Published : 09 May 2021 11:49 AM
Last Updated : 09 May 2021 11:49 AM

உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் - 11; ஸ்ரீராகவேந்திரரை குருவாக வழிபடும் ராகவா லாரன்ஸ்! 

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

கடந்த அத்தியாயத்தில் ரோகிணி நட்சத்திரம் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் நாம் ரோகிணி நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.

மிருகசீரிடம்

மிருகசீரிடம் நட்சத்திரம் வான மண்டலத்தில் கொம்புள்ள மானின் தலை போலவும், தேங்காய் கண் போன்ற தோற்றத்திலும் காணப்படும். இதற்கு வடமொழியில் மார்க்க சீரிடம் என்ற பெயருண்டு. மிருகசீரிட நட்சத்திரம் வானில் சிவப்பு நிறத்தில் பளிச்சிடும் வண்ணத்தில் காணப்படும். இந்த நட்சத்திரம் ஆண் ராசி மற்றும் பெண் ராசியாகிய ரிஷபம் மற்றும் மிதுனம் ஆகிய ராசி மண்டலத்தில் நடுவில் இருக்கும் நட்சத்திரம். ரிஷபத்தில் இரண்டு பாதமும், மிதுனத்தில் இரண்டு பாதமும் காணப்படும். இதற்கு தமிழில் மான்றலை என்ற பெயருண்டு. மேலும் வேறு பரிமாணத்தில் இந்த நட்சத்திர மண்டலத்தை காணும் போது வானத்தில் மூன்று தேங்காய் கண்களை போல தெரியும்.

மிருகசீரிடத்தின் அதிபதி செவ்வாய் ஆகும். சைவ மதத்தில் சிவபெருமான் கைகளில் காணப்படும் மான் தலை ஆயுதம் மிருகசீரிடம் வடிவம் ஆகும். மேலும் இறகை விரித்த கருடனின் இறக்கைகளை குறிக்கும் வடிவமும் மிருகசீரிடமே ஆகும்.

மிதுனம் என்பது காற்று ராசி. அங்கே திரிசடை பறக்க விட்டு நடனம் புரியும் நடராஜரின் சிகை கூட இந்த மிருகசீரிட வடிவமே என்கிறார் சான்றோர்கள். மான் என்ற மிருகத்தின் தலை வடிவத்தில் பிரம்மாவிற்கு ஒரு முகம் இருந்ததாகவும். அந்த முகத்துடன் சேர்த்து பிரம்மாவிற்கு ஐந்து முகம் இருந்ததாகவும் கந்த புராணம் கூறுகிறது. சிவபெருமானைப் போல தனக்கும் ஐந்து முகம் இருக்கிறது என்று செருக்கு கொண்டு இருந்த பிரம்மனின் ஐந்தாம் தலையான மான் வடிவ முகத்தை கொய்தார் சிவன். இதன் காரணமாகவே மிருகசீரிட வடிவம் மான் தலை என்றானது.

மிருகசீரிடம் நட்சத்திர நபர்கள் வணங்க வேண்டிய தெய்வம் அன்னபூரணி. பிரம்மாவின் மான் தலையை கொய்தபிறகு சிவபெருமானுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தலையே திருவோடாகி சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. அந்த திருவோடு அடிக்கடி பசியால் உணவை கேட்டுக்கொண்டே இருந்தது. அதன் பசியைப் போக்க திருவாதிரை நாயகனின் பரம மித்ர தாரையான மிருகசீரிடத்தில் அன்னபூரணி அவதாரம் எடுத்தார் பார்வதி தேவி.

திருவாதிரை நட்சத்திர நாயகன் கருடன்
கருடனும் மிருகசீரிட வடிவமும்

கருடன் என்பவர் மகா விஷ்ணுவின் வாகனம் என்று அனைவருக்கும் தெரியும். அதற்கான நட்சத்திர வடிவ காரணத்தை அறிவோம் வாருங்கள்.

