Published : 12 Apr 2021 11:09 AM
Last Updated : 12 Apr 2021 11:09 AM

தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: சிம்ம ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)

காய்த்த மரம் வளைந்து நிற்கும் கல்லடியும் படும் என்பதை அறிந்த நீங்கள், ஏச்சுப் பேச்சுக்கள் எத்தனை வந்தாலும் எடுத்தக் காரியத்தை முடிக்காமல் விடமாட்டீர்கள். தன்மானம் மிக்க நீங்கள், அதிகாரத்தில் இருப்பவர்களையும் தட்டிக்கேட்கத் தயங்கமாட்டீர்கள். விட்டுக் கொடுத்துப் போனவன் கெட்டுப் போனதில்லை என நம்புபவர்கள். சுக்கிரன் 9ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள்.

அடிக்கடி பழுதான வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதி உள்ள வீட்டுக்குக் குடிப்புகுவீர்கள். உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இந்த பிலவ வருடம் பிறப்பதால் மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். இந்தப் புத்தாண்டுத் தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் ஏழாம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு ஆறாம் இடத்தில் நின்று படபடப்பு, பணப்பற்றாக்குறை, விபத்து, குடும்பத்தில் பிரிவு என அலைக்கழிப்பார்.

சனி ஆறாம் வீட்டிலேயே தொடர்வதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். 20.3.2022 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால் வேலைச்சுமை, டென்ஷன் வரக்கூடும். கேது நான்காம் இடத்தில் நிற்பதால் தாழ்வு மனப்பான்மை, பகைமை வரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். 21.3.2022 முதல் ஒன்பதாம் இடத்துக்குள் ராகு நுழைவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கேது மூன்றாம் வீட்டில் நுழைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்விகச் சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.

சித்திரை, வைகாசி ஆவணி மாதங்களில் நினைத்தபடி திருமணத்தை முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. வாழ்க்கைத் துணை வழி உறவிர்களால் மன நிம்மதி உண்டு. வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்த மனக் கசப்பு நீங்கும். உங்களை முழுமையாகப் புரிந்துகொள்வர். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். சொந்த வீடு கட்டும் முயற்சிகளில் இறங்குவீர்கள். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். பால்ய நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொந்தபந்தங்கள் வலிய வந்து உறவாடுவார்கள். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். அரசியல் மற்றும் ஆன்மிகவாதிகளின் நட்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாகத் தடைப்பட்டுக்கொண்டிருந்த குலதெய்வக் கோயில் பயணத்தை மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கத்தாருடன் சுமுகமாக நட்புறவாடுவீர்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புதிய முதலீடுகளைச் செய்யுங்கள். வைகாசி, புரட்டாசி மாதங்களில் சொந்த இடத்தில் கடையை மாற்ற முயற்சி செய்வீர்கள். போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். ஊழியர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கலில் சுமுக நிலை காணப்படும். உத்தியோகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். உயரதிகாரிகள் வெளிப்படையாகவே உதவுவார்கள். உங்களின் நெடுநாள் கனவான சம்பள உயர்வு, பதவி உயர்வு வைகாசி, ஆவணி மாதங்களில் உண்டு. ஐப்பசி, மாசி மாதங்களில் வேறு நல்ல வாய்ப்புகள் வரும்.

இந்தப் புத்தாண்டு விரக்தியாக இருந்த உங்களை வெற்றிக் கனியை சுவைக்க வைப்பதுடன் அடுத்தடுத்து அதிரடி வளர்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

அருகிலிருக்கும் லட்சுமி நரசிம்மரை சனிக்கிழமையில் சென்று இளநீர் அபிஷேகம் செய்து வணங்குங்கள். நன்னாரி வேர் இட்ட தண்ணீரை தானமாகக் கொடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x