Published : 25 Mar 2021 10:27 AM
Last Updated : 25 Mar 2021 10:27 AM

மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள்; மார்ச் 25 முதல் 31ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி - லாபஸ்தானத்தில் புதன் - விரய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

25ம் தேதி புத பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் புதன் விரய ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார். இதன் மூலம் நன்மையான பலன்களைப் பெறப் போகிறீர்கள்.

எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாகப் பழகுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பொறுப்புகளை கவனமாகச் செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள், ஆயுதங்களைக் கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதும் செயல்படுவதும் அவசியம்.

பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். கலைத்துறையினருக்கு மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
அரசியல்வாதிகளுக்கு சுபச்செலவு உண்டாகலாம். மாணவர்களுக்கு குறிப்பாக உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்

பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.
*******************
ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், ராகு - சப்தம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

25ம் தேதி புத பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் லாபஸ்தானத்தில் உச்சமாக இருக்கிறார்.

அவரின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் விழுகிறது. கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும்.

மனதில் துணிச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும்.

வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். அரசியல்வாதிகள் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை பூஜித்து வாருங்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
****************

மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - விரய ராசியில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

25ம் தேதி ராசிநாதன் புத பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசிநாதன் புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை.

உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் வேகம் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும்.

அரசியல்வாதிகள் எந்தச் சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு மிகுந்த அதிர்ஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும். காரியத் தடை, தாமதம் உண்டாகலாம்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வாருங்கள். எல்லாப் பிரச்சினைகளும் தீரும். செல்வச் செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x