Published : 20 Sep 2021 03:00 PM
Last Updated : 20 Sep 2021 03:00 PM

வீணை, யானை தும்பிக்கை, சிங்க வால். வேர் - மூலம் நட்சத்திர வடிவங்கள்! உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 25

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

சென்ற வாரம் கேட்டை நட்சத்திரம் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் மூலம் நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் விரிவாகவும் காணலாம்.

மூலம்
மூலம் என்பது வானத்தில் தனுசு ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம் ஆகும். நாம் கண்களில் காணும் போதும் வேர் போலவும், யானை தும்பிக்கை போலவும், வீணை போலவும், சிங்க வால் போலவும் காட்சி தரும். ஆகவே இதன் வடிவமாக வேர், யானை தும்பிக்கை, வீணை, சிங்க வால் கூறலாம்.

இதன் அதிபதி கேது கிரகம் ஆகும். இது வெளிர் பச்சை நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாக காணப்படும் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு கேது திசையே முதலில் தொடங்கும். இந்த ராசியில் குரு பலம் பெறுகிறது. ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு குரு நீச்சம் அல்லது பலம் இழப்பது நன்மையானது அல்ல. எனவே இவர்கள் எந்த மாதிரியான தெய்வங்களை வணங்கவேண்டும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

ராவணனின் சிவபக்தி
ராவணனின் ஜென்ம நட்சத்திரம் மூலம். மூல நட்சத்திரத்தின் வடிவம் வீணை ஆகும். மூலம் நட்சத்திரத்தின் 15ம் நட்சத்திரம் திருவாதிரை. இது மூல நட்சத்திரத்தின் சாதக தாரை. சாதக தாரையில் உதித்த கடவுளை வணங்குவது தோஷம் போக்கும். எனவே ராவணன் தனது சாதக தாரையான திருவாதிரையில் உதித்த சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான்.

ஒருமுறை அகங்காரம் கொண்டு கயிலாயத்தை தன் 20 கைகளால் ராவணன் தூக்க முயன்றபோது, தனது கால் விரலால் கயிலாய மலையை அழுத்தி அதன் அடியில் ராவணனை சிக்க வைத்தார் சிவபெருமான்.

அப்போது தனது கை நரம்புகளை விரல்களில் கட்டி, தனது மூல நட்சத்திர வடிவ இசைக் கருவியான வீணை போல மாற்றி, அதில் சாமகானம் இசைத்து தனது பக்தியை வெளிப்படுத்தினான் ராவணன்.

சிவபெருமானின் திருவாதிரை நட்சத்திரத்திற்கு, ராவணனின் ஜென்ம நட்சத்திரம் மூலம் பிரதியாக்கு தாரை. அதாவது சிக்கல் தரும் தாரை என்பதை கவனிக்க வேண்டும். எனவே ராவணன் தனக்கு சிவபெருமான் அளித்த வரங்களை தவறாக பயன்படுத்தினான். அதனால் மூல நட்சத்திரத்தின் வதை தாரையான புனர்பூசத்தில் உதித்த ராமனால் வதைக்கப்பட்டான்.

அனுமனின் ஜென்ம நட்சத்திரம் மூலத்தின் வதை தாரை புனர்பூசம் எனினும், ராமனின் நட்சத்திரம் புனர்பூசத்திற்கு அனுமனின் மூலம் க்ஷேம தாரை ஆகும். எனவே ராமபிரான் தனது க்ஷேம தாரை மூலத்தில் பிறந்த அனுமனை தனது நண்பராக்கிக் கொண்டு ராவணனை எதிர்த்து போர் செய்தார். எனினும் அனுமனுக்கு வதை தாரை ராமன் என்பதால், ராமருக்கு உதவுகின்ற போது அனுமன் பல இக்கட்டான தருணங்களை மற்றும் ஆபத்துகளை சந்தித்தார்.

இந்திரனும் மின்னலும்
இந்திரனுக்கு ஏன் மின்னல் ஆயுதமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றிய ஒரு விளக்கமான பதிவு.

இந்திரனின் ஜென்ம நட்சத்திரம் கேட்டை. இது விருச்சக ராசியில் அமைந்திருக்கும் கடைசி நட்சத்திரம். ஒரு நட்சத்திரத்தின் 2, 11 மற்றும் 20வது நட்சத்திரங்கள் சம்பத்து தாரைகள் என்று அழைக்கப்படும். அதன்படி பார்க்கையில் கேட்டை நட்சத்திரத்திற்கு சம்பத்து தாரை என்பது மூலம் ஆகும்.

மூலம் என்ற நட்சத்திரத்திற்கு அர்த்தம் வேர் என்பதாகும். மண்ணிற்கு அடியில் ஊடுருவிச் செல்லும் பல கிளைகளைக் கொண்ட வேர் என்பது மூல நட்சத்திர வடிவம். அதுபோல வானத்தில் தோன்றும் மின்னல் வேர் வடிவத்திற்கு ஒத்திருப்பதைக் காணமுடியும்.

அதனால் கேட்டையில் ஜனித்த இந்திரனுக்கு மின்னல் வடிவம் ஆயுதமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. யார் ஒருவர் தன் நட்சத்திரத்திற்கு சம்பந்தப்பட்ட சம்பத்து தாரையை தன்னுடன் வைத்திருக்கிறாரோ அவர்கள் எளிதில் புகழும் சமூகத்தில் நன்மதிப்பும் அழியாத செல்வமும் பெறுவார்கள் என்பது தாரை சூட்சுமம்.

ஆகவே புதனை அதிபதியாகக் கொண்ட கேட்டை ரேவதி மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த நபர்கள் மின்னல் வடிவத்தை கைப்பேசியில் முகநூல் முகப்பில் வாட்ஸ்அப் முகப்பில் அல்லது அவர்கள் வாகனத்தில் ஏதேனும் ஒருவிதத்தில் இந்த மின்னல் வடிவத்தை பயன்படுத்தி வர அவர்களுக்கு செல்வ வளமும் அழியாத புகழும் கிடைக்கும்.

இதுவரை மூலம் நட்சத்திரம் பற்றி அறிந்தோம். இனி வரும் கட்டுரையில் பூராடம் நட்சத்திரம் பற்றி தெளிவாக அறியலாம்.

- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x