Published : 29 Apr 2021 11:33 AM
Last Updated : 29 Apr 2021 11:33 AM

கடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள் - ஏப்ரல் 29 முதல் மே 5ம் தேதி வரை


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் குரு (அ.சா) - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - லாப ஸ்தானத்தில் புதன், ராகு - விரய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.

மே மாதம் 05ம் தேதி - புதன்கிழமை அன்று சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும்.

புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை. பொருட்களை கவனமாகப் பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும்.

ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம்.

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

பயணங்களின் போது உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாகப் படிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல் துறையினருக்கு சுணக்க நிலை மாறும்.

பரிகாரம்: அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.
*******************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் குரு (அ.சா) - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - தொழில் ஸ்தானத்தில் புதன், ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.

மே மாதம் 05ம் தேதி - புதன்கிழமை அன்று சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

இந்த வாரம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம்.

வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையைச் செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம்.

கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். பெண்களுக்கு எடுத்த காரியத்தைச் செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும்.

கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினர் லாபம் பெறுவார்கள். அரசியல்துறையினருக்கு மனோபலம் கூடும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சிவனை வணங்க காரியத் தடைகள் நீங்கும். மன அமைதி கிடைக்கும்.
******************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (அ.சா) - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.

மே மாதம் 05ம் தேதி - புதன்கிழமை அன்று சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

இந்த வாரம் வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனக்கஷ்டம் ஏற்படும்.

அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும்.

தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவுத் திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும்.

மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாகப் படிக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. அரசியல் துறையினர் நல்ல பெயர் வாங்குவீர்கள்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு செய்ய எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x