Published : 16 Apr 2021 02:53 PM
Last Updated : 16 Apr 2021 02:53 PM

தோஷங்கள்... பரிகாரங்கள்! - புதிய தொடர்

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே!

'இந்து தமிழ் திசை’ வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவன் என்பதில் பெருமகிழ்ச்சி எனக்கு. "ஜோதிடம் அறிவோம்" என்ற என்னுடைய முதல் தொடர், உங்களால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல் ’இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் "ஜோதிடம் அறிவோம் பாகம் 2" எழுதியதற்கும் ஆதரவு தந்தீர்கள்.

இதன் பிறகு ‘27 நட்சத்திரங்கள்... ஏ டூ இஸட் தகவல்கள்’ எனும் தொடரை மிக விரிவாகவும் ஏராளமான விஷயங்களைக் கொண்டும் எழுதியதற்கு எல்லையற்ற அன்பையும் பாராட்டையும் வழங்கினீர்கள். இப்போது மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன். உங்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். ஆமாம் நண்பர்களே! இந்தப் புதிய தொடர் மூலமாக உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமிதம் கொள்கிறேன்; பூரிப்பு அடைகிறேன். இந்தத் தொடரின் தலைப்பு... ‘தோஷங்கள்... பரிகாரங்கள்!’

’தோஷங்கள்... பரிகாரங்கள்....." என்ற தலைப்பில், ஜோதிடத் தகவல்களை விரிவாக சொல்ல இருக்கிறேன். முக்கியமாக, குறிப்பாக தோஷங்கள் குறித்தும் பரிகாரங்கள் தொடர்பாகவும் விளக்க இருக்கிறேன்.

தோஷங்கள் என்றதும் பலருக்கும் ஒருவித பயமும், கலக்கமும் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். அதேசமயம் எல்லா தோஷங்களுக்கும் பரிகாரங்களும் இருக்கின்றன என்பதுதான் ஜோதிட சாஸ்திரம் நமக்கு அருளியுள்ள ஆறுதல். எனவே, தோஷங்கள் குறித்துச் சொல்லுகிற அதேவேளையில் பரிகாரங்களையும் உங்களுக்குத் தர இருக்கிறேன்.

‘தோஷத்துக்கு பரிகாரம் சரி. அதுக்கு ஏகப்பட்ட செலவாகுமே’ என்று சிலர் நினைக்கலாம். கேட்கலாம். கவலையேபடாதீர்கள். மிக மிக எளிமையான பரிகாரங்கள்தான் சொல்லப் போகிறேன். உங்களுக்கு எந்தவிதமான செலவுகளும் இல்லாத மிக சொற்ப செலவில் செய்யக்கூடிய எளிமையான பரிகாரங்களை தரப் போகிறேன்.

பொதுவாகவே, தோஷங்கள் என்றாலே நம் எல்லோருக்கும் தெரிந்த தோஷங்கள்... செவ்வாய் தோஷம். அடுத்து ராகு கேது தோஷம். இவற்றைத் தவிர, வேறு தோஷங்களை நாம் பெரிதாக அறிந்திருக்கவில்லை. ஜாதகத்தில் இருக்கக் கூடிய சகல தோஷங்களையும் அவற்றுக்கான பரிகாரங்களையும் உங்களுக்கு இந்தத் தொடரின் மூலமாக வழங்க இருக்கிறேன்.

இனிய வாசக நண்பர்களே!

"ஏற்கெனவே இருக்கக்கூடிய இந்த இரண்டு தோஷங்களுக்கே பலவித பிரச்சினைகளை சந்திக்கிறோம். இன்னும் பலவித தோஷங்களை நீங்கள் சொல்வதால் மேலும் எங்களுக்கு நிம்மதி போய்விடுமா?’ என்று கேட்கலாம். என்ன செய்வது? நோய் கண்டறிய வேண்டும். பிறகு நோய் இருப்பது உறுதியானால் மருந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

தோஷங்களின் வகைகளையும் அதனால் உண்டாகக்கூடிய பாதிப்புகளையும் எடுத்துக் கூற இருக்கிறேன். அந்த பாதிப்புகள் உங்களுடைய வாழ்வில் இருக்குமானால் அந்த தோஷம் உங்கள் ஜாதகத்தில் இருப்பதை அறிந்து, அதற்கான பரிகாரங்களைச் செய்து தடைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கலாம். அதற்கு நான் தருகின்ற பரிகாரங்கள் அனைத்துமே மிக எளிமையானவை; அதேசமயம் மிக மிக பலத்தையும் நலத்தையும் கொடுக்கக் கூடியவை!

கடுமையான தோஷத்தை தரக்கூடிய செவ்வாய் தோஷத்திற்கே பரிகாரம் பத்து ரூபாயில் முடியும்போது, நான் குறிப்பிடும் மற்ற தோஷங்கள் எல்லாம் ஏறக்குறைய இதே அளவிலான செலவிலேயே பரிகாரங்களை செய்துகொள்ள முடியும் என உறுதிபடச் சொல்லிக் கொள்கிறேன்.

இப்படிப்பட்ட தோஷங்கள் இருப்பதால் உங்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய தடை, தாமதங்கள், பிரச்சினைகள், சிக்கல்கள் என எவையேனும் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான விஷயங்களை உங்களுக்குச் சொல்லுவதை ஒரு ஜோதிடரின் கடமையாக நினைக்கிறேன்.

எத்தனையோ ஜோதிடர்களிடம் பார்த்துவிட்டோம், நல்ல நேரம் நடக்கிறது என்கிறார்கள், நல்ல விஷயங்கள் உடனே நடக்கும் என்கிறார்கள், எதிர்பார்த்து போன காரியம் உடனடியாக நடக்கும் என்று சொல்கிறார்கள்.. ஆனால் எதுவும் நடைபெறுவதில்லை, நடைபெறுவது போல் வந்து கடைசிநேரத்தில் தடைபட்டு போகின்றது... இப்படியெல்லாம் பலவிதமான பிரச்சினைகளோடு இருப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

இந்தத் தொடரில் நான் குறிப்பிடக் கூடிய ஒவ்வொரு தோஷங்களையும் படித்து வாருங்கள். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு எந்த தோஷம் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். அந்த தோஷத்திற்கு உண்டான பரிகாரத்தை விவரிக்க உள்ளேன். அந்தப் பரிகாரங்களைச் செய்து உங்களுடைய பிரச்சினைகளை நிச்சயமாக போக்கிக்கொள்ள முடியும் என்பது உறுதி!

அடுத்த பதிவில் சந்திப்போம்.

- தெளிவோம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x