Published : 29 Dec 2020 12:45 PM
Last Updated : 29 Dec 2020 12:45 PM

ஜாதகத்தில் மாற்றமும் ஏற்றமும் நிச்சயம்! மனைவியை நேசிக்கணும்; பெற்றோரை ஆதரிக்கணும்; குழந்தைகளை சரியாக வளர்க்கணும்; பிறருக்கு உதவணும்; 27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 104

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே!

’27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள்’ எனும் இந்தத் தொடர், இப்போது 104வது அத்தியாயத்தை அடைந்துள்ளது. இது 104வது அத்தியாயம். ‘இந்து தமிழ் திசை’யின் இனிய வாசகர்களான உங்களின் அன்பும் ஆதரவும் பூரணமாகக் கிடைத்த நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோ... 2021 என்னும் புத்தாண்டு பிறக்கிறது. உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த புத்தாண்டில் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும். சுகபோக வாழ்வு உங்களுக்கு அமைய வேண்டும். உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை... தம்பதி ஒற்றுமை, சகோதர ஒற்றுமை, சுற்றத்தார் ஒற்றுமை என உறவுகள் பலப்பட வேண்டும் என்றும் தொழில், வியாபாரம், உத்தியோகம் சிறக்க வேண்டும், செழிக்கவேண்டும் என்றும் நோய்கள் அனைத்தும் நீங்கி, ஆரோக்கியம் பெருக வேண்டும் என்றும் உங்கள் எண்ணங்கள் எல்லாமே நிறைவேற வேண்டும் என்றும் அழகன் முருகப்பெருமானை வணங்கிப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

அன்பு வாசகர்களே. நட்சத்திர தகவல்களாக ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் இந்தத் தொடரில் வழங்கியதில் மகிழ்கிறேன். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குணநலன் முதல் தொழில், உத்தியோகம், வியாபார வாய்ப்புகள், வாழ்க்கைத்துணை, நல்ல நண்பர்கள், ஆலயங்கள், பரிகார தலங்கள், நட்சத்திர மரம், பறவை, தானியங்கள், விலங்குகள், அதிர்ஷ்ட திசைகள் வரை எல்லா தகவல்களையும் இந்தத் தொடரில் உங்களுக்கு முழுமையாகவே வழங்கியிருக்கிறேன். அவை மட்டுமல்லாமல் ஒவ்வொரு நட்சத்திர பாதங்களுக்கும் தனித்தனியாக பலன்களையும், குணங்களையும், மற்ற நட்சத்திரத்துடன் சேரும் போது இணைகிற பலங்களையும் பலன்களையும் சொன்னேன்.

அதாவது, உங்கள் நட்சத்திரத்திற்கு நன்மைகளையும், யோகங்களையும் தரக்கூடிய தாராபலம் என்னும் நன்மை தரக்கூடிய நட்சத்திர பட்டியலையும் இந்தத் தொடரில் பார்த்தோம்.

இந்தத் தொடரில் ஒவ்வொரு தகவல்களும் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான அத்தனை நன்மைகளையும் தரக்கூடியதாகவே இருக்கும். உங்களின் சிரமங்களை தவிர்க்க வழி வகைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

தொடரின் ஆரம்பத்தில் கூறியது போல, ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பது அந்த ஜாதகரின் பிறப்பு பற்றிய விபரங்களையும், அவருடைய எதிர்காலத்தையும் சொல்லக்கூடியது. ராசி என்பது வாழும் காலத்தில் எதையெல்லாம் அனுபவிப்பார் என்பதை சொல்லக்கூடியது, நட்சத்திரம் என்பது உங்கள் பிறப்பின் நோக்கம் என்ன? அது எப்படி செயல்படும் ? எந்த வகையில் உங்களை வழிநடத்தும்? உங்களுடைய செல்வாக்கு என்ன? குடும்ப நிலை என்னா? மணவாழ்வின் பயணம் எப்படியானது? இறுதிக்காலம் எப்படிப்பட்டது? அடுத்த ஜென்மத்தில் பிறப்பின் சிறப்பு என்ன? அடுத்த ஜென்மம் என்று இருக்குமா? என்பவற்றையெல்லாம் மிகத் தெளிவாக வழங்கியிருக்கிறேன். அதனால்தான் நட்சத்திர பலன்கள் என்று கூறாமல் நட்சத்திர தகவல்கள் என்ற தலைப்பில் உங்களை சந்தித்தேன்.

இதில் தரப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் ஜோதிடத்தில் ஜாம்பவான்களாக இருந்த ஞானிகள், சித்தர்கள் தந்தவையே! எனவே அத்தனை குருமார்களையும் இந்த தருணத்தில் வணங்குகிறேன். அவர்கள் வழங்கியதை, உங்களுக்குப் புரியும் வகையில் எளிமைப்படுத்தி, உதாரணங்களும் சேர்த்துக் கொடுத்தது மட்டுமே என்னுடைய பணி! ஜோதிட ஞானிகளுக்கு நான் செய்த சிறு கைங்கர்யம்.

