Published : 25 Oct 2020 08:56 PM
Last Updated : 25 Oct 2020 08:56 PM

குருப்பெயர்ச்சி பலன்கள்; மகர ராசி அன்பர்களே! இனி, கெடுதல் இல்லை; கடன் பிரச்சினை தீரும்; அடகு நகைகளை மீட்பீர்கள்; வியாபாரத்தில் லாபம்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடித்து சாதனை படைக்கும் மகர ராசி வாசகர்களே.

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்று பார்க்கலாம்.

இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு வருகிறார். ராசியில் குருபகவான் வரும்போது இடமாற்றம் ஏற்படும் என்பதும், அலைச்சலை அதிகப்படுத்தும் என்பதும் ஜோதிட விதி.

ஆனால், இந்த விதி உங்களுடைய ராசிக்கு ஒத்துவராது. நீங்கள் விதிவிலக்குப் பெற்றவர்கள். காரணம்... உங்கள் ராசியில்தான் குரு பகவான் நீசம் அடைகிறார். எனவே உங்கள் ஜென்ம ராசியில் வரும் குருபகவான் தன் சுய பலத்தை இழப்பதால், உங்களுக்கு ஜென்ம குரு என்ன தர வேண்டுமோ அந்த பலன்களை அவரால் தர முடியாமல் போகும்.

மேலும் உங்கள் ராசியிலேயே இப்போது உங்கள் ராசிநாதன் சனிபகவான் இருப்பதும் சிறப்பான நன்மைகளையும் பலன்களையும் தரும். "குரு கொடுப்பதை சனி தடுப்பார், சனி கொடுப்பின் எவர் தடுப்பார்' என்பது ஜோதிடப் பழமொழி. இப்போது குரு பகவானும், சனி பகவானும் சேர்ந்து உங்கள் வீட்டில் இருப்பதால் சனி பகவானை மீறி குரு பகவான் எந்த விதமான கெடுதலையும் செய்ய மாட்டார் என்பதை முழுமையாக உணருங்கள்.

எதிர்பாராத செலவுகளும், வீண் விரயங்களும், பொருளாதாரத்தில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வந்திருப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் என்றால் திருமணம் உள்ளிட்ட சுப காரிய விசேஷங்கள், வீடு வாங்குதல், வீடு கட்டுதல் போன்ற நிகழ்வுகளும் நடந்திருக்கும். ஆனாலும் சற்றும் எதிர்பாராத வீண் செலவுகளும் ஏற்பட்டிருக்கும். இனி வீண் விரயங்கள் என்பது இருக்காது. அநாவசியச் செலவுகள் என்பது இருக்காது. பராமரிப்புச் செலவுகள் என்பது அறவே இருக்காது. எனவே உங்களுடைய பொருளாதாரம் உயரும். சேமிப்பு அதிகமாகும்.

நீண்ட நாளாக திட்டம் போட்டு வைத்திருந்த பல விதமான யோசனைகளையும் இப்போது செயல்படுத்தும் காலம் வந்துவிட்டது! உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் முழுமையான வெற்றியைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குழந்தைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் என்பதே இனி இருக்காது.

வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் முழுமையாக விலகும். மீண்டும் இயல்பான சுறுசுறுப்பான நிலைக்கு வருவார்கள். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து சுமுகமாகத் தீரும். மனவருத்தம் இல்லாதபடி அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய பாகப்பிரிவினையாக இருக்கும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நடக்கும். திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். இரண்டாவது குழந்தை பாக்கியத்திற்காக நீண்டநாளாக காத்திருந்தவர்களுக்கு இப்போது இரண்டாவது குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முழுமையாக முடிவுக்கு வரும். அடகு வைத்த பொருட்களை திருப்புவதற்கான வாய்ப்புகள் உண்டு. பயணங்கள் அதிகமாக ஏற்படும். பயணங்கள் மூலமாக ஆதாயமும் உண்டாகும்.

