Published : 06 May 2021 05:45 PM
Last Updated : 06 May 2021 05:45 PM

மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள் - மே 6 முதல் 12ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (அ.சா) - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.

இந்த வாரம் சாமர்த்தியமாகப் பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள்.

பூர்வீகச் சொத்துகளில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும்.

உறவினர் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள். பெண்களுக்கு உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் உண்டாகும்.

மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தங்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். கலைத்துறையினருக்கு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வழிபட நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும்.
************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

ராசியில் குரு (அ.சா) - தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக அமைப்பு உள்ளது.

இந்த வாரம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். குருவின் இருப்பால் பண வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களைப் பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டுவிடுவார்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சினை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாகப் பணிகளை செய்து முடிப்பார்கள். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடையத் தேவையான உதவிகளை செய்வீர்கள்.

வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். பெண்களுக்கு மற்றவர்களிடம் கவனமாகப் பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடையத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து பெருமாளை வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
*****************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (அ.சா) என கிரக அமைப்பு உள்ளது.

இந்த வாரம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள்.

மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீகச் சொத்துகளில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரியங்கள் கைகூடும். மனக் கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x