Published : 28 Apr 2021 10:48 AM
Last Updated : 28 Apr 2021 10:48 AM

மிதுன  ராசி அன்பர்களே! வழக்கில் வெற்றி; மதிப்பு கூடும்; தொழிலில் முன்னேற்றம்; மனோ தைரியம்; மே மாத பலன்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

நிதானத்தில் பெயர் பெற்ற மிதுன ராசி அன்பர்களே!

இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்தில் சுக்கிரன் மற்றும் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். ராசியை குரு பார்ப்பது உங்களுக்கு சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதுர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். மாத இறுதியில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

தொழில் ஸ்தானாதிபதி குரு ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார். அவரின் பார்வை பலத்தால் தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயர வழி பிறக்கும். விமர்சனக்களையும் தாண்டி முன்னேறுவார்கள். வேலைப்பளு காரணமாக வெளியில் தங்க நேரலாம்.

மாணவர்களுக்கு பாடங்களைக் கவனமாகப் படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.
உடல்நலத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். மன தைரியம் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். பதவி உயர்வுக்கு உரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற வேண்டிய காலகட்டமிது. பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது.

திருவாதிரை:
இந்த மாதம் வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடுவதையும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

புனர்பூசம்:
இந்த மாதம் உலக வாழ்க்கை யோக வாழ்க்கை இரண்டிலும் சரி சமமான எண்ணங்கள் உண்டாகும். அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். பாகப்பிரிவினை பிரச்சினைகளின்றி சுமுகமாக நடைபெறும். சகோதரர் மற்றும் குடும்ப பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு லாபங்களைச் சேர்ப்பார்கள்.

பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x