Published : 24 Dec 2020 11:04 AM
Last Updated : 24 Dec 2020 11:04 AM

மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்;  டிசம்பர் 24  முதல் டிசம்பர் 30ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - தொழில் ஸ்தானத்தில் குரு என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

26ம் தேதி பின்னிரவு 27ம் தேதி முன்னிரவு சனி பகவான் உங்களுடைய தொழில் ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார்.

பலன்:

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் ஆட்சி சஞ்சாரத்தால் காரிய அனுகூலம் உண்டாகும்.

எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.

மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சினைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன்கள் கிடைக்கப் பெறலாம். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நன்மையைத் தரும். கணவன் மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும்.

பெண்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றப் பாடுபடுவீர்கள். கலைத்துறையினர் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் கோபத்தைத் தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
திசைகள்: கிழக்கு, வடக்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: விநாயகருக்கு தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். மனக் கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.
************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்):

கிரகநிலை:

ராசியில் ராகு - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு - விரய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

26ம் தேதி பின்னிரவு 27ம் தேதி முன்னிரவு சனி பகவான் உங்களுடைய பாக்கிய ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார்.

பலன்:

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் மற்றும் குருவின் சஞ்சாரம் அனுகூலத்தைக் கொடுக்கும்.

மற்றவர்களுடன் வீண் பகை உண்டாகலாம். அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தனப் போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளைப் பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். சுபச்செலவும் கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணிச் சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது.

விபரீதமான ஆசைகள் ஏற்படலாம். பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் வீண் செலவைக் குறைப்பது நல்லது.

மாணவர்களுக்கு போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். சக மாணவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்..

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி
திசைகள்: மேற்கு, வ்டமேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 6
பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வழிபட்டு வாருங்கள். கடன் பிரச்சினை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.
**********************

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - சப்தம ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - விரய ஸ்தானத்தில் ராகு என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

26ம் தேதி பின்னிரவு 27ம் தேதி முன்னிரவு சனி பகவான் உங்களுடைய அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார்.

பலன்:

இந்த வாரம் செலவு அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.

அடுத்தவருக்கு உதவப்போய் வீண் பிரச்சினையில் சிக்கிக் கொள்ள நேரலாம். புதிய நட்பு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்படும். தொழில் தொடர் பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது வியாபார வெற்றிக்கு உதவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பெண்கள் எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். கலைத்துறையினர் செலவுகளைக் குறைக்க திட்டமிடுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு கவுரவம் உயரும்.

மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தனப் போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களைப் படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும்..

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன்
திசைகள்: வடக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: நடராஜருக்கு தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். புத்தி சாதுர்யத்தை தரும். சிக்கலான பிரச்சினைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.
***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x