அலுவலகத்தில் இதுவரை இருந்துவந்த அதிகப்படியான உழைப்பு, உங்களுடைய திறமைகள் அனைத்தும் சரிவர பயன்பட்டிருக்காது. இனி உங்கள் திறமைகள் முழுமையாக அனைவருக்கும் பயன்படும்படியாக இருக்கும். உங்கள் மீதான மதிப்பு மரியாதை உயரும். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும். இதுவரை வேலைக்கு சென்றவர்கள் கூட இப்போது வேலையை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். அந்த முயற்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வம் உடையவர்கள் இப்போது மிகச் சரியான நேரம் என்பதால் தாராளமாகத் தொழில் தொடங்கலாம்.

ஏற்கெனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இதுவரை ஏற்பட்டிருந்த அநாவசியச் செலவுகள், பராமரிப்புச் செலவுகள் இனி இருக்காது. ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உற்பத்தியாகும் பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும். வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து தொழில் புரியும் வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக இருக்கும். இதுவரை முடங்கிக்கிடந்த அனைத்து விஷயங்களும் இனி விறுவிறுப்பாக மாறும்.

வியாபாரிகள் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபத்தை கிடைக்கப்பெறுவார்கள். உணவுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் இப்போது புதிய கிளைகளை ஆரம்பிப்பது அல்லது ஒவ்வொரு மாவட்டம் தோறும் கிளைகளை ஆரம்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு குறைந்த விலையில் நிலங்களை வாங்கிப் போடுவது நடக்கும். ஏற்கெனவே பிரித்து விற்பனை செய்ய வைத்திருந்த மனைகள் அனைத்தும் இப்போது விறுவிறுப்பாக விற்பனையாகும்.

இயந்திரத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள், ஜேசிபி போன்ற இயந்திரங்களை வைத்து தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முதலானோருக்கு இப்போது மிகப் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று தொழில் வளர்ச்சி சிறப்பான முன்னேற்றத்தைக் காணும்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். முக்கியமான செய்திகளில் உங்களுடைய பங்களிப்பு சிறப்பாக இருந்து உங்களுக்கு புகழ் வெளிச்சத்தைக் கொடுக்கும்..

அரசியலில் இருப்பவர்களுக்கு இதுவரை ஏற்பட்டிருந்த காத்திருப்புக்கும் செலவுகளுக்கும் சேர்த்து மொத்தமாக ஒரு மிகப் பெரிய பதவி காத்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப் படுகின்ற பதவிகளில் மிக எளிதான வெற்றியைக் காண்பீர்கள்.

பெண்களுக்கு அற்புதமான பலன்கள் நடைபெறும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் உண்டாகும். தந்தை வழி சொத்துகள் சேரும். சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது எளிதாக நிறைவேறும். சகோதரர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்யும் முயற்சியில் ஈடுபட்டாலும் வெற்றி காண முடியும். உங்களுடைய தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தியாகும். மன மகிழ்ச்சிக்கு குறை இருக்காது.

மாணவர்களுக்கு கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய கல்வி விரும்பியபடியே கிடைக்கும். கல்விக்காக தேவையான உதவிகள் கிடைக்கும். ஆசிரியர்களும் கல்வியில் சிறந்த மாணவர்களும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.

கலைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் ஏற்கெனவே பாதியில் நின்ற பணிகள் அனைத்தும் இப்போது மீண்டும் தொடரும். உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் இப்போது கிடைக்கும்.

பொதுவாக மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் அதிகம் நடந்தாலும் அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஒரு சில விஷயங்களை முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துக் கொண்டால் வீண் அலைச்சலைத் தவிர்க்கலாம். திட்டமிடுதல் என்பது மிக மிக முக்கியம். அலைச்சல் அதிகரிப்பதால் உடல் சோர்வு ஏற்படும். உடல் சோர்வு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே உணவு விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். இரவில் அதிக நேரம் விழித்திருக்கும் வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நல்ல உறக்கத்தைப் பெறவேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீ காளத்தீஸ்வரர், ஸ்ரீகாளகஸ்தி

ஆதரவற்ற மற்றும் வயதானவர்களுக்கு உணவு அளிப்பது, அவர்களுடைய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவது, மருத்துவ வசதிகள் செய்து தருவது போன்றவை செய்து வந்தால் அற்புதமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
*************.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x