Published : 30 Jun 2021 04:06 PM
Last Updated : 30 Jun 2021 04:06 PM

உத்திரத்துக்கும் ரோகிணிக்குமான பந்தம்!  உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 18

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

சென்ற வாரம் பூரம் நட்சத்திரம் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் நாம் உத்திரம் நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாக மற்றும் விரிவாக காணலாம்.

உத்திரம்

பல்குன நட்சத்திர மண்டலத்தின் கடைசிப் பகுதி உத்திர பல்குணி எனும் உத்திர நட்சத்திரம். இது வானத்தில் தொட்டில் போலவும், ஊஞ்சல் போலவும், நீண்ட கோல் போலவும் காணப்படும். சிம்ம ராசியிலும் கன்னிராசியிலும் வியாபித்து இருப்பதால் உத்திரம் ஒரு உடைந்த நட்சத்திரம் ஆகும். உத்திரம் சூரியனை அதிபதியாகக் கொண்டிருக்கும் நட்சத்திரம் சூரியனின் சுயவீடான சிம்மத்தில் இருப்பதால் இது சிறப்பான நட்சத்திரமாக கூறப்படுகிறது.

அர்ஜுனனும் கிருஷ்ணனும்
மித்ரன் என்றால் நண்பன் என்று பொருள். பரம மித்ரன் என்றால் உங்களின் உயிர் நண்பர் என பொருள். உங்கள் ஜென்ம நட்சத்திரத்தின் ஒன்பதாவது நட்சத்திரம் உங்கள் பரம மித்ர நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் உங்களுக்கு நண்பர் அமைய வாழக்கை முழுவதும் அவர் உங்களுக்குத் துணையாக வருவார்.

இதில் இன்னொரு சிறப்பான விஷயம் என்னவெனில் உங்கள் பரம மித்ரனின் (இரண்டாம் நட்சத்திரம்) சம்பத்து நட்சத்திரம் உங்கள் நட்சத்திரமாக வருவது. உதாரணமாக மகாபாரதத்தில் கிருஷ்ணரின் நட்சத்திரம் ரோகிணி. இதன் ஒன்பதாவது நட்சத்திரம் உத்திரம். உத்திரம் அர்ஜுனன் நட்சத்திரம். தனது கலியுக அவதார நோக்கத்தை கிருஷ்ணன் தனது பரம மித்ரனான அர்ஜூனன் கொண்டு செயல்படுத்தினார். மேலும் தனது உயிர் நண்பனாக பஞ்சபாண்டவரில் அர்ஜுனரை மட்டுமே தேர்ந்தெடுத்தார். காரணம் ரோகிணிக்கு பரம மித்ர தாரை அர்ஜுனன் நட்சத்திரமான உத்திரம்.

அதுபோல, அர்ஜுனன் கிடைப்பதற்கரிய கீதா உபதேசத்தை தனது சம்பத்து நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக கொண்ட கிருஷ்ணரிடமிருந்து பெற்றார்.
எதிரிகளை வெல்லும் சம்பத்து தாரை அர்ஜுனனின் நட்சத்திரம் உத்திரம். அதன் வதை தாரை ஆயில்யம். வதை தாரை என்பது வதைக்கும் எண்ணம் கொண்டது. ஆயில்யம் என்பது பாம்பு. அர்ஜுனனைக் கொல்வதற்கு தட்சகன் என்ற பாம்பு திட்டமிட்டு காத்திருந்தது.

அர்ஜுனின் சம்பத்து தாரை ரோஹிணியில் பிறந்த கிருஷ்ணர். ரோகிணி என்பது ஆயில்யத்தின் பிரதியக்கு கு தாரை. ஆதாவது சிக்கல் தரும் தாரை. ஆயில்யம் செய்து வைத்த திட்டத்தை தவிடு பொடியாக்கும் தன்மை கொண்டது. ஆகவே தட்சகன் அர்ஜுனனைக் கொல்ல சதித் திட்டம் போட்டபோதெல்லாம் அர்ஜுனின் சம்பத்து தாரை கிருஷ்ணர் ஆயில்ய வடிவான பாம்பின் திட்டத்தை முறியடித்தார். அதில் ஒரு நிகழ்வே நாகாஸ்திரத்தில் இருந்து அர்ஜுனனை கிருஷ்ணர் காத்தது. மேலும் தனது சம்பத்து தாரை ரோகிணி வடிவான தேரில் அர்ஜுனன் இருந்ததால், போரில் படுகாயம் இன்றி தப்பித்தான்.

சின் முத்திரை தாரை ரகசியம்

சந்திரனின் நட்சத்திரங்கள் திருவோணம் ஹஸ்தம் மற்றும் ரோகிணி. இதில் ஹஸ்தம் என்பது உள்ளங்கையைக் குறிக்கும். உள்ளங்கை வடிவங்களை பல்வேறு விதமாக நாம் நமது சனாதன தர்மத்தில் காணமுடியும். அதில் ஒரு வடிவம் சின்முத்திரை வடிவம்.

ஆள்காட்டி விரல் நுனியையும், கட்டைவிரல் நுனியையும் இணைத்து பிடித்திருக்கும் வடிவம் சின்முத்திரை. இந்த முத்திரையில் உள்ளங்கை மிகத் தெளிவாகவே தெரியும்.

உத்திரத்தில் அவதரித்த ஐயப்பசுவாமி சின்முத்திரை பிடித்தவாறு அமர்ந்திருப்பதைக் காணலாம். இந்த சின்முத்திரை என்பது ஹஸ்த நட்சத்திரம் வடிவமாகும். உத்திரத்தில் அவதரித்த ஐயப்பனுக்கு சின்முத்திரை சம்பத்து தாரையாக வரும்.

ஆகவே உத்திரம், உத்திராடம், கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சின்முத்திரை வடிவத்தை தினமும் தன் கைகளில் சிறிதுநேரம் பிடித்து வர சமூகத்தில் நன்மதிப்பு பெறலாம்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தினமும் காலையில் சில மணித்துளிகள் சின்முத்திரை பயன்படுத்தி வருவது மிகுந்த நன்மை தரும்.
சித்திரை, அவிட்டம், மற்றும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த முத்திரையை பயன்படுத்த வேண்டும் சிக்கலான நேரத்தில் வழிகாட்டியாக உதவும்..

இதுவரை உத்திரம் நட்சத்திரம் பற்றி அறிந்தோம். அடுத்து ஹஸ்தம் நட்சத்திரம் பற்றி தெளிவாக அறியலாம்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x