Published : 12 Apr 2021 11:09 AM
Last Updated : 12 Apr 2021 11:09 AM

தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: தனுசு ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)

ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல என்பது போல வாழ்க்கையில் துன்பங்கள் வந்தபோதும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்களே! கற்பனை வானில் சிறகடித்துப் பறக்கும் நீங்கள், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் கட்டிக் காப்பவர்கள். அமைதியை விரும்பி நீங்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் சாதிப்பவர்கள். சந்திரன் ராசிக்கு 5-வது இடத்தில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் சொத்து வழக்குகள், பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். குழந்தை இல்லையே என்ற கவலையுடன் காணப்பட்ட தம்பதியருக்கு வாரிசு உண்டாகும். பிள்ளைகளால் தொல்லைகள் தானே மிஞ்சியது. இனி அவர்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள். உயர்கல்வியில் வெற்றி பெற்று உங்களை தலைநிமிரச் செய்வார்கள்.

இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குரு மூன்றாம் வீட்டில் மறைந்திருப்பதால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுச் சிலரைக் கடிந்து கொள்வீர்கள். ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு இரண்டில் தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்ல விதத்தில் முடியும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருந்த நிலை மாறும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள்.

வருடப்பிறப்பு முதல் 20.3.2022 வரை கேதுபகவான் 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். ராகு ஆறாம் வீட்டில் நிற்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். 21.3.2022 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டிற்குள் வருவதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர்யோகம் உண்டு. மூத்த சகோதரர்கள் பாசமாக இருப்பார்கள். சொத்துச் சிக்கல்கள் பேச்சு வார்த்தை மூலம் சரியாகும். ராகு ஐந்தாம் வீட்டுக்குள் வருவதால் பிள்ளைகளால் வீண் அலைச்சலும், மன உளைச்சலும் வரக்கூடும். அவர்களின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். சொந்த பந்தங்களுடன் மோதல் போக்கு ஏற்படும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும்.

இந்தாண்டு முழுக்க சனி இரண்டில் அமர்ந்து ஏழரைச்சனியின் ஒருபகுதியான பாதச்சனியாக இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப்பாருங்கள். பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள். முரட்டுத்தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக செயல்படுங்கள். கண், காது வலி வந்து செல்லும். பல் ஈறு வலிக்கும். பூர்விகச் சொத்துப் பிரச்சினையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது.

ஆவணி மாதத்திலிருந்து பொருளாதார முன்னேற்றம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வசதி வாய்ப்புகள் பெருகும். என்றாலும் சகோதர வகையில் வீண் வாக்குவாதங்கள், மன உளைச்சல் வந்து போகும். பூர்விகச் சொத்து விவகாரங்களில் நிதானம் தேவை. தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். சண்டைக்கு வந்தவர்கள் சமாதானமாகச் செல்வார்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்.

புதிது புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து விற்பனை செய்யுங்கள். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபமுண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.வேலையில் உங்களைப் பற்றிய விமர்சனங்களையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் கடமையை செய்யுங்கள். உங்களுக்கு விருப்பமில்லாத இடத்துக்கு மாற்றப்படும் வாய்ப்பும் உண்டு. இந்தப் புத்தாண்டு ஒரு பக்கம் அலைச்சலையும், அவமானத்தையும் தந்தாலும் மறுபக்கம் உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதாக அமையும்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமையில் சிவாலயத்தில் அருள்பாலிக்கும் சூரிய பகவானை மஞ்சள்பொடி அபிஷேகம் செய்து வணங்குங்கள். நுங்கு தானமாகக் கொடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x