Published : 31 Mar 2021 05:32 PM
Last Updated : 31 Mar 2021 05:32 PM

ஸ்ரீராகவேந்திரர் - பஞ்சமுக அனுமர்; திருக்கச்சி நம்பிகள் - காஞ்சி வரதர்! உங்கள் நட்சத்திரங்கள்... வரம் அருளும் தெய்வங்கள் - 6 

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

கடந்த வாரம் வெளிவந்த சாதக தாரை குறித்த கட்டுரைக்கு ஏராளமான வாசகர்கள் தங்களது பாராட்டுதல்களைத் தெரிவித்திருந்தீர்கள். தாங்கள் அளித்த வரவேற்பிற்கு மனமார்ந்த நன்றி.

இப்போது, இந்த வாரத் தொடரில், பரம மித்ர தாரை பற்றிச் சொல்லுகிறேன்.

பரம மித்ர தாரை

பரம என்றால் நெருங்கிய என்று பொருள். மித்ர என்றால் நண்பர் என்று அர்த்தம். உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டே வந்தால் கிடைக்கும் 9, 18 மற்றும் 27 நட்சத்திரங்கள் முறையே ஜென்ம பரம மித்ர தாரை, அனு ஜென்ம பரம மித்ர தாரை மற்றும் திரி ஜென்ம பரம மித்ர தாரை எனப்படும். இந்த மூன்று தாரைகளுக்கு அதிபதிகளும் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக, ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் பூரட்டாதி என்றால், அதன் ஜென்ம/அனு ஜென்ம மற்றும் திரி ஜென்ம பரம மித்ர தாரைகள் முறையே திருவாதிரை, ஸ்வாதி மற்றும் சதயம் ஆகும். இந்த மூன்று நட்சத்திரங்களின் அதிபதி ராகு பகவான் என்பது குறிப்பிடத்தக்கது.

பூரட்டாதியின் பரம மித்ர தாரைகள்
ஜென்ம பரம மித்ர தாரை திருவாதிரை
அனு ஜென்ம பரம மித்ர தாரை ஸ்வாதி
திரி ஜென்ம பரம மித்ர தாரை சதயம்

பரம மித்ர தாரை என்பது அதி மித்ர தாரை என்றும் அழைக்கப்படுகிறது. உங்கள் உற்ற நண்பனாக செயல்படும் இந்த தாரை உங்களுக்கு வழிகாட்டும் பணியை செவ்வனே செய்கிறது.

நம்மை சுயமாக சிந்திக்கவைத்து நமது முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கும் செயலையும் இது ஊக்குவிக்கிறது. உங்களை பின்தொடர்ந்து வரும் நெருங்கிய நண்பன் போல செயல்பட்டு, நீங்கள் தலைகுப்புற விழும் சூழ்நிலை வந்தாலும் உங்களுக்காக ஓடிவந்து உங்களைத் தாங்கிப் பிடித்து உதவி செய்யும். சுப தாரைகளிலேயே பரம மித்ர தாரை சிறப்பு வாய்ந்தது.

பரம மித்ர தாரை தரும் பலன்கள்
⦁ உரிய நேரத்தில் உதவுவது
⦁ வழிகாட்டுவது
⦁ பின்தொடர்ந்து நம்மைக் காப்பது
⦁ முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கும்.

பரம மித்ர தாரை பற்றி விரிவாக அறிய இரண்டு புராண கால உதாரணங்களைப் பார்க்கலாம்.

திருக்கச்சி நம்பிகளும் வரதராஜ பெருமாளும்

பூவிருந்தவல்லி என்ற சிற்றூரில் திருக்கச்சி நம்பிகள் மாசி மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் அவதரித்தார். அங்கே பிரமாண்டமான மல்லிகைப்பூந்தோட்டம் அமைத்து அதன் நடுவே லட்சுமி தாயாரை அமரவைத்து பூஜை செய்து வந்தார். இதன் காரணமாகவே அந்த இடத்திற்கு புஷ்பவல்லி எனப் பெயர் அமைந்தது. இதுவே பூவிருந்தவல்லி என்று மருவியது.

பூவிருந்தவல்லியில் இருந்த திருக்கச்சி நம்பிகள், மல்லிகை மலர்களைத் தொடுத்து மாலையாக மாற்றி, அதிகாலையில் எழுந்து பூவிருந்தவல்லியில் இருந்து காஞ்சிபுரத்துக்கு நடந்தே சென்று அங்கிருக்கும் வரதராஜ பெருமாளை தரிசித்து வந்தார்.

காஞ்சியில் வீற்றிருக்கும் வரதராஜ பெருமாளுக்கு மாலை அணிவித்து வணங்கி மகிழும் வழக்கத்தை தினமும் செய்துவந்தார். இவ்வாறாக காஞ்சி வரதராஜ பெருமாளின் மீது அதீத பக்தியும் வாஞ்சையும் கொண்டவர் திருக்கச்சி நம்பிகள்.

மேலும் வரதராஜ பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கரியம் எனும் சாமரம் வீசும் பணியை மிகவும் விருப்பத்துடன் செய்து வந்தார் திருக்கச்சி நம்பிகள். அவ்வாறு சாமரம் வீசும்போது பெருமாளுடன் அளவளாவும் வரத்தைப் பெற்றிருந்தார். அதனால் ஆத்ம நண்பர்களிடம் பேசுவது போல் வரதராஜ பெருமாளிடம் பேசி வந்தார். வரதர் கூறிய அரிய விஷயங்களை, போதனைகளை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார்.