கருடனின் நட்சத்திரம் திருவாதிரை. கருடன் தன் சிறகை விரித்து அகலப்படுத்தினால், நம் கண்களுக்குத் தெரிவது மான் கொம்புகளின் இணைந்த வடிவான மிருகசீரிடம். அனைத்து பெருமாள் கோயில்களும் இறக்கை விரித்தவாறே கருடன் இருப்பதைக் காணமுடியும். தனது தாயை அடிமைச் சங்கிலியில் இருந்து விடுவிக்க அமிர்தம் கொண்டு செல்ல வரும்போது, அமிர்தத்தைப் பாதுகாக்கும் உபேந்திரா என்ற விஷ்ணுவின் அவதாரத்துடன் சண்டை இடும் சூழல் கருடனுக்கு ஏற்படுகிறது.
அப்போது உபேந்திரா மீது கருணை கொண்டு “உனக்கு என்ன வரம் வேண்டும் என்று மகா விஷ்ணுவிடம் கேட்டவர் கருடன். அந்த வரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட மஹாவிஷ்ணு தனக்கு வாகனமாக இருக்க வேண்டும் என்ற வரத்தை கருடனிடம் இருந்து பெற்றார்.

திருமாலுக்கு உரிய நட்சத்திரம் திருவோணம். இந்த நட்சத்திரத்தின் சம்பத்து நட்சத்திரங்கள் அவிட்டம், மிருகசீரிடம் மற்றும் சித்திரை. எனவேதான் மகாவிஷ்ணு எப்போதும் தனது சம்பத்து நட்சத்திர வடிவான கருடனின் விரிந்த இரு சிறகுகளின் நடுவில் காட்சியளிக்கிறார்.

அஸ்தம், திருவோணம், ரோகிணி நட்சத்திர நபர்களுக்கு கருட வழிபாடு சம்பத்து தரும்.

திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திர நபர்களுக்கு கருட வழிபாடு பயம் போக்கும்.

விசாகம், பூரட்டாதி, புனர்பூசம் நட்சத்திர நபர்களுக்கு கருட வழிபாடு சிக்கலான தருணத்தில் சரியான வழிகாட்டும்.

மிருகசீரிடத்தில் உதித்தவர் குரு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள்

திரைப்பட நடன இயக்குநர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் அவர்கள் பிறந்த நட்சத்திரம் ரேவதி. இவரது நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வரும் ஆறாம் நட்சத்திரம் மிருகசீரிடம். குரு ராகவேந்திர சுவாமிகள் பிறந்த நட்சத்திரம் மிருகசீரிடம்.

லாரன்ஸ் அவர்களுக்கு சிறுவயதில் தலையில் கட்டி இருந்தது. அதனால் சிறுவயதில் சுறுசுறுப்பு குறைவாகவும் அதே சமயம் பள்ளிக்குச் செல்லவும் முடியாமல் இருந்தார். குரு ராகவேந்திர சுவாமிகளின் மகிமை அறிந்த லாரன்ஸ் அவர்களின் தாயார், மந்த்ராலய மஹான் குரு ராகவேந்திர சுவாமிகளின் ஜீவசமாதி சென்று வேண்டிக்கொண்டபின் அவருக்கு கட்டி குணமாகி நலம் பெற்றார் என்கிறார்கள்.

இவரது சாதக தாரை மிருகசீரிட நட்சத்திர மஹானின் அருளால் நலம் பெற்றார் என்று நட்சத்திர மகிமையை நிரூப்பிக்கிறது இந்தச் சம்பவம்.
குரு ராகவேந்திர சுவாமிகளின் பெருமை அறிந்த லாரன்ஸ் தன் பெயருடன் ராகவேந்திரரின் பெயரை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், குரு ராகவேந்திர சுவாமிகளின் பெயரில் கோயிலை அம்பத்தூரில் எழுப்பியுள்ளார்.

இன்றும் அம்பத்தூர் திருமுல்லைவாயில் என்ற இடத்தில் இவர் கட்டிய ராகவேந்திர சுவாமிகளின் கோயிலில் குரு ராகவேந்திர சுவாமிகளின் ஜென்ம நட்சத்திரமான மிருகசீரிடம் அன்று சிறப்பு பூஜை செய்து வருகிறார்.

அஸ்தம், திருவோணம், ரோகிணி நட்சத்திர நபர்களுக்கு குரு ராகவேந்திர ஸ்வாமிகளின் வழிபாடு சம்பத்து தரும்.

திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திர நபர்களுக்கு குரு ராகவேந்திர ஸ்வாமிகளின் வழிபாடு பயம் போக்கும்.

விசாகம், பூரட்டாதி, புனர்பூசம் நட்சத்திர நபர்களுக்கு குரு ராகவேந்திர ஸ்வாமிகளின் வழிபாடு என்பது சிக்கலான தருணத்தில் சரியான வழிகாட்டும்.

அடுத்த வாரம் திருவாதிரை நட்சத்திரம் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x