நட்சத்திர தகவல்கள் பதிவில் தரப்பட்டிருக்கும் பறவைகள், விலங்குகள், மரங்கள் போன்றவற்றை பராமரியுங்கள். அல்லது பார்க்கும்படி படங்களை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் உங்கள் சந்ததியினர் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். உங்கள் நட்சத்திரத்திற்கு தரப்பட்டிருக்கும் ஆலயங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சென்று வாருங்கள். துன்பங்கள் தீர்ந்து இன்பங்கள் நிறைந்திருக்கும். குறிப்பாக, நட்சத்திரங்களுக்கு தரப்பட்டிருக்கும் ஆலயங்களுக்கும் தவறாமல் சென்று தரிசித்து வாருங்கள். நன்மைகளும் நல்ல மாற்றங்களும் நிகழ்வதை உணர்வீர்கள்.

இந்தத் தொடரில் பல குறிப்பிடத்தக்க அம்சங்கள்... குறிப்பாக மூலம் நட்சத்திரம் ஆணோ பெண்ணோ எந்த புரிதலும் இல்லாமல் வெறும் செவி வழிச் செய்தியை வைத்து ஒதுக்கி வந்த சமூகத்திற்கு, எனது பதிவில் தந்த விளக்கத்தை ஏற்று ஆயிரக்கணக்கான வாசகர்கள் நன்றி கலந்த ஆனந்தத்தை தெரிவித்தார்கள்.! அப்படியான வாசக அன்பர்களுக்கு புரிதலை ஏற்படுத்தியதில் நிறைவு ததும்பி இருக்கிறது மனதுள்!

இனிய வாசகர்களே! இன்னும் சில பொதுவான தகவல்கள்..!

நீங்கள் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் உங்கள் ராசியின் பஞ்சபூத தத்துவத்தின்படி இறைவனை வணங்கினால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். உங்கள் நண்பர் ஹோமம் வளர்த்து பூஜை செய்தால்.., நீங்களும் ஹோமம் வளர்த்து பூஜை செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல..!

இதோ இந்த தகவல்களின் படி இறைவனை வணங்கினாலேயே உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்..!

மேஷம் - சிம்மம் - தனுசு முதலான ராசிக்காரர்கள் ஆலயங்களில் விளக்கேற்றி வழிபடுவது நன்மைகளைத் தரும். ஹோமம் வளர்த்து வணங்குவது, யாகங்களில் கலந்து கொள்வது, கும்பாபிஷேக யாகங்களுக்கு உதவுவது முதலானவற்றைச் செய்யலாம்.

ரிஷபம் - கன்னி - மகரம் முதலான ராசிக்காரர்கள் மரங்கள் நடுவது, மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பது, ராசிக்கல் மோதிரம் அணிவது, ஆலய புனரமைப்புப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வது அல்லது ஆலயங்களுக்கும் வறியவர்களுக்கும் பொருளாதார உதவிகள் செய்வது, ஏரி குளம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது அல்லது உங்களின் பங்களிப்பு இருக்கும்படியாக உதவுவது போன்றவற்றைச் செய்து வந்தாலே எண்ணற்ற நன்மைகளைப் பெறமுடியும்.

மிதுனம் - துலாம் - கும்பம் முதலான ராசிக்காரர்கள், இறைவனின் திருநாமங்களை உச்சரிப்பது, மந்திரங்கள் சொல்வது, ஆலயங்களில் அர்ச்சனை செய்து கொள்வது, ஆலயங்கள். மற்றும் கல்வி கூடங்களுக்கு மின்விசிறிகள் முதலானவற்றை வழங்குவது, கோடை காலத்தில் பனை விசிறிகள் வழங்குவது போன்றவைகளை செய்தாலே சிறப்பான பலன்களை பெறமுடியும்.

கடகம் - விருச்சிகம் - மீனம் முதலான ராசிக்காரர்கள் இறைவனுக்கு அபிஷேகப் பொருட்கள் வாங்கித் தருவது, அதாவது விளக்கேற்ற எண்ணெய், பால், இளநீர், திரவியப்பொடி, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை வழங்குவது, ஆலய திருக்குளத்தை பராமரிப்பது, பராமரிக்க உதவுவது, ஏரி குளம் தூர்வார உதவுவது, கோடையில் தண்ணீர்ப் பந்தல் அமைப்பது, நீர்மோர் தருவது போன்ற காரியங்களை செய்து வந்தால் எல்லா நன்மைகளும் உங்கள் இல்லம் தேடிவரும்.

பொதுவாக எல்லா ராசிக்காரர்களுக்கும் ஒரு விஷயம்... அன்னதானமும், ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவுவதும் உங்கள் பரம்பரையையே காப்பாற்றும் என்பது உறுதி!

ஒருநாளில் நீங்கள் செய்யும் செலவுகளை எழுதி பாருங்கள், அதில் வீண் செலவுகள் எவ்வளவு என பாருங்கள். அந்தப் பணத்தில் ஒருவேளை உணவை பசித்த உயிருக்கு வழங்குங்கள். அதேபோல் சக மனிதர்களுக்கு மட்டுமின்றி வாயில்லா ஜீவன்களுக்கும் உணவு வழங்கி வாருங்கள். இந்த தர்ம காரியங்கள், உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் வாரிசுகளுக்கும் புண்ணியமாகச் சேர்ந்து அவர்களையும் சுகபோகமாக வாழ வைக்கும் என்பது உறுதி.