இப்படியாக பூவிருந்தவல்லியில் இருந்து காஞ்சிபுரத்துக்கு தினமும் நடந்து சென்று பூஜித்து வந்தார் திருக்கச்சி நம்பிகள். காலங்கள் ஓடின. வயோதிகம் காரணமாக பூவிருந்தவல்லியில் இருந்து காஞ்சி வரை நடந்து சென்று வரதராஜ பெருமாளைத் தரிசிப்பதற்கு முடியாமல் போனது. இதனால் மிகுந்த துயரத்துக்கு ஆளானார் திருக்கச்சி நம்பிகள். பெருமாளை நினைத்துக் கொண்டே இருந்தார். அவரைச் சென்று தரிசிக்க முடியவில்லையே என்று கண்ணீர் சிந்தினார்.

அப்போது திருக்கச்சி நம்பிகளின் கனவில் தோன்றினார் பெருமாள். ’அடுத்த நாள் சூரிய உதயத்தில் உன்னைக் காண வருகிறேன்’ என்று கூறினார். இதைக் கேட்டு அதிர்ந்து மகிழ்ந்தார் திருக்கச்சி நம்பிகள்.

மறுநாள்... அதிகாலையில் காஞ்சியில் இருப்பதைப் போலவே பூதேவி ஸ்ரீதேவியுடன் வரதராஜ பெருமாள் கோடி சூரியப் பிரகாசத்துடன் திருக்கச்சி நம்பிகளுக்கு திருக்காட்சி தந்தருளினார். மேலும் அவருக்காக அங்கேயே தங்கி அவருடைய சேவையை ஏற்றுக்கொண்டார் பெருமாள்.

மிருகசீரிடத்தின் பரம மித்ர தாரைகள் ரோஹிணி, ஹஸ்தம் மற்றும் திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள். வரதராஜ பெருமாளின் நட்சத்திரம் ஹஸ்தம். இதன் ஸ்தல விருட்சம் அத்தி மரம். அதனால் தான் அத்திமரத்தாலான வரதராஜ பெருமாள் காஞ்சியில் விசேஷம். ஆகவே மிருகசீரிடத்தில் பிறந்த திருக்கச்சி நம்பிகளுக்கு பரம மித்ர தரையாக வரும் ஹஸ்த நட்சத்திர வரதராஜ பெருமாள் உற்ற நண்பராக கிடைக்கப்பெற்றார்.

குரு ராகவேந்திர ஸ்வாமிகளும் பஞ்சமுக ஆஞ்சநேயரும்

பங்குனி மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர் குரு ராகவேந்திர ஸ்வாமிகள். இவரது இயற்பெயர் வேங்கடநாதன். மாத்வ மத கோட்பாடுகளின்படி இவர் பிரகாலதனின் மறுபிறவி என்கிறது புராணம். இவர்மாத்வ மத குருவாக பொறுப்பேற்றபின்னர், பல இடங்களுக்கு தீர்த்தயாத்திரை மேற்கொண்டார்.

அப்போது மாஞ்சால கிராமம் எனும் ஊரில் தங்கினார். அங்கிருந்த துங்கபத்திரை நதியின் மறுகரை வரை நீந்திச் சென்று அங்கிருந்த பாறையில் அமர்ந்து தியானம் செய்தார். இப்படியாக பெருமாள் வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஸ்ரீராகவேந்திரர்.

அவ்வாறு வழிபாடு செய்யும்போது, ஒருநாள்... பஞ்சமுக ஆஞ்சநேயர் ராகவேந்திர சுவாமிக்கு திருக்காட்சி தந்தருளினார். அப்போது, ஜீவ சமாதி அடையும் தினத்தைத் தெரிவித்தார். பஞ்சமுக ஆஞ்சநேயர் காட்சி கொடுத்த இடம் பஞ்சமுகி என்று அழைக்கப்படுகிறது.

பஞ்சமுக ஆஞ்சநேயரின் அறிவுரைப்படி ஜீவ சமாதிக்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தன்னுடைய சீடர்களைப் பணித்தார் ராகவேந்திரர்.
மேலும் அவரது ஜீவ சமாதியின் நேர் எதிரே பறக்கும் நிலையில் இருக்கும் ஆஞ்சநேய ஸ்வாமிகளின் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்யும்படியும் சொன்னார். இன்றைக்கும் மந்திராலயத்தில் பறக்கும் நிலையில் இருக்கும் ஆஞ்சநேயரின் திருவுருவத்தை ஜீவ சமாதியின் எதிரே தரிசிக்கலாம்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் பறக்கும் நிலையில் இருக்கும் ஆஞ்சநேயர் வாயு வடிவமாகிறார். வாயுவை அதி தேவதையாக கொண்ட நட்சத்திரம் ஸ்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வாதி நட்சத்திரம் ராகவேந்திர ஸ்வாமிகளின் ஜென்ம நட்சத்திரமான மிருக சீரிட நட்சத்திரத்திற்கு பரம மித்ர தாரை என்பதை அறியலாம்.

குரு ராகவேந்திர ஸ்வாமிகள், தான் ஜீவ சமாதி அடையும் தருணம் பற்றிய தகவலை பஞ்சமுக ஆஞ்சநேயர் மூலம் கிடைக்கப் பெற்றார் என்று விவரிக்கிறது புராணம்.

அடுத்த அத்தியாயத்தில், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான சுப தாரைகள் பற்றிய விளக்கங்களை விரிவாகவே பார்க்கலாம்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x