்பவர்கள் செய்தி சேகரிக்கச் செல்லும்பொழுது தகவலை உறுதிப்படுத்திய பின் செல்லுங்கள். தவறான தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மதிப்பைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம். மிகச் சரியான செய்திகளைத் தருவதன் மூலம் உங்களுக்கு ஒரு சிறப்பான நன்மைகள் காத்திருக்கின்றன என்பதை உறுதியாக நம்புங்கள்.

பெண்களுக்கு மிகச் சிறப்பான நன்மைகள் நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சி இது. திருமண முயற்சிகள் இப்போது மிக எளிதாக கைகூடும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவச் செலவு செய்து கொண்டிருந்தவர்களுக்கு இப்போது மருத்துவத்தின் உதவி இல்லாமலேயே புத்திரபாக்கியம் கிடைக்கும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது சிறப்பான வேலை கிடைக்கும். அரசுப் பணிக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது மிக எளிதாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தேர்வுகளில் முழு கவனத்தைச் செலுத்துங்கள். வருமானம் திருப்திகரமாக இருப்பதால் ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு பலருக்கும் கிடைக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு, குடியுரிமை போன்ற விஷயங்களும் மிக எளிதாக நிறைவேறும். சுயதொழில் தொடங்க நண்பர்கள் உதவி செய்வார்கள். குடும்ப உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து தரக் கூடிய அளவில் உங்கள் சகோதரர்களும் சகோதரிகளும் துணை நிற்பார்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்வி கற்பவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மேற் கல்வி கற்கும் வாய்ப்பு கனிந்து வரும். அதற்குத் தேவையான வங்கிக்கடன் கிடைக்கும். படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு உறுதியாகும். அதுவும் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி கற்க விரும்புபவர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். அதன் மூலம் உங்களுடைய தரம் உயரக் கூடிய வாய்ப்பு இந்த காலகட்டத்தில் பிரகாசமாக இருக்கிறது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

ரிஷப ராசி அன்பர்கள், திருச்சி வெக்காளியம்மன், திருவக்கரை வக்ரகாளியம்மன் முதலான ஆலயங்களுக்குச் சென்று வருவதன் மூலம் அதிகப்படியான நன்மைகளும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வாழ்க வளமுடன்.
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x