உங்கள் பிறந்த நாளை ஆங்கிலத் தேதியின்படி கொண்டாடினாலும், உங்கள் நட்சத்திர பிறந்த நாளை (Star birthday) மறக்காமல் கொண்டாடுங்கள். அவசியம் கொண்டாடுங்கள். அந்த தினத்தில் ஆலய வழிபாடு, தானதர்மங்கள் செய்ய மறக்காதீர்கள். நட்சத்திரப் பிறந்த நாளே உண்மையான பிறந்தநாள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

வருடம் தவறாமல், குலதெய்வ வழிபாடு செய்ய மறக்காதீர்கள். உங்களின் ஒவ்வொரு நிகழ்வையும் உங்களின் குடும்பத்தின் ஒவ்வொரு விசேஷத்தையும் கஷ்டத்தையும் குலதெய்வத்திடம் சொல்லி முறையிடுங்கள். அதில் எந்தக் குறையிருந்தாலும் உங்கள் குலதெய்வம் அதை நிச்சயமாக சரிசெய்து தரும் என்பது சத்தியம்!

வாழ்க்கைத்துணையின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். காரணம்..? உங்கள் ராசிக்கு ஏழாமிடமே உங்கள் வாழ்க்கைத்துணையின் செயல்படும் இடம். அது கணவனாக இருந்தாலும் சரி... மனைவியாக இருந்தாலும் சரி! அவர்களின் கருத்து எதிர் கருத்தாகத்தான் இருக்கும். ஆனால் அதில் அர்த்தம் இருக்கும். குறிப்பாக மனைவியின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். வெற்றி பெற்ற மனிதர்கள் மனைவியின் ஆலோசனையாலும் வழிகாட்டுதலாலும் சாதித்தார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளின் ஆர்வத்திற்கும், விருப்பத்திற்கும் தடை போடாதீர்கள். அவர்கள் உங்கள் வாரிசு மட்டுமல்ல.. அவர்கள் தான் உங்கள் முன்னோர்கள் என்பதை உணருங்கள். உங்கள் தந்தைக்கு, தாத்தாவுக்கு தரும் மரியாதையை உங்கள் குழந்தைகளுக்கும் வழங்குங்கள். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடம் மேலும் வலுப்பெறும். சந்ததி தழைக்கும்.

வயதான பெற்றோரை உங்கள் குழந்தையை விட அதிகம் பராமரியுங்கள். அது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தை பலமாக்கும். செல்வவளம், சமூகத்தில் மதிப்பு மரியாதை, புகழ் முதலானவற்றை செழிக்கச் செய்யும். சந்ததி வாழையடி வாழையாக வளரும். பெற்றோரை உதாசீனம் செய்தவர்களுக்கு சந்ததி தொடர்வதில்லை. அதாவது ஆண் வாரிசு இல்லாமல் போகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

எல்லோரிடமும் உண்மையாக இருங்கள். அதிலும் நண்பர்களிடம் உண்மையாக இருங்கள். உங்கள் நண்பர் பொய்யாக, கபட குணங்களுடன் இருந்தாலும் கூட... நீங்கள் உண்மையாக இருங்கள். உங்கள் உண்மையே உங்களின் ஆபத்து காலத்தில் உங்களைக் காப்பாற்றும். மேலும் பதினொராமிடம் வலுப்பெற்று ஆதாயங்கள் அதிகமாகும்.

எந்தச் சூழ்நிலையிலும் இறை வழிபாட்டை மறக்காதீர்கள். ஆன்மிக யாத்திரைகளை சந்தர்ப்பம் கிடைக்கும் மேற்கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய 12ஆம் இடம் பலம் பெறுவது மட்டுமல்லாமல் உங்களுக்கு ஞானம் கிடைக்கும். எதிர்காலத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய சக்தி கிடைக்கும். கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போய் இன்பங்கள் மட்டுமே நிலைத்திருக்கும் என்பதை மறக்காதீர்கள்!

அன்பார்ந்த வாசகர்களே!
இந்த 104 பதிவுடன் இந்தத் தொடர் நிறைவுறுகிறது. என்னோடு பயணித்த உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ’இந்து தமிழ் திசை’ குழுமத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

என்னுடைய ஜோதிட குரு யோகராம் சங்கர் அவர்களுக்கும், வாழ்வியல் வழிகாட்டியாக வழி நடத்தும் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கும் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

இன்னொரு தருணத்தில், வேறொரு தலைப்பில், ஜோதிடத்தின் மேலும் சுவாரஸ்யமான விஷயங்களுடன் மீண்டும் சந்திக்கிறேன்.

தொடர்புக்கு :

akshayajothidam@gmail.com

78240 44223, 98841 60779

- நிறைவுற்றது
************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x