Published : 15 Oct 2021 12:48 PM
Last Updated : 15 Oct 2021 12:48 PM

புலிப் பல், யானைத் தந்தம், முறுக்கு மீசை; உத்திராட நட்சத்திர குணங்கள்; உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 27

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

சென்ற வாரம் பூராடம் நட்சத்திரம் பற்றி விரிவாகக் கண்டோம். இந்த வாரம் நாம் உத்திராடம் நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் விரிவாக காணலாம்.

உத்திராடம்
உத்திராடம் என்பது வானத்தில் தனுசு ராசி மண்டலத்தில் மற்றும் மகர ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம். நாம் கண்களில் காணும்போதும் வளைந்த புலி பல் போலவும், யானைத் தந்தம் போலவும், முறுக்கு மீசையைப் போலவும் காட்சி அளிக்கும். ஆகவே இதன் வடிவமாக வளைந்த புலிப் பல், யானைத் தந்தம், முறுக்கு மீசை காணப்படும் ஆகியவை கூறலாம்.

இதன் அதிபதி சூரியன் கிரகம். இது மஞ்சள் நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாக காணப்படும் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சூரிய திசையே முதலில் தொடங்கும். இந்த ராசியில் சனி மற்றும் செவ்வாய் பலம் பெறுகிறது. ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு செவ்வாய் மற்றும் சனி நீச்சம் அல்லது பலம் இழப்பது நன்மையானது அல்ல. எனவே இவர்கள் எந்த மாதிரியான தெய்வங்களை வணங்கவேண்டும் என்று பார்க்கலாம்.

ஆடித்தபசு - அபிஜித் தாரை வழிபாடு

சமஸ்கிருதத்தில் ஆடிமாதம் என்பதை ஆஷாட மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமியில் இந்தியாவின் தெற்குப் பகுதியான சங்கரன் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய விழா ஆடித்தபசு.

சமஸ்கிருதத்தில் தபஸ் என்றால் தவம் என பொருள். ஆஷாட நட்சத்திர மண்டலத்தை நோக்கி கோமதி அம்மன் தவமிருந்த காரணத்தால் இந்தப் பண்டிகை பெயர் ஆடித்தபசு.

இந்த விழா சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்ற தத்துவத்தை போதிக்கிறது. இதை ஜோதிட ரீதியில் பார்ப்போம். முதலில் சிவனும் நாராயணனும் ஒருவரே என்று தவமிருந்த பார்வதிக்கு ஏன் கோமதி என பெயர் வந்திருக்கிறது என காணலாம். கோ என்றால் பசு, மத்யம் என்றால் நடுவில், அதாவது பசுக்களின் மத்தியில் அமர்ந்து தவமிருந்த அம்மன் என்பதால் அவருக்கு கோமதி என்று பெயர். இதை ஜோதிட ரீதியாகக் காண, பசுவின் மடிகளைப் போன்ற தோற்றம் கொண்டது பூச நட்சத்திரம் ஆகும், அங்கு அமர்ந்த அம்மனுக்கு கோமதி என பெயர் வந்தது.

இந்த விழா சரியாக ஆடி சதுர்த்தியில் தொடங்கி சதுர்ததசி திதி வரை உள்ள பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆதாவது ஆடி பூரத்தில் தொடங்கி ஆடி பௌர்ணமிக்கு முதல்நாள் முடிகிறது. இந்த பத்து நாட்களும் அம்மன், சங்கர நாராயண திருவுருவம் காண தவமிருந்ததாக சொல்லப்படுகிறது.

பூசத்தின் மத்தியில் சூரியன் அமர்ந்து, அதற்கு நேர் எதிரே இருக்கும் உத்திர ஆஷாட நட்சத்திர மண்டலத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும்போது பௌர்ணமி உண்டாகும். இந்த பெளர்ணமி ஒளியில் சங்கர நாராயணராக சிவா விஷ்ணு இணைந்து காட்சி அளித்தனர்.

இந்த நேரத்தில் அபிஜித் என்ற நட்சத்திரம் பற்றி அறிய வேண்டியிருக்கிறது. அபிஜித் என்றால் தொடர் வெற்றி என பொருள். அபிஜித் என்பது ஒரு ஆண் நட்சத்திரம். இதன் ஆங்கிலப் பெயர் வேகா (Vega) இது உத்திராடம் நான்காம் பாதமும், திருவோணம் ஒன்றாம் பாதமும் இணைந்து உருவான நட்சத்திரம் ஆகும்.

ஜோதிடத்தில் உத்திராட நட்சத்திர அதிபதி சங்கரன் ஆகும். திருவோண நட்சத்திர அதிபதி நாராயணன் ஆகும். இருவரின் ஒவ்வொரு பாதியும் இணைந்து வானில் தெரிவதே சங்கர நாராயண வடிவாகும்.

இதை கடக ராசியின் மத்தியில் பூசத்தில் அம்மன் அமர்ந்து சங்கர நாராயணை தரிசனம் செய்தார். எனவே சங்கர நாராயணன் என்பது அபிஜித் நட்சத்திர ஒரு பகுதியாகும். இதை Epsilon 1,2 stars என்கின்றனர் வானவியலாளர்கள். இந்த நட்சத்திரம் அபிஜித் நட்சத்திரத்தின் மேல் முனையில் காணப்படுகிறது. இது ஒரு இரட்டை நட்சத்திர Binary star கூட்டமாகும். இவற்றை double என்றும் அழைக்கின்றனர். இந்த இரு நட்சத்திரமும் ஆடி பௌர்ணமி அன்று வடகிழக்கு வானில் வெறும் கண்ணில் பார்க்க இயலும். இந்தக் காட்சியே சங்கர நாராயண இணைவுக்காட்சியாக ஆடித்தபசு விழாவில் கொண்டாடப்படுகிறது.

வாழ்க்கையில் வெற்றியைத் தரும் அபிஜித் நட்சத்திரத்தைக் காணும் இந்த நிகழ்வையே முன்னோர்கள் ஆடித்தபசு என கொண்டாடி மகிழ்ந்தனர்.

உத்திராட ரகசியம்

அச்சிறுப்பாக்கம் என்ற ஊரில் அமைந்திருக்கும் ஆட்சீஸ்வரர் என்ற கோவில் பற்றி இப்பதிவில் அறியலாம். மூன்று உலகம் உருவாக்கி உலக மக்களுக்கு தீய செயல்களைச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த அரக்கர்களை அழிப்பதற்கு சிவபெருமான் உத்திராடம் என்ற நட்சத்திரத்தின் வடிவான சிவதனுசை ஏந்தி அவர்களுடன் போர் செய்ய பயணம் செய்கிறார். அந்தப் பயணத்தில் அவர் சென்று கொண்டிருந்த தேரின் அச்சு முறிந்து விடுகிறது இதற்கான காரணத்தை தனது ஞான திருஷ்டியால் அறிந்த சிவபெருமான் விநாயகரை வணங்கி இந்தத் தடையை சரி செய்யுமாறு கோரிக்கை வைக்கிறார். அந்த கோரிக்கையை ஏற்று விநாயகப்பெருமான் அச்சு முறிவை சரி செய்கிறார். ஆகவே இந்நிகழ்வை குறிக்கும் கோயிலாக அச்சிறுபாக்கத்தில் அமைந்திருக்கிறது ஆட்சீஸ்வரர் கோயில்.

உத்திராடம் என்ற நட்சத்திரத்தின் வடிவம் யானையின் தந்தம் மற்றும் அச்சாணி ஆகும். அதுபோல உத்திராட நட்சத்திரத்தின் அதிபதிகள் முறையே விநாயகப் பெருமான் மற்றும் சிவபெருமான் ஆகியோர் வருகின்றனர்.

இந்த ஆட்சீஸ்வரர் கோயிலின் புராணக் கதையில் உத்திராட நட்சத்திரம் சம்பந்தப்பட்ட விநாயகப் பெருமானும் சிவபெருமானும் அச்சாணியும் மேலும் உத்திராட நட்சத்திர வடிவான நான் ஏற்றிய சிவதனுசு இடம் பெற்றிருப்பதைக் காணமுடியும் ஆகவே உத்திராட நட்சத்திர நபர்கள் இந்த கோவிலில் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு தரும்.

பூராடம், பரணி மற்றும் பூரம் நட்சத்திர நபர்கள் ஆட்சீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது சர்வ சம்பத்துகளும் பெற்றுத்தரும்.
திருவோணம், ரோகிணி மற்றும் அஸ்தம் நட்சத்திர நபர்கள் இக்கோயிலுக்குச் சென்று வழிபடும்போது இக்கட்டான சூழலில் இருந்து வழிகாட்டுதல் கிடைக்கும்.

ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி நட்சத்திர நபர்கள் இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது காரியஸித்தி உருவாக்கிக் கொடுக்கும்.
புனர்பூசம், விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திர நபர்கள் இக்கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால் நீண்டகால சிக்கலில் இருந்து விடுதலை தரும்.

இதுவரை உத்திராடம் நட்சத்திரம் பற்றி அறிந்தோம். அடுத்து வரும் கட்டுரையில் திருவோணம் நட்சத்திரம் பற்றி தெளிவாக அறியலாம்.

• வளரும்